states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவ. 27, 28 சென்னைக்கு மஞ்சள் அலர்ட்

சென்னை, நவ. 23 - சென்னை உள்பட சில மாவட்டங் களில் நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 6 செ.மீ முதல் 12 செ.மீ வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   மேலும், இந்த தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ள வானிலை மையம், வட தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் மழை தொடங்கும் எனவும் கூறியுள்ளது.  தென்கிழக்கு வங்கக்கடலில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி புதிய காற்று தாழ்வு பகுதி உருவானது. இது  அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனக் கூறப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, நவம்பர் 26 அன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல் பட்டில் கனமழை (மஞ்சள் எச்சரிக்கை) தொடங்கலாம். இந்த இரு மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூரில் நவம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் மாறுபட்ட தீவிரத்து டன் (மஞ்சள்/ஆரஞ்சு எச்சரிக்கை) மழை பெய்யக்கூடும். கடலூர் மற்றும் இராமநாதபுரம் இடையே உள்ள 7 மாவட்டங்களில் நவம்பர் 25 முதல் கனமழைபெய்யும். இங்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப் பட்டுள்ளது. நவம்பர் 26 அன்று தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவா் பாலாஜியை தாக்கியவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை, நவ.23- சென்னை கிண்டி கலைஞா் பன்னோக்கு மருத்துவமனையில் புற்று நோய் மருத்துவா் பாலாஜியை கத்தியால் குத்தி தாக்கிய விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி காா்த்திகேயன் முன் விசாரணைக்கு  வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆயுதம் எடுத்து வந்து மருத்துவா் மீது தாக்குதல் நடத்தியுள்ளாா். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடந்து வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விக்னேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

அடுத்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை 

சென்னை, நவ.23- அடுத்த 2025 ஆம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமைகளுடன் 24 நாட்கள் அரசு விடுமுறை தினங்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை நாட்கள் தவிர, இதர பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்படும். அந்த வகையில், அடுத்த 2025 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும் 2025 ஆம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் மூடப்பட வேண்டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடுமுறை நாட்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஏப்ரல் 1 ஆம்  தேதி திங்கள் கிழமை விடுமுறை என்பது வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பொது விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும். விடுமுறையை பொறுத்தவரை, இந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் பொதுவான சனி, ஞாயிறு விடுமுறை நாட்களைத் தவிர வேறு அரசு விடுமுறை என்பது இல்லை. 3 நாள் தொடர் விடுமுறை ரம்ஜான், தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி பண்டிகை ஆகியவை திங்கள் கிழமைகளில் வருவதால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். மேலும், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி ஆகியவை வெள்ளி, சனிக்கிழமைகளில் வருவதால் 3 நாள் தொடர் விடுமுறையாக அமைகிறது. மேலும் இந்தாண்டு, குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, பக்ரீத் பண்டிகை, மொகரம், கிருஷ்ண ஜெயந்தி சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் வருகிறது.

அவதூறு பேச்சு: பாஜகவின் ஹெச். ராஜா மீது வழக்கு

சென்னை,நவ.23-  அமரன் திரைப்படம் வெறுப்பின் விதைப்பு என்றும் வரலாற்று திரிப்பு என்றும் மனிதநேய மக்கள் கட்சி  தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்திருந்தார். ஜவாஹி ருல்லாவின் கருத்துக்கு ஹெச். ராஜா கடும் எதிர்வினை யாற்றியிருந்தார். கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஹெச். ராஜா கூறுகையில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேச  துரோகிகள் என்றும், இவர்களை அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டுமெனவும் கூறினார்.  மேலும், அமரன் திரைப்படத்தை எதிர்ப்பதாகக் கூறி இவர்கள் தேசதுரோகத்தை  பரப்புவதாக இருந்தால், நாட்டை நேசிப்பவர்கள் அவர்களுக்கு எதிராக இருக்க  வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  ஹெச். ராஜாவின் பேச்சு அவதூறு பரப்பும் வகையிலும் மக்கள் ஒற்றுமையை குலைக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறி மனிதநேய  மக்கள் கட்சி சார்பில் போலீ சாரிடம் புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் பேரில்,  ஹெச். ராஜா மீது சென்னை விமான நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

1,475  புதிய பேருந்துகள் ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் தமிழக அரசு தகவல்

சென்னை,நவ.23- புதிதாக வாங்கப்படும் 1,475 பேருந்துகள் வரும் ஜன வரியில் பயன்பாட்டுக்கு வரும் என்று அரசு போக்கு வரத்துத்துறை தெரி வித்துள்ளது.  அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, இந்த  நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள் முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.  அதில், முதல் கட்டமாக, 453 பேருந்துகளுக்கு, கடந்த ஜூலை 18 ஆம் தேதி  ஆணை வழங்கப்பட்டு, 371 பேருந்துகள் பயன் பாட்டிற்கு கொண்டு வரப் பட்டுள்ளன. மீதமுள்ள, 82 பேருந்துகள், இந்த ஆண்டு இறுதிக்குள் பயன் பாட்டிற்கு வரும். இதற் கிடையே, 341 கோடி ரூபா யில் 1,475 புதிய பேருந்துகள் வாங்குவதற்கான  ஆணை வழங்கப்பட்டது. இந்த புதிய பேருந்துகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் பயன் பாட்டிற்கு வரும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டி ருக்கும் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. 

குஜராத்தில்  பாஜக தில்லு முல்லு?

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்  தில் காலியாக இருந்த வாவ்  சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20 அன்று நடை பெற்றது. தேர்தல் பிரச்சாரத்தின் பொழுதே வாவ் தொகுதி முழுவதும் பாஜக அரசு அதிகாரிகள், காவல்துறை யினர் மூலம் வாக்காளர்களுக்கு பணப்  பட்டுவாடா செய்து, காங்கிரஸ் வேட்பா ளரை பிரச்சாரம் மேற்கொள்ள விடாமல்  தடுத்தது.  இத்தகைய தடைகளை எல்லாம் தவிடு பொடியாக்கி வாவ் சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று முதலே காங்கிரஸ் வேட்பா ளர் குலாப்சிங் ராஜ்புத் முன்னிலையில் இருந்தார். ஆனால் கடைசி 2 சுற்றுகளில்  பாஜக வேட்பாளர் சர்தார்ஜி முன்னிலை பெற்று, இறுதிச் சுற்று முடிவில் 2,442 வாக்குகள் வெற்றி பெற்றார்.  வாவ் தொகுதியின் வாக்கு எண் ணிக்கை மொத்தம் 24 சுற்றுகளாக நடை பெற்றது. 22ஆவது சுற்று வரை  காங்கி ரஸ் வேட்பாளர் குலாப்சிங் ராஜ்புத் முன்னிலையில் இருந்தார். ஆனால் கடைசி 2 சுற்றில் பாஜக வேட்பாளர் சர்தார்ஜி வெற்றி பெற்றுள்ளது சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. தில்லு முல்லு  வேலைகளால் வாவ் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப்பில்  பாஜகவிற்கு பலத்த அடி 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது

ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநி லத்தில் டேரா பாபா நானக்,  சாப்பேவால், கிதர்பாகா, பர் னாலா உள்ளிட்ட 4   சட்டமன்ற தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றன. இந்த 4 தொகுதிகளுக்கும் நவம்பர் 20 அன்று வாக்குப்பதிவும், தொடர்ந்து சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் டேரா பாபா நானக் (குர்தீப் சிங்),  சாப்பேவால் (இஷாங்க் குமார்), கிதர்பகா  (ஹர்தீப் சிங்) ஆகிய 3 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும், பர்னாலா  தொகுதியில் (குல்தீப் சிங்) எதிர்க்கட்சி யான காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்  றன. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக 3ஆவது இடத்தை பிடித்து பலத்த  அடியை பெற்றுள்ளது.

மேற்குவங்கத்தில் பாஜக “0”

மேற்குவங்கத்தில் காலியாக இருந்த 6 சட்டமன்ற தொகுதி களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை அன்று எண்ணப்பட்டன. சிதை, மதகரிகத், நைகாட்டி, ஹரோரா, மேதினிப்பூர், தால்தங்கரா உள்ளிட்ட 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக  ஒன்றில் கூட வெற்றி பெறாமல் தங்க முட்டையுடன் (0) மண்ணை கவ்வியது. 

ம.பி.யில் ஆட்டம்  கண்ட பாஜக

தங்கள் கட்சி ஆளும் அசாம், பீகார்  (பாஜக கூட்டணி), உத்தரகண்ட்  உள்ளிட்ட மாநிலங்களில் நடை பெற்ற சட்டமன்ற இடைதேர்தல்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  அனைத்து தொகுதிகளையும்  கைப்பற்றி யது. ஆனால் மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்டம் கண்டது. விஜயப்பூர், புத்னி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. 2 தொகுதிகளிலும் தொடக்  கம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை யில் இருந்தது. 10ஆவது சுற்றுக்கு மேல்  புத்னி தொகுதியில் பாஜக திக்கி திணறி  வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி விஜ யப்பூர் தொகுதியில் எளிதாக வென் றது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கு போதிய நிதி ஒதுக்க மறுக்கும் வளர்ந்த நாடுகள்!

பாகு,நவ.23-  காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் வளரும் நாடுகள் சேதத்தில் இருந்து மீண்டு வர போதிய  நிதி உதவிகளை கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் உட்பட வளர்ந்த நாடுகள் மறுத்துள்ளன. வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளில் இருந்து வெளி யேற்றப்படுகிறார் அல்லது அவர்களின் லாபத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட அதிகள விலான பெட்ரோலியப் பொருட்களில் இருந்து வெளி யான அதிகப்படியான கார்பன் உமிழ்வால் தற்போது உலகம் மிக மோசமான காலநிலை மாற்றத்தை சந்தித்து வருகின்றது.  இந்த மாற்றத்தினால் ஏற்படும் புயல், வெள்ளம் உள்ளிட்டவற்றால் வளரும் நாடுகளே அதிகளவிலான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதனை எதிர்கொண்டு கட்டமைப்புகளை மேம்படுத்த அந்நாடுகளுக்கான போதிய நிதியை வளர்ந்த நாடுகள் ஒதுக்க வேண்டும் என ஆண்டு தோறும் நடைபெறும் காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் (காப் ) விவாதிக்கப்படுகின்றது.    இந்த ஆண்டு அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெறும் காலநிலை மாற்ற உச்சி  மாநாட்டில் வளரும் நாடுகளுக்கு உதவ 2030 வரை  மட்டுமே குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டும் 700 பில்லியன் டாலர்கள்   ( 58 லட்சம் கோடி ரூபாய்கள்) தேவைப்படும் என்பதை வளரும் நாடுகள் ஒப்புக் கொண்டன. எனினும் வளர்ந்த நாடுகள் 2035 வரை ஆண்டுக்கு  250 பில்லியன் டாலர்கள் ( 21  லட்சம் கோடி ரூபாய்கள் ) மட்டுமே தர முடியும் என தெரிவித் துள்ளன. வளர்ந்த நாடுகளின் இந்த நிதி ஒதுக்கீடு பாதிப்பு களை எதிர்கொள்ள போதுமானதாக இருக்காது. மேலும் 2023 வரையே 58 லட்சம் கோடி ரூபாய்கள் வரை தேவைப்படும் நிலையில்  2035 வரை வெறும் 21 லட்சம் கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்வது பாரபட்சமானது. மேலும் 6 சதவீத பணவீக்க  அடிப்படையில் பார்த்தால் இன்றைய மதிப்பு 2035 இல் இருக்காது. வளர்ந்த நாடுகள் 2023 வரை கொடுப்பதாக சொல்லும் 21 லட்சம் கோடி என்பதன் மதிப்பு 2020 ஆம் ஆண்டின் 8 லட்சம் கோடியின் மதிப்பையே கொண்டிருக்கும். இந்த விவாதம் தொடர்ந்த காரணத்தால் வெள்ளி யன்று முடிய வேண்டிய பாகு மாநாடு சனிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பல டிரில்லியன் டாலர்களை போருக்காக மட்டும் செலவு செய்யும் நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளின் குறிப் பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள வளரும்நாடுகள் கேட்கும் தொகை அதிகமாக உள்ளது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

மதுரை, நவ.23-  பண்டிகை கால விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் செங்கோட்டை - தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் (20681/20682) கூடுதலாக ஆறு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.  அதன்படி இந்த ரயில்களில் நவம்பர் 27 முதல் ஜனவரி 30 வரை கூடுதலாக ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர் சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி ஆகியவை  இணைக்கப்பட உள்ளது. தற்போது இந்த ரயில்களில் ஒரு குளிர் சாதன முதல் வகுப்பு பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் என 17  பெட்டிகளுடன் இயங்கி வருகிறது.  மேலும் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுவதால் மொத்தம் 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது. இதே போல நவம்பர் 27 முதல் ஜனவரி 30 வரை  தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் மும்முறை சேவை எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் (22657/22658) கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும்.