தியாகத்தால் புடம் போடப்பட்ட; சுதந்திர வேள்வியில் சமரசமில்லா களம் கண்ட கம்யூனிஸ்ட் இயக்கம், நாடு சுதந்திரம் அடைந்தவுடன், 1948-ல் முதலாளித்துவ - நிலபிரபுத்துவ வர்க்க ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டது. அன்றைய தமிழகத்தின் சிறைகளில் சேலம் சிறை கடும் காவல் அரண் கொண்டது. 1862-ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த சிறை சுமார் 113 ஏக்கரில் பரந்து விரிந்து கிடந்தது. 1432-க்கும் மேற்பட்ட தனி அறைகள் கொண்ட மிகப்பெரிய சிறை. இந்த சிறைக்கு ஆலங்கோட்டை சிறை என்றும் ‘‘குரங்குக்குல்லா ஜெயில்’’ என்ற பெயரும் உண்டு. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட 1948-ல் இந்த சேலம் மத்திய சிறையில் தான் தமிழகம், மலபார், கேரளா, ஆந்திராவைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட தோழர்களை அடைத்து வைத்திருந்தனர். அந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆறு மாதத்தி லிருந்து 20 வருடம் வரை தண்டனை உள்ளாக்கப் பட்ட அரசியல் கைதிகளாக சிறையில் இருந்த னர். இவர்கள் அனைவரையும் ‘சி’ வகுப்பு கைதிகளாக சிறை நிர்வாகம் நடத்தி வந்தது. அரசியல் கைதிகளாக நடத்தாமல் கிரிமினல் குற்றவாளிகளைப் போல சிறை நிர்வாகம் கொடுமை செய்தது. இதனால், கம்யூ னிஸ்டுகள் சிறைக்குள்ளும் போராட்டத்திற்கு தள்ளப்பட்டார்கள். ஏற்கனவே நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையை நீக்க வேண்டும் எனச் சொல்லி நாடு முழுவதும் சமாதான ஊர்வலங்கள் ஜனநாயக முறையில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அந்தப் போராட்டத்தையும் அன்றைய மத்திய அரசு கடும் அடக்குமுறைக்குள்ளாக்கியது. இந்நிலையில், சேலம் சிறையில் கடும் அடக்கு முறையை கண்டித்து 1950 பிப்ரவரி 7-ஆம் தேதி உண்ணா நோன்பு போராட்டத்தை துவக்கினார்கள். ஜனநாயக ரீதியாக போராட்டம் அமைதியாக நடந்தது.
இந்த தகவல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சிறைக்குள் ஊழலில் ஊறி கொள்ளை அடித்துக் கொண்டிருந்த அதிகாரிகளுக்கு இந்த பிரச்சனை பெரும் தலைவலியானது. இந்தக் கொடும் அடக்குமுறைக்கு தலைமை தாங்கியவன் கிருஷ்ணன் நாயர் என்னும் சிறை அதிகாரியே. போராட்டத்தைக் கண்டு கடும் சினத்திற்கு உள்ளான கிருஷ்ணன் நாயர், கடும் மிரட்டல்களை செய்து பார்த்தான். எதற்கும் அஞ்சாத மன உறுதியுடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் போராட்டக் களத்தில் உறுதியாக நின்றனர். அடக்குமுறையை அதிகப்படுத்தினால் அடங்கிப் போவார்கள் என கிருஷ்ணன் நாயர் திட்டமிட்டான். பிப்.11 இல் சிறை அதிகாரி கிருஷ்ணன் நாயரின் தலைமையில் சிறைக் காவலர்கள், கம்யூனிஸ்ட் தோழர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கொட்டடியில் அணிவகுத்தனர். தடியடி நடக்கும் என எதிர்பார்த்த தோழர்கள் தற்காப்புக்கு திருப்பித் தாக்குவது என்கிற தீரத்துடன் காத்திருந்தனர். இளம் தோழர்களை பின்னுக்கு தள்ளி, முன்னணி தோழர்கள் முன் வரிசையில் அணிவகுத்தனர். கிருஷ்ணன் நாயர் ஆணையிட்டவுடன் அதிகார வர்க்கத்தின் அடிமைகள் கண்மூடித்தனமாக தாக்கி னார்கள். போர்க்களமாய் சேலம் சிறை மாறிக் கொண்டிருந்தது. தோழர்கள் சிந்திய இரத்தத்தின் பசி அடங்காத சிறைக்காவலர்கள் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்தனர்.
உயிரையும், உரிமையையும் பாதுகாக்க வேண்டும், மண்டியிட்டு இருக்க முடியாது என்ற நிலையில் தோழர்கள் உறுதியாய் நின்று போராடினார்கள். தாக்குதல் மறு வடிவம் பெற, தற்காப்புக்காக கற்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானார்கள். சுடப் போகிறான்.. சாகப்போகிறோம் என்ற நிலையிலும் எதற்கும் அஞ்சாத மாவீரர்களாய் நெஞ்சை நிமிர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம் தோழர்களை பாது காத்துக் கொண்டே அடக்கு முறையை எதிர்த்து நின்றனர். ஆனால், அதிகார வர்க்கத் திமிர் பிடித்த அந்த சிறை அதிகாரியோ, சுடச்சொல்லி உத்தரவிட்டான். நெஞ்சம் பதறும் காட்சிகளாய், காக்கை குருவிகளைப் போல தேச விடுதலைக்காகபாடுபட்ட தியாக பாரம்பரியமிக்க கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சுட்டு வீழ்த்தினார்கள். அந்த நிலையிலும் ஓடி ஒளியாமல், அய்யோ.. அம்மா என கதறாமல் சிறைக்காவலர் களை எதிர்த்து வீரச் சமர் புரிந்தனர். வீரமிக்க அந்த அடக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில், ‘‘இன்குலாப் ஜிந்தாபாத்’’, ‘‘புரட்சி ஓங்குக’’, ‘‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஜிந்தாபாத்’’ என்கிற முழக்கங்கள் சிறையை அதிர வைத்தன. கம்யூனிஸ்ட்களின் மன உறுதியை உலகத்திற்கே இது பறைசாற்றியது. ஒன்றல்ல.. இரண்டல்ல.. 105 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். சிறைக்கூடமே இரத்தச் சேறானது. 17 தோழர்கள் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார்கள், 5 தோழர்கள் தடியால் அடித்தே கொலை செய்யப்பட்டிருந் தனர். 119 தோழர்கள் படுகாயமுற்று இரத்தச் சகதியில் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சேலம் நகர வீதி களில் எல்லாம் ரத்தம் சுவடுகளாய் காட்சி யளித்தது. அதில் 63 தோழர்களின் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இருந்தது. கை, கால், மண்டை உடைந்தவர்கள் ஏராளம்.
வேரி முதலியார், சேலம் அரியா கவுண்டம்பட்டி ஆறுமுகம், விழுப்புரம் ஷேக் தாவூது உட்பட கேரளாவின் மலபார், ஆந்திரா தோழர்களும் பலியானார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் திருச்செங்கோடு தோழர் வி.ராமசாமி தொடை யில் குண்டடி பட்டு பிழைத்தார். தோழர் உத்தமிலிங்கம், நாராயண நம்பியார் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் தடியடிக்கு உள்ளானார்கள்.. சிறையில் குண்டடிபட்டு இறந்து போன திருச்செங்கோடு காவேரி முதலியாரின் மகன் சேஷாசலமும் மக்கள் போராட்டத்தில் பங்கேற்று சேலம் சிறையில் அனெக்ஸ் பகுதியில் அடைக்கப்பட்டிருந்தார். அதே சிறையில் இருக்கும் தனது தந்தையை பார்க்க நீதிமன்றத்தில் முறையிட்டு வாதாடி அனுமதி பெற்று தனது தந்தையை துப்பாக்கிச் சூட்டுக்கு சில நாட்கள் முன்பு தான் நேரில் சந்தித்து பேசினார். அப்போதும் காவிரி முதலியார் போலீஸ் அடிப்பார்கள், உதைப்பார்கள், கடும் சித்திரவதை செய்வார்கள். அப்பொழுதும் கட்சி சம்பந்தப்பட்ட ரகசியங்கள், திட்டங்களை சொல்லி விடாதீர்கள் என்று மகனிடம் உறுதியாக சொல்லி வாக்குறுதி பெற்றுள்ளார். சம்பவத்தன்று துப்பாக்கிச் சூடு நடந்த போது தனது தந்தையும் இறக்கிறார் என்கிற தெரியாமல், துப்பாக்கி சத்தத்தையும் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார்.
அடிமை இந்தியாவில் 1919 ஏப்ரல் 13-ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சுதந்திர இந்தியாவில் 1950 பிப்ரவரி 11 சேலம் சிறையில் அதே போன்ற சம்பவம் 22 கம்யூனிஸ்டுகளின் உயிரைப் பறித்தது. இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் சேலம் சிறை தியாகிகளின் வரலாறு அழியாத சரித்திரமானது; செங்கொடி வீரர்களுக்கு உரமானது. ஆம், இந்த நிகழ்வு இந்திய நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகளை மேலும் மேலும் அரசியலாக்கிடவும் கிஞ்சிற்றும் சமரசம் இன்றி களப்போராட்டத்தில், தேசத்தை பாதுகாப்பதில் முன்னணி படையாக திகழச் செய்யவும் வழிகாட்டுகிறது. கட்டுரையாளர்: சேலம் மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),