ஜி20: முதலாவது நிதியமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது!
இந்தியாவின் தலைமையில், ஜி20 நாடுகளின் முதலாவது நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம், பெங்களூருவில் தொடங்கியுள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் இணைந்து இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி வருகின்றனர். ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் உள்பட மொத்தம் 72 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து 6ஆவது நாளாக சரிந்த இந்தியப் பங்குச்சந்தைகள்
இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு, வார வர்த்தகத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்றும் சரிவிலேயே முடிவடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 142 புள்ளிகள் அல்லது 0.24 சதவிகிதம் குறைந்து 59 ஆயிரத்து 463.93 புள்ளிகளிலும், நிப்டி 45 புள்ளிகள் அல்லது 0.26 சதவிகிதம் குறைந்து 17 ஆயிரத்து 465.80 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. தொடர்ந்து 6-ஆவது நாளாக இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவிலேயே முடிந்துள்ளன. அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், பயோகான், இமாமி, கோத்ரெஜ் பிராபர்டீஸ் மற்றும் இப்கா லேபரட்டரீஸ் உள்ளிட்ட 224 பங்குகள் 52 வார குறைவான விலையை எட்டியுள்ளன.
தில்லி மாநகராட்சியில் ஆள்பிடி வேலையை துவங்கியது பாஜக!
தில்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் அதற்கு சில மணித்துளிகள் முன்னதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் பவன் ஷெராவத் பாஜக-வில் இணைந்தார். நிலைக்குழுவில் 6 உறுப்பினர்கள் பதவிக்கு 7 பேர் போட்டியிடும் நிலையில், ஆம் ஆத்மி கவுன்சிலர், பாஜகவில் இணைந்தது, தில்லி மாநகராட்சியில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது.
முழு அடைப்புப் போராட்டம் வளர்ச்சிக்குத் தடையாம்: மம்தா பேட்டி
“முழு அடைப்பு போராட்டங்களும் வளர்ச்சியும் கைகோர்த்து பயணிக்க முடியாது. 11 ஆண்டுகளுக்கு முன் முழு அடைப்பு போராட்ட அரசியலில் மேற்கு வங்கம் சிக்கியிருந்தது. அதில் இருந்து மாநிலம் விடுபட நான் உதவியுள்ளேன். முழு அடைப்பு போராட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக்காது. அது எங்கள் கொள்கையில் கிடையாது. எந்த வகையிலும் மக்கள் சிரமப்பட நான் விரும்பவில்லை. எனது வாகன அணிவகுப்பின்போது கூட வழக்கமான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்று அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருக்கிறேன்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட வாய்ப்பு!
உள்நாட்டில் அரிசி விலை நிலைத்தன்மை மற்றும் தட்டுப்பாடற்ற சப்ளையை உறுதி செய்ய அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு நீட்டிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. குருணை அரிசி ஏற்றுமதி மீதான தடையை நீக்கவும், வெள்ளை அரிசி ஏற்றுமதி மீதான 20 சதவிகித வரியை குறைக்கவும் ஒன்றிய அரசு திட்டமிடவில்லை. 20 சதவிகித ஏற்றுமதி வரி விதிக்கப் பட்டுள்ள போதிலும் அரிசி ஏற்றுமதி குறையவில்லை. எனவே, வரியை குறைக்கவோ அல்லது ரத்து செய்யவோ எந்த காரணமும் இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மின் கட்டண பாக்கி: அரசு அலுவலகங்களுக்கு எச்சரிக்கை
சென்னை, பிப். 24- முறையாக மின் கட்டணம் செலுத்தாத அரசு அலுவலகங்களில் இணைப்பை துண்டிக்க மின்சார வாரியம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 15ஆம் தேதி மின்சார வாரியத்தின் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. அப்போது, அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத் துறைகள் தவிர மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள இதர அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் உள் ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய தலைவர் அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், தெருவிளக்கு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் 7 நாட்க ளுக்குள் மின்கட்டணம் செலுத்து வதற்கு நோட்டீஸ் அனுப்பவும் அறி வுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடத்தல் கும்பலுடன் தொடர்பு: காவலர்கள் பணியிடை நீக்கம்
சென்னை, பிப். 24- அரிய வகை உராங்குட்டான் குரங்கு கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக செயல் பட்டதாக எழுந்த புகாரின்பேரில், செங்குன்றம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து ஆவடி மாநகர காவல் ஆணை யர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வனத்துறை சட்ட விதிகளை மீறி செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் யார் என்பது குறித்தும், எங்கிருந்து குரங்கை கடத்தினார்கள் என்பது குறித்தும் தொடர்ந்து வனத் துறை அதிகாரிகள், காவல் துறையி னர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓ.பி.எஸ் மகன் அதிமுகவில் இல்லை: டி.ஜெயக்குமார்
சென்னை,பிப்.24- அ.தி.மு.க.வினரால் நிராகரிக் கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். அவரை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்? என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். ஓபிஎஸ் மட்டுமல்ல அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் அ.தி.மு.க.வில் இல்லை. இந்த தகவல் நாடாளுமன்றத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு விட்டது. அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் எப்போது கூடும் என்பது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர்கூறினார்.
டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை,பிப்.24- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் 26-ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள் ளது. பிப். 27, 28-ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 48 மணிநேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப் படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.