கீரிப்பட்டியில் ரூ. 2 கோடியில் சாலை: அமைச்சர் கயல்விழி
சென்னை,பிப்.15- மதுரை மாவட்டம், கீரிப்பட்டியில் வசிக்கும் ஆதி திராவிடர் மக்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதி, கீரிப்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் சாலை வசதி செய்து தரப்படுமா? என்று உறுப்பினர் பி. அய்யப்பன் வினவினார். இதற்கு பதிலளித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, கீரிப்பட்டி ஊராட்சி மன்றம், கீரிப்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு வடக்கு பகுதியில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகள் வருகிற மார்ச் இறுதிக்குள் முடிக்கப்படும். மேலும், பழுதடைந்துள்ள சமுதாய நலக்கூடம் சீரமைத்து கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
பார்வையற்ற பட்டதாரிகள் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்
சென்னை,பிப்.15- பார்வையற்ற பட்டதாரி நியமன தேர்வு இல்லாமல் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடந்த 12 ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பிப்.15 அன்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் சட்டப்பேரவையில் எதிரொலித்தது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதற்கு விளக்கமளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், “ பார்வையற்ற பட்டதாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது என்றும் தற்போது போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என்றும் கூறினார்.
நடிகர் சங்க கட்டிடத்திற்கு அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நிதி
சென்னை,பிப்.15- நடிகர் சங்கக் கட்டடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க தேர்தலில் பிரமாண்டமான கட்டிடம் கட்ட முடிவு செய்தது. தியாகராய நகர் அருகே இந்த கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் திடீரென நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த கட்டிடத்தை கட்ட நிதி திரட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் சங்கக் கட்டடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க நிர்வாகி களிடம் ரூ. 1 கோடிக்கான காசோலையை பிப்.15 அன்று வழங்கினார்.நடிகர் சங்கத்தில் ஆயுள் கால உறுப்பினர் என்ற முறையில் நிதியுதவி வழங்குவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.