சென்னை,டிச.20- உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை சீர்குலைக்க ஆளுநர் முயற்சிக்கிறார் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கோவி. செழியன் கூறியதாவது: உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்யக்கூடிய தேர்வுக் குழுவில் 3 நபர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், நாங்கள் முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும்தான் தேர்வுக் குழுவை நியமித்தோம். மாறாக, தன்னுடைய எல்லையின் அளவு என்ன ? எதில் தலையிட வேண்டும்? எதில் தலையிடக் கூடாது என்ற நிலை தெரியாத ஆளுநர் அதை கண்டித்திருப்பதும், யுஜிசி தேர்வு செய்யக்கூடிய உறுப்பினரை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், 4 ஆவது உறுப்பினரை எங்களின் தலையில் சுமக்க வைப்பது ஆளுநர் பொறுப்புக்கு அழகல்ல. மாநில உரிமைகளை கட்டிக்காப்பதில் ஒன்றிய அரசிடம் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க, பல்வேறு மாநில வளர்ச்சிக்கு குரல் கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக அரசு அமையும் போதெல்லாம் உயர் கல்வியில் அக்கறை காட்டிய காரணத்தால் தான் கலைஞர் காலத்தில் இருந்து இன்று வரை உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்கிற நிலையை எட்டி இருக்கிறோம். இதை சீர்குலைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் ஆளுநர் தொடர்ந்து உயர்கல்வித்துறையின் பணிகளையும், அரசின் பணிகளையும் குறுக்கிட்டு இடர்பாடுகளை உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார். எனவே தான், நேற்று ஆளுநர் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து ஆளுநர் பணியை பார்க்க வேண்டும், அண்ணாமலை வேலையை பார்க்க வேண்டாம் என்ற நிலையில் கருத்து தெரிவித்திருந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.