states

குஜராத்தில் தனியார் மாலுக்குள் புகுந்து ‘பதான்’ பட போஸ்டரைக் கிழித்து பஜ்ரங் தள் வெறியாட்டம்!

அகமதாபாத், ஜன. 5 - குஜராத்தில் ‘பதான்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அத்திரைப்படப் போஸ்டர்களைக் கிழித்து, பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தினர் வெறியாட்டம் நடத்தியுள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில், ஜனவரி 25-அன்று வெளியாகவுள்ள திரைப்படம் ‘பதான்’ (Pathaan). சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 3 நிமிட ‘பேஷரம் ரங்’ என்ற வரிகளில் துவங்கும் பாடல் டிசம்பர் துவக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரே வாரத்தில் 6 கோடி பார்வையாளர்களைப் பெற்றது. ஆனால், ‘வெட்கமற்ற நிறம்’ எனப் பொருள்படும் ‘பேஷரம் ரங்’ என்ற வார்த்தையில் துவங்கும் இந்த பாடலின் காட்சியில், தீபிகா படுகோனே அணிந்திருக்கும் நீச்சலுடை காவி நிறத்தில் இருப்பதாகவும், இது இந்து மதத்தை அவமதிப்பதாகவும் கூறி, சங்-பரிவாரங்கள் கூச்சலிட்டன.  

சங்பரிவாரின் மிரட்டலுக்குப் பயந்து, ‘பேஷரம் ரங்’ பாடல் உள்பட பதான் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு காட்சிகளில் திருத்தங்கள் செய்யுமாறு திரைப்பட தணிக்கை வாரியமும் அண்மையில் உத்தரவிட்டது. இதனிடையே, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள வஸ்திராபூரில் இயங்கும் ‘ஆல்பா ஒன்’ என்ற தனியார் வணிக வளாகத்துடன் கூடிய தியேட்டரில் ‘பதான்’ திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்காக அந்த வணிக வளாகத்தில் பதான் படத்தின் போஸ்டர்களும் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், புதனன்று அந்த வணிக வளாகத்திற்குள் புகுந்த, ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’த்தின் அடியாள் படையாக விளங்கும் ‘பஜ்ரங் தள்’ அமைப்பினர், அங்கிருந்த ‘பதான்’ பட போஸ்டரை கிழித்தெறிந்து வெறியாட்டம் நடத்தியுள்ளனர். வணிக வளாகத்திற்கு வெளியேயும் போராட்டம் என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘பேஷரம் ரங்’ பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இந்தப் படம் ‘லவ் ஜிகாத்’தை ஊக்குவிப்பதால் பதான் படத்தை திரையிடக்கூடாது என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.