states

சிறு, குறு, நடுத்தர தொழில்-தொழிலாளர்களை பாதுகாக்கக் கோரி கோவையில் சிறப்பு மாநாடு

சென்னை,பிப்.21- சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி மார்ச் 5 அன்று கோயம்புத்தூரில் நடைபெறும் மாபெரும் சிறப்பு  மாநாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனை வோர்களும் தொழிலாளர்களும் திரளாக பங்கேற்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பிப்ரவரி 20, 21 தேதிகளில் திரு வள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

கோவையில் சிறப்பு மாநாடு

ஒன்றிய அரசால் பின்பற்றப்படும் நவீன தாராளமய  பொருளாதாரக் கொள்கையால் அனைத்து தொழில்களும் நொறுங்கி வருகின்றன. குறிப்பாக, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மொத்தமாக  முடக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இயங்கும் 49.48 லட்சம் சிறு-குறு  மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் 96.73 லட்சம் பேர்   ேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளையும், மானியங்களையும் வாரி வழங்கும் நரேந்திர மோடி அரசு சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்களை திட்டமிட்டு சீரழித்து வருகிறது. குறிப்பாக, பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி  விதிப்பிற்கு பிறகு சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்களின் இருத்தலே கேள்விக்குறியாகி உள்ளது. வங்கிகள் உரிய நேரத்தில் கடன் தர மறுப்பதும், வட்டி விகிதங்கள் அதிகமாக விதிப்பதும் சிறு-குறு  மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த துறைகளைச் சேர்ந்த தொழி லாளர்களின் வாழ்வாதாரமும் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பிரச்சனைகளும் இந்த துறையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் களை பாதுகாக்க வலியுறுத்தி 2023 மார்ச் 5 ஆம் தேதி கோயம்புத்தூரில் சிறப்பு மாநாடு நடைபெறு கிறது. இம்மாநாட்டில் கேரள மாநிலத்தின் தொழில்துறை  அமைச்சர் பி. ராஜீவ், தமிழ்நாடு சிறு-குறு தொழில்துறை  அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களும், தொழிலாளர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்று சிபிஎம் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

நில அளவைத்துறையில் வெளிமுகமை மூலம் நிரப்புவதை கைவிடுக!

தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் பணி யிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. அதே நேரத்தில் படித்துவிட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருப்போர் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டியுள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, தமிழ்நாடு அரசு  தனது நேரடி பொறுப்பில் இயங்கும் பல்வேறுதுறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை முறையாக வேலை வாய்ப்புதுறை மூலம் நிரப்பிடாமல் வெளிமுகமை மூலம்  ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படுவது ஏற்புடையது அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தற்போதும் கூட நில அளவை பதிவேடுகள் துறையில் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மறு நில அளவை  பணி செய்திட போதுமான நில அளவர்கள் மற்றும் புல  உதவியாளர்கள் இல்லாத சூழலில் வெளிமுகமை மூலம்  தொகுப்பூதியத்தில் 500க்கும் மேற்பட்டோர் நியமனம் செய்ய இருப்பதாக செய்திகள் வருகின்றன. தமிழ்நாடு அரசின் நில அளவை பதிவேடுகள் துறை யில் உள்ள காலிப் பணியிடங்களை வேலைவாய்ப்புத் துறையின் மூலமே நியமனம் செய்ய வேண்டும். இதற்கு  மாறாக, 500க்கும் மேற்பட்ட புல உதவியாளர்களை வெளி  முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதி யத்தில் நியமனம் செய்திட எடுக்கும் முடிவானது சமூக நீதி மறுக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அரசுப் பணி என்பதே இல்லாததாகிறது. ஆகவே, தமிழ்நாடு அரசு நில அளவைத் துறை யில் வெளி முகமை மூலம் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் என்பதை கைவிட்டு, வேலை வாய்ப்புத் துறையின் மூலம் நிரந்தர பணி நியமனம் செய்திட வேண்டுமென சிபிஎம் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

அவுட்சோர்சிங் முறையை முற்றிலுமாக ஒழித்திடுக!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோருக்கு 01.12 2019 முதல் ஊதிய உயர்வு வழங்கி இருக்க வேண்டும். கொரோனா தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகள் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்பொழுது 38 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் இவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்.  அதேபோல, மின்வாரியத்தில் 58 ஆயிரம் காலிப்பணி யிடங்கள் உள்ள நிலையில் ஆரம்பகட்ட பதவிகளை நிரப்பிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அலுவலகத்தை சுத்தம் செய்யும் பகுதி நேர பணி யாளர்களில் அடையாளம் கண்டவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திடவும், மீதி உள்ள காலியிடங்களில் தற்போது பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடவும் கோருகிறோம். மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திட வேண்டும். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் காலங்களில் சிறப்பான பணிகளை செய்து மின்விநியோகத்தை சீரமைத்து அரசுக்கு பெருமை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்திட வேண்டு மெனவும், தமிழ்நாடு அரசின் இந்த கேந்திரமான துறையில் ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் முறையை  கைவிட  வேண்டுமென்றும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அவுட்சோர்சிங் முறையை முற்றிலும்  ரத்து செய்ய  வேண்டுமென சிபிஎம் மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது.

கேபிள் டி.வி. தொழிலை பாதுகாத்திட மின்சார வாரிய முடிவினை கைவிடுக!

கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் வேலை கிடைக்காமல்  குறைந்த முதலீட்டில் சுயமாக ஒரு தொழிலாக தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரக் கணக்கான இளைஞர்கள் (நபர்கள்) இத்தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.  தமிழ்நாடு  அரசும், மின் வாரியமும் மின் கம்பத்தில் வயர்  கட்டுவதை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவித்தது. அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் பைபர் நெட் வயர் உள்ளிட்டு அனைத்து கேபிள் நிறு வனங்களும் மின்கம்பத்தில் தான் கட்டுகின்றனர். ஆனால்,  தற்போது மின்வாரிய தலைவர் நாங்கள் அப்புறப்படுத்த மாட்டோம் என உறுதி அளித்துள்ளார். தனியார் பெரும் நிறுவனங்களான செல்போன் நிறுவனங்கள் உதாரணத்திற்கு ஜியோ, ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் ஒன்றிய அரசிற்கு சொந்தமான  பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். செல்போன்  டவரைத்தான் பயன்படுத்தி 5ஜி சேவையை அனுபவிக் கிறார்கள். இவர்கள் சாதாரண தொழில் முனைவோர் கூட  கிடையாது. இருந்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது செல்போன் டவரை பயன்படுத்த அனுமதிக்கின்றது. எனவே, மின்சார கம்பத்தில் கேபிள் டிவி வயரை கொண்டு செல்வதற்கு மின்சார வாரியமும், தமிழ்நாடு அரசும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடம் குறைந்தபட்ச வாடகை என ஒரு தொகை கூட முடிவு செய்து மாதா மாதம் மின்சார கட்டணம் போன்று வாங்கலாம். இது நிறுவனத்திற்கும் ஒரு தொகை கிடைக்கும். கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கும் உதவியாக இருக்கும். எனவே தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஎம் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

அரசு வழங்கிய குடிமனையில் 27 ஆண்டுகளாக குடியேற முடியாத பட்டியலின மக்கள்!

அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டம், ராஜாநகரம் கிராமத்தில் வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் 107 குடும்பங்களுக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாடு அரசு இலவச வீட்டு மனை வழங்கியது. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட குடிமனையில் வீடு கட்டி குடியேற முடியாமல் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தடுத்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் தொடர்ந்து தங்களுக்கு வழங்கப்பட்ட குடிமனையில் குடியேற போராடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நிலவி வரு கின்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் தலையீடுகளை செய்து வருகிறது. கும்மிடி பூண்டி வட்டம், தோக்கமூர் கிராமத்தில் சாதி ஆதிக்க சக்திகளால் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரை அகற்றும் போராட்டத் தில் தொடர் தலையீடு செய்து அச்சுவர் அகற்றப்பட்டது.

திருவள்ளூர் வட்டம், விஷ்ணுவாக்கம் கிராமத்தில் பேருந்து நிழற்குடை அமைத் தால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிழற்குடையில் வந்து அமர்வதையே தங்களுடைய ஆதிக்கத்திற்கு கௌரவ குறைச்சலாக கருதி  வேறு இடத்தில் நிழற்குடை அமைக்க முயற்சித்ததை மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தின் மூலமாக தடுத்து நிறுத்தப் பட்டது. கடந்த மே மாதம் 27 ஆம் தேதி  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு பின்பாக மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இராஜாநகரம் கிராமத்திலும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகள் அளவீடு செய்யப்பட்டு உரிய மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ஆதிக்க சக்திகள் அவர்களை வீடு கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர். மாவட்ட ஆட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கை கைவிட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான அந்த இடத்தில் அனைவருக்கும் தொகுப்பு வீடுகள் அரசே கட்டிக் கொடுத்து குடியமர்த்த உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென சிபிஎம் மாநி லக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.