states

காவிரி டெல்டா மண்டலத்தில் நிலக்கரி சுரங்கமா?

அனுமதிக்க முடியாது: சிபிஐ  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்  வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ காவிரி படுகைப் பகுதியில் படிப்படியாக தொடர்ந்து மேலும் ஆறு நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி ஒட்டு மொத்த டெல்டா பகுதியையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளதுடன் கடுமையான பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மேலும், நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம்  ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தபடும் என்ற செய்தி. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வில் விழுந்த பேரிடியாக அமைந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு காவிரி படுகை பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணிக ளுக்கான ஆய்வுப் பணிகளும் நடக்காமல் தடுக்க வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு வலுவாக அழுத்தம் தர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

திட்டத்தைக் கைவிடுக: விசிக

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும்  திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசு உரிய முறையில் விரைந்து இதனைத் தடுத்து நிறுத்த  வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மக்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு டெல்டா பகுதிகளில் இந்தத் திட்டங்களை செயல்படுத்த முற்பட்டால் ஒன்றிய பாஜக அரசு கடுமையான மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

விவசாயத்தை அழிக்க சூழ்ச்சி: பாமக

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் எப்படி நிலக்கரி சுரங்கம் அமைக்க முடியும்?. ஏலம் அறிவிக்கப்பட்ட 6 திட்டங்களில் 5 திட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகிறது. மாநில அரசுக்கு தெரியாமல் ஒன்றிய அரசு எப்படி ஏலம் விடும்?. ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம்” என்று கூறியுள்ளார்.

மாநில அரசின் உரிமை மீது தாக்குதல்:  ஒன்றிய அரசுக்கு  விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை, ஏப்.4- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம்  அமைப்பதற்கு மாநில அரசின்  உரிமை மீது ஒன்றிய பாஜக அரசு  மேற்கொண்டு வரும் தாக்குதல்  முயற்சியை முறியடிக்க விவசாயி களையும் பொதுமக்களையும் ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமிநடராஜன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-  ஆசியாவின் மிகப்பெரிய நீண்ட சமவெளி பரப்பான காவிரி  படுகை மாவட்டங்களில் ஒன்றிய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  செயல்படுத்த முடிவு செய்ததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பு களின் கூட்டுப் போராட்டங்கள் மற்றும் தொடர் போராட்டத்தின் விளைவாக காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 29.03.2023 அன்று  மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் நிலக்கரி எடுப்பு திட்டத்தின் 17/7வது  பகுதியாக நாடு முழுவதும் 101 இடங்க ளில் நிலக்கரி மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் எடுக்க அழைப்பானை விடுத்துள்ளது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியிலுள்ள மைக்கேல் பட்டி நிலக்கரி பகுதி மற்றும் கடலூர் மாவட்டம் கிழக்கு சேத்தியா தோப்பு நிலக்கரி பகுதி, தஞ்சாவூர் திருவாரூர் மாவட்ட பகுதி களை உள்ளடக்கிய வடசேரி நிலக்கரி பகுதி ஆகியவை தமிழ்நாட்டில் உள்ளடக்கிய பகுதியாகும். 

ஏலத்திற்கு விண்ணப்பிக்க 2023  மே 30 கடைசி நாளாகவும் 2023 ஜூலை  14 ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கப் படும் தேதியாகவும் ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிறது.  எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படாது என தமிழ் நாடு அரசு சட்டம் கூறுகிறது. மேலும்  2015ல் மாவட்ட ஆட்சியர்கள் பிறபித்த  நிரந்தர தடையும் அமலில் உள்ளது.

முப்போகம் விளையும் பகுதி 

நிலவளம், நீர்வளம் மற்றும் முப்போகம் விளையக்கூடிய விளை நிலங்களை கொண்ட பகுதிகளான வடசேரி நிலக்கரி பகுதி முழுமையும் சேத்தியாதோப்பு கிழக்கு நிலக்கரி பகுதி ஒரு பகுதியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிக்குள் வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முக்கியத்துவமும் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டிய சூழலில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிக்குள் இந்த ஏல அறிவிப்பு என்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மாநில அரசின் எவ்வித அனுமதியும் இல்லாமல் ஒன்றிய அரசின் இத்தகைய அறிவிப்பு  மாநில உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். எனவே, மாநில அரசு ஒன்றிய அரசின் இதுபோன்ற திட்டங்களை எந்த  வகையிலும் அமல்படுத்த மாட்டோம்  என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசு இத்தகைய அறிவிப்பினை உடனே திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின்  உணர்வுகளுக்கு எதிராக இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்த  ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்த நினைத்தால் அதற்கு எதிராக விவசாயி களையும், பொது மக்களையும் திரட்டி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டங்களை முன்னெ டுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.