தர்ணா, பேரணி, மெழுகுவர்த்தி பேரணி, ஆர்ப்பாட்டம்
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை மேலும் கூர்மைப்படுத்தும் விதத்தில் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகியவற்றின் சார்பில் வரும் மே 18 (வியாழன்) அன்று நாடு முழுதும், குற்றமிழைத்த நபர் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கண்டனப் போராட்டங்கள் நடத்தப்படும். இப்போராட்டங்கள் வெகுஜன தர்ணா போராட்டம், பேரணிகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்துடன் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் முதலான வடிவங்களில் அமைந்திடும். மல்யுத்த வீராங்கனைகளுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக ஒன்றிய அரசாங்கம் எந்த அளவிற்கு குற்றம்சாட்டப் பட்டுள்ள நபருக்கு ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது என்பதை நாட்டு மக்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் விதத்தில் இந்தப் போராட்டங்கள் அமைந்திடும். இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் பெரும்திரளாகக் கலந்து கொள்வார்கள். ஒன்றிய அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்யாமல் மேலும் தாமதம் செய்யும்பட்சத்தில் நாடு முழுதும் மேலும் பெரிய அளவிலான இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றும் நாங்கள் அனைவரும் ஒன்றிய அரசாங்கத்தை எச்சரிக்கிறோம். போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்கும்வரை, நாங்கள் மல்யுத்த வீராங்கனைகளுடன் உறுதியாக நிற்போம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ந.நி.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் மே 28 அன்று திறப்பு?
தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்குப் பதில், அதன் அருகிலேயே ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற பெயரில், ரூ. 971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2020 டிசம்பர் 10 அன்று அடிக்கல் நாட்டினார். கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரமே அதல பாதாளத்தில் சரிந்தது. எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்பட்டது. ஊதியத்திலும் பிடித்தம் செய்யப்பட்டது. இவ்வளவுக்கு இடையிலும், பிரதமர் மோடி பெருந்தொகையை ஒதுக்கி, புதிய நாடாளுமன்ற கட்டட வேலையில் இறங்கினார். இந்நிலையில், இந்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும், நாடாளுமன்ற புதிய கட்டடத்தை மே 28 அன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாமதமாகத் துவங்கும் தென்மேற்குப் பருவமழை!
வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1 அன்று துவங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். கடந்த ஆண்டு மே 17-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. கேரளத்தில் மே 27 அன்று தென்மேற்குப் பருவமழை துவங்கியது. ஆனால், இந்த ஆண்டு சற்று தாமதமாக, ஜூன் 4-ஆம் தேதிதான், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தாண்டு பருவமழைக் காலத்தில், அதீத மழை மற்றும் வறட்சிக்கான ‘எல் நினோ’ தாக்கம் இருக்கும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தாலும், பருவமழை இயல்பாகவே இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக விதிகள் திருத்தத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பொதுச்செய லாளர் தேர்வு உட்பட ஜூலை 11 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, அதிமுகவின் சட்ட விதிகள் திருத்தமாக அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருந்தது. தற்போது அடுத்தகட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் செல்லும் என அங்கீகரித்து, அதிமுகவில் திருத்தப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் நோட்டீஸ்!
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ‘பயங்கரவாத அமைப்புகளான பிஎப்ஐ, பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம்’ என்று குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து பிஎப்ஐ (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா) அமைப்புடன், பஜ்ரங் தள் அமைப்பைத் தொடர்புப்படுத்தி பேசியதற்காக, ஹிந்து சுரக்ஷா பரிஷத் நிறுவனர் ஹிதேஷ் பரத்வாஜ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் கார்கே இழப்பீடாக ரூ. 100 கோடி தர வேண்டும் என்றும் கூறினார். செவ்வாயன்று இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப்பின் சங்ரூர் நீதிமன்றம், கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லாலு கட்சி எம்.பி, எம்எல்ஏ வீடுகளில் சிபிஐ சோதனை!
ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், கடந்த 2004-2009 வரை ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயில் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதாகவும், அதற்கு பிரதிபலனாக நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாகவும் சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புக்கள் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றன. லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி, மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து, குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதாதள எம்எல்ஏ கிரண்தேவி, மாநிலங்களவை உறுப்பினர் பிரேம்சந்த் குப்தா ஆகியோரின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாயன்று சோதனை நடத்தினர்.
ரயில் நிலையங்களில் ஒரே மாதிரி பெயர்ப்பலகைகள்!
“உலகிலேயே அதிகமான ரயில் நிலையங்களை இந்தியா கொண்டுள்ளது. இந்நிலையில், பெண்கள், முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் எளிதில் அடையாளம் காணும் வகையில், பெயர்ப் பலகைகளையும், அடையாள சின்னங்களையும் ஒரே மாதிரி இடம்பெற செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வண்ணம், எழுத்தின் அளவு, உருவங்கள் என அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு வசதியான அடையாளச் சின்னங்கள் வைக்கப்படும். எளிமையான வார்த்தைகள், தெளிவாக தெரியும் நிறம் ஆகியவற்றை பின்பற்றப்படும்” என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பாத யாத்திரையை நிறுத்திய பிரசாந்த் கிஷோர்!
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் பீகாரில் பாதயாத்திரையைத் துவங்கி நடத்தி வந்தார். ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் இந்த யாத்திரையை துவங்கி வைத்தனர். கடந்த 2022 அக்டோபர் 2 அன்று துவங்கி, தொடர்ந்து இந்த யாத்திரை நடைபெற்று வந்த நிலையில், கிஷோருக்கு காலில் தசைக்கிழிவு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதயாத்திரையை 15 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
‘சார்தாம் யாத்திரை’: இதுவரை 8 லட்சம் பேர் பயணம்!
உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள, இந்துக்களின் புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவற்றுக்கு சென்றுவருவதை ‘சார்தாம் யாத்திரை’ என்று அழைக்கின்றனர். அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான ‘சார்தாம் யாத்திரை’, கடந்த ஏப்ரல் 22 அன்று துவங்கியது. நான்கு தலங்களிலும் நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேர் விகிதம் தரிசனம் செய்து வந்தனர். அதன்படி இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரியில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக உத்தரகண்ட் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
ஊரகப்பகுதி மின் விநியோகம் தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு பாராட்டு
சென்னை, மே 16- தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் மின் விநியோகம் உயர்ந்துள்ளது என அரசுக்கு ஒன்றிய அரசு எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட கூடுதலாக வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில், ஊரகப் பகுதி களுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018-2019ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்க ளாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2021-2022ஆம் ஆண்டில், அது நாளொன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் 2018-2019ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம், 2021-2022ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள் ளதைச் சுட்டிக்காட்டி, ஆர்.கே.சிங் பாராட்டுக் களை தெரிவித்துள்ளார் என கூறப்பட்டுள் ளது. மேலும், தமிழ்நாட்டில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தை வழங்கத் தேவையான அனைத்து நடவடிக் கைகளுக்கும் ஒன்றிய அரசு உதவி செய்யும் என்றும் ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் 2,461 பேர் கைது
சென்னை, மே 16- விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்க ளில் விஷச் சாராயம் குடித்த தில் இதுவரை 19 பேர் இறந்து விட்டனர். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் டி.ஜி.பி. சைலேந் திரபாபு உத்தரவின்பேரில் காவல் துறையினர் கள்ளச் சாராய வியாபாரிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட னர். இதனால் கடந்த 3 நாட்களில் இது தொடர்பாக 2,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,461 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில் பெண் களும் அடங்குவர். 2 நாட்களில் கள்ளச்சந் தையில் விற்கப்பட்ட 16,493 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 19,028 லிட்டர் சாராயம் கைப் பற்றப்பட்டுள்ளது. 3ஆவது நாள் நடந்த சோதனையில் திருட்டுதனமாக விற்கப்பட்ட 17 ஆயிரத்து 31 மது பாட்டில் கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. 2,583 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட் டுள்ளது. சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கரவாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து காவல் துறையினர் கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறுகையில், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றி லும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
சமூக நலத்துறை விருது
சென்னை,மே 16- எதிர்வரும் சுதந்திர தினத்தின் போது, சமூக நலத்துறை பிரிவில் விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் வழங்கப்படும் பல்வேறு விருதுகளில், பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கும் விருது அளிக்கப்படுவது வழக்கம். எதிர்வரும் சுதந்திர தினத்தின் போதும், அந்தப் பிரிவில் விருது வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அனைத்துத் தகவல்களும் http://awards.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மே 30 திருச்சிராப்பள்ளியில் சிஐடியு பேரணி - பொதுக்கூட்டம்
திருச்சிராப்பள்ளி, மே 16- நாட்டின் வளங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட் முதலாளி களுக்கு தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஆன்லைன் அபராதக் கொள்ளைக்கு வழிவகுக்கும் மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். தொழிற்சாலை சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழகத்தின் ஏழு முனை களிலிருந்து மே 20-ஆம் தேதி நடை பயணத்தை தொடங்குகிறது. பத்து நாட்கள் 2,100 கி.மீ பயணம் செய்து தமிழகத்தின் அனை த்துப் பகுதிகளையும் சந்திக்கிறது. நடைபய ணக்குழுக்கள் மே 30-ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் சங்கமிக்கின்றன. மே 30-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி கோஹி னூர் தியேட்டர் அருகில் இருந்து நடைபயண நிறைவுப் பேரணி, புத்தூர் நால்ரோடு பகுதி யில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடையில் நிறைவடைகிறது. அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தபன்சென், மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்பட பலர் பங்கேற்கின்றனர். சிஐடியு நடைபயண நிறைவு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்த விளம்பரப் பணிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை யில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பணிக் குழுவினர் திருச்சிராப்பள்ளி பேருந்துநிலையம், மார்க்கெட், தில்லைநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திண்டுக்கல் சாலைகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்க ளில் சுவர் விளம்பரங்கள் செய்து வருகின்றனர். பேரணி-பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தொழிலாளர்களை வரவேற்க திருச்சிராப்பள்ளி மாநகரம் தயாராகி வருகிறது.
பிரிக்ஸ் : பெரும் ஆர்வம் காட்டும் நாடுகள்
ஜோகன்னஸ்பர்க், மே 16- ஐந்து நாடுகள் இருக்கும் பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்கு பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன என்று தென் ஆப்பிரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நலேடி பாண்டோர் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் அமைப்பில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சனைகள் இந்த அமைப்பின் கருத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதனால் அர்ஜெண்டினா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தங்களையும் இந்த அமைப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கின்றன. இது குறித்துப் பேசியுள்ள தென் ஆப்பிரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நலேடி பாண்டோர், “பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச அமைப்பை பிரிக்ஸ் நாடுகள் ஆதரிக்கின்றன. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் தொடர்பான சீர்திருத்தங்களையும் நாங்கள் ஆதரிக்கிறோம். பிரிக்ஸ் அமைப்பு மேலும் வலுப்பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் கூடுதல் வலுவோடு இயங்கவே இத்தகைய நிலைமையை நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என்றார். பிற நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைய விருப்பம் தெரிவிப்பது குறித்துப் பேசிய பாண்டோர், “நவீன, அனைவரும் உள்ளடக்கிய மற்றும் பொதுநலன் மீது கவனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பை நாடுகள் விரும்புகின்றன. வளரும் நாடுகளைக் கொண்ட பிரிக்சை அப்படிப்பட்ட அமைப்பாகப் பல நாடுகள் பார்க்கின்றன. அதனால் இணைந்து செயல்பட விரும்புகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
உலகச் செய்திகள்
இஸ்ரேலின் சொத்து வரிச் சட்டம் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது. உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து நிதியைப் பறிக்கும் இந்தத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேசிய நெருக்கடி என்று அறிவித்து, அதன் மூலமாக உள்ளூர் நிர்வாகங்களின் நிதியாதாரத்தைப் பாதிக்கும் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என்று நகரவைகள் மற்றும் உள்ளூர் கவுன்சில்கள் கூட்டமைப்பு கூறியிருக்கின்றன.
எழுத்தறிவு மற்றும் கணிதத் திறன்களில் ஆஸ்திரேலிய மாணவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்று ஆஸ்திரேலிய கல்வி ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இடைநிலை மாணவர்களில் கணிசமானோர், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கினர் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறார்கள். அடிப்படையான எழுத்தறிவில் பிரச்சனையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு கூடுதல் உதவியை 50 விழுக்காடுக்கும் மேற்பட்ட பள்ளிகள் தருகின்றன என்றும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துருக்கியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரிசெப் தய்யிப் எர்டோகன் 49.51 விழுக்காடு வாக்குகளும், அவருக்கு அடுத்த இடத்தில் வந்த கேமல் கிளிக்டரோக்லு 44.88 விழுக்காடு வாக்குகளும் பெற்றனர். இந்த முதல் சுற்றில் யாருக்கும் 50 விழுக்காடு வாக்குகள் கிடைக்காததால், முதல் இரண்டு இடங்களைப் பெற்ற இருவரும் மே 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாவது சுற்றில் போட்டியிடுகிறார்கள்.
தீக்கதிர் முக்கிய செய்திகள்
சிறந்த கடவுச்சீட்டு வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தை பிடித்துள்ளது. லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. விசா இல்லாத பயண வாய்ப்புகள், குடிமக்கள் மீதான வரிவிதிப்பு, இரட்டைக் குடியுரிமை சாத்தியங்கள், தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் கருத்து ஆகிய 5 அளவுகோல்களின்படி நோமத் கேப்டலிஸ்ட் (NOMAD CAPTALIST) நிறுவனம் தரவரிசைப்படுத்தப்பட்ட இந்த பட்டியலில் இந்தியா 159வது இடத்தில் உள்ளது.
சென்னை திருவெற்றியூரில் கடலில் குளித்த பொழுது அலையில் சிக்கி ஹரிஷ் (16), ஸ்ரீகாந்த் (19) ஆகிய 2 பேர் உயிரிழந்த நிலையில், சந்துரு (20) என்பவர் மாயம்.
வாட்ஸ்அப்பில் டிக்கெட் பெறும் வசதியை புதனன்று முதல் அறிமுகம் செய்கிறது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.
நைஜிரிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 100 மணி நேரம் (4 நாட்களுக்கு மேல்) சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்து அசத்தினார்.
நடப்பாண்டில் சென்னையில் முதல்முறையாக 109 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.