2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் 14 படிப்புகள், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் 2, மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் 9 படிப்புகளுடன் மூன்று விதமான டிப்ளமோ படிப்புகளுக்கு இளைய தளத்தில் ஆன்லைன் மூலம் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதேபோல், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் 11 தொகுப்பு கல்லூரிகளில் 33 முதுகலை மற்றும் 28 முனைவர் பட்டப்படிப்பை வழங்குகிறது. இதற்காக இந்த ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கு 2,330 மாணவர்களும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கு 380 மாணவர்களும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கு ஜூன் 23 அன்று நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
இடியாய் இறங்கிய அதிர்ச்சி!
நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி இரவோடு இரவாக இ-மெயில் மூலம் அனுப்பிய அந்த மின்னஞ்சல் தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. காரணம், இளநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான தர வரிசையில் பட்டியல் வெளியிட்டு செப்டம்பர் மாதத்தோடு மாணவர் சேர்க்கை முடிவடைகிறது. அந்த மாதத்தின் இறுதியில் முதுநிலை படிப்புக்கான வகுப்புகள் தொடங்க வேண்டிய நிலையில், விரைவில் மறு தேர்வுக்கான தேதி குறித்து பத்து நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும். ஏற்கனவே பெறப்பட்ட நுழைவுத் தேர்வு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்ற தகவல் மேலும் பேரிடியாயாக அமைந்தது.
வெறும் கையில் முழம் போடும் ஆளுநர்!
தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு பல்கலைக்கழகம் தான் ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள். மாநிலப் பல்கலைக்கழகங்கள் 22 உள்ளன. இதில் ஒன்றுதான் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். இது முழுக்க முழுக்க மாநில அரசே நிதி உதவி செய்து வருகிறது. இருந்தாலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்தத் தகவலையும் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. பொதுப் பட்டியலில் கல்வி இருக்கிறது என்கின்ற ஒரே காரணத்திற்காக இதன் செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றிய அரசு கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநில அரசிடம் ஊதியம் பெற்றாலும் வேந்தர் ஆளுநர் என்பதால் அவரது கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுகலை மாணவர் நுழைவுத் தேர்வை துணை வேந்தர் ரத்து செய்தது எப்படி? அவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? என்கிற ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல மிகப் பெரிய சட்ட சிக்கலையும் உருவாக்கி உள்ளது. மறுபுறத்தில், துணை வேந்தர் கீதா லட்சுமி விருப்ப ஓய்வு அடிப்படையில் பணி ஓய்வு பெற்று அதற்கான பணப் பலன்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும், துணை வேந்தராக நீடிப்பதற்கு காரணம் யார்? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
வெளிப்படைத் தன்மை இல்லை!
மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் பெயர், எந்த ஊர் என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு? கட் ஆப் என்ன? தேர்வான மாணவர்கள் விபரம் என - எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. இதற்குக் காரணம், இடைத்தரர்கள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் முதல் பேராசிரியர்கள் வரை தங்களுக்கு வேண்டிய நபர்கள் உறவினர்கள் மற்றும் அரசியல் பலம் படைத்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கையூட்டு பெற்றுக் கொண்டு சீட் வழங்குவதால் நேர்மையாக தேர்வு எழுதும் எங்களில் பலருக்கும் இடம் கிடைக்கவில்லை என்றும் புகார்கள் உள்ளன. மறுபக்கம், தனியார் கல்வி முதலைகளின் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் லாப வேட்டையும் இதில் அடங்கியிருக்கிறது. இவற்றையெல்லாம் மூடி மறைப்பதற்கு தொழில்நுட்பக் கோளாறு என்று கூறி, தேர்வை ரத்து செய்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் மாணவர் மற்றும் பெற்றோர் தங்களது உள்ள குமுறல்களை வெளிப்படுத்துகின்றனர். வேந்தர் என்ற பெயரில் ஆளுநர் மேற்கொள்ளும் அராஜக முடிவுகளால் பல்கலைக்கழக நிர்வாகங்களில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் நுழைவுத் தேர்வு ரத்து விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசும் முதலமைச்சரும் கருணைக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். சி.ஸ்ரீராமுலு