தஞ்சை மண்ணை சிவக்கச் செய்த செங்கொடி இயக்க வீரத் தியாகிகளில் ஒருவர் தோழர் என்.வெங்கடாஜலம். தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுக்கா ராய முண்டான்பட்டி என்ற சிறிய கிராமத்தில் 1925 ஜூலை 25ஆம் தேதி தோழர் என்.வி எனப்பட்ட என்.வெங்கடாஜலம் பிறந்தார். தோழர் என்.வி. அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க கட்சிப் பணி, அவரை விவசாய சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவராக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பின ராக உயர்த்தியது. மூன்று முறை பஞ்சாயத்து தலைவரானார். அவர் வாழ்ந்த ராயமுண்டான் பட்டி உள்ளிட்ட ஐந்து உட்கிராமங்கள் உள்ளடக்கிய வெண்டையம்பட்டி ஊராட்சியின் தலைவராக மூன்று முறை மக்களின் பேராதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பொறுப்பை முறையாக பயன்படுத்தினார். வீட்டு மனை இல்லாதவர்களுக்கு அனைவருக்கும் வீட்டு மனை வழங்கினார். தரிசு நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்துக் கொடுத்தார். ஊரில் டீக்கடையில் நிலவிய இரட்டை கிளாஸ் முறையை ஒழித்துக் கட்டினார். குளத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்க முடியாமல் கரை மேலே நின்று கொள்வார்கள். சாதிஇந்துக்கள் தண்ணீ ரைக் கொண்டு வந்து தலித் மக்கள் வைத்திருக்கும் குடங்களில் தாமரை இலையை சுருட்டி வைத்து ஊற்றும் நிலை இருந்தது. இக்கொடுமைக்கு முடிவு கட்டி அனைவரும் குளத்தில் இறங்கி தண்ணீர் எடுக்கவும், குளத்து மீன்பிடி உரிமை யை பெறவும் நடவடிக்கை மேற்கொண்டார். கிராமத்தில் இருந்த ஆரம்பப் பள்ளியை நடு நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினார். சாலை வசதிகளை மேம்படுத்தினார். கால்நடை மருத்து வமனையை கொண்டு வந்தார். கூட்டுறவு நாணய சங்கத்தை ஏற்படுத்தினார்.
வானொலி நிலையம், நூல் நிலையம் ஆகியவற்றை அமைத்துத் தந்தார்.அவர் தலைமையில் பஞ்சாயத்து நிர்வாகம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. தோழர் என். வெங்கடாஜலத்தின் சமூக சேவை மக்கள் பணி என்பது துவக்க முதலே ஆதிக்ககாரர்களின் வெறுப்பையும் விரோதத்தை யும் சந்திக்க வேண்டியிருந்தது. 1952 ஆம் ஆண்டு துவங்கி கால் நூற்றாண்டு காலம் தஞ்சை மண்ணில் மார்க்சிய லட்சி யத்திற்காக தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்ட வீரம் செறிந்த போராளி; உழைக்கும் மக்களின் உரிமைக்குரலாய் களப்போராளி யாய் வர்க்க எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய தோழர் என்.வெங்கடாஜலம் அவர்கள் 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் நாள் வர்க்க எதிரிகளால் கடத்திச் சென்று கொலை செய்யப் பட்டார். உடலைக் கூட காண முடியாமல் செய்த னர் படு பாதகர்கள். 46 ஆண்டுகள் முடிந்த பின்னரும் கூட தஞ்சை மாவட்டத்தின் கிராமப்புற மக்களிடம், குறிப்பாக தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்களிடம் அவரைக் குறித்து கேட்கும் பொழுது அவர் மீது கொண்டிருக்கும் பாசம் பற்று மரியாதையை நன்கு அறிய முடியும்.