சென்னை, மே 15- மத ரீதியான தனிமனித உணர்வுகளில் தலையீடு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள ம் அறிக்கை வருமாறு: அரசுத் தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தடுத்து நிறுத்தி ஆண்டு இறுதி தேர்வு எழுத தடை ஏற்படுத்த முயற்சித்த கண்காணிப்பாளரின் செயலை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டிக்கிறது. கல்வி நிலையம், அரசுத்துறைகளில், பொது வெளிகளில் பாரம்பரிய, கலாச்சார நடைமுறைகளைப் மத ரீதியாக தடைசெய்யும் இதுபோன்ற முயற்சிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை களமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆண்டு இறுதித் தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளை தேர்வு எழுத அனுமதி மறுத்து பதற்றத்தை உருவாக்கி, மன உளைச்சலுக்கு உட்படுத்தி, அச்சமூட்டிய கண்காணிப்பாளரின் செயல் தவறான முன்னுதாரணமாகும். பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று மேல் அதிகாரிகள் தலையிட்டு தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். கண்காணிப்பாளரின் இச்செயல் கலாச்சாரம், பண்பாட்டு நடைமுறையில் மதரீதியான தலையீடோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இது போன்ற மதவெறி செயல்கள் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே தமிழக அரசு, கல்வி நிலையங்கள், பொது பயன்பாட்டு இடங்கள், அரசு சார்ந்த பகுதிகளில் தனிமனிதர்களின் பண்பாட்டு, கலாச்சாரத்தை அங்கீகரிக்கும் வழிகாட்டுதல்கள், உத்தரவுகளை வெளியிட்டு முறைப்படுத்தி பொது அமைதிக்கு நல்லிணக்க சூழ்நிலையை உத்தரவாதப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.