‘ஓம் சிவஹோம்’ : மோடி விழாவில் இளையராஜா!
தமிழ்நாட்டு மக்கள் மீது இந்துத்துவா அரசியலை திணிக்கும் முயற்சியாக ‘காசி - தமிழ் சங்கமம்’ என்ற பெயரில் பாஜக-வினர் விழா ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று துவங்கி வைத்தார். இவ்விழாவில், காசியைப் போன்று தமிழ்நாடும் மகத்தான பழமையும், பெருமையும் வாய்ந்தது. கலாசார பெருமை வாய்ந்தது என்று பேசிய மோடி, திருக்குறளின் 13 மொழிகளின் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார். இந்த விழாவிற்கு முன்பு, திருக்குறள் ஏற்கெனவே 82 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாஜக அரசால் மாநிலங்களவை நியமன உறுப்பினராக்கப்பட்ட இசை யமைப்பாளர் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடந்தது. ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓம் சிவஹோம்’ எனத் தொடங்கும் பாடலை இளையராஜா தனது குழுவினருடன் சேர்ந்து பாடினார்.
உ.பி.யில், கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தில் 507 பேர் கைது!
ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜக அரசு, கடந்த 2020-ஆம் ஆண்டு சிறுபான்மையினரைக் குறிவைத்து, கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டு வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் உ.பி. மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக 291 வழக்குகளில் இதுவரை 507 குற்றவாளிகளை உ.பி. காவல்துறை கைது செய்துள்ளது. 291 வழக்குகளில் 150 பேரிடம், தாங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதில் 59 பேர் சிறார்கள் ஆவர். கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ. 15,000 முதல் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லி அமைச்சருக்கு வழங்கப்பட்டது மசாஜ் அல்ல பிசியோதெரபி
பண மோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் தில்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், சத்யேந்திர ஜெயின் சிறையில், மசாஜ் வசதியுடன் சொகுசாக இருப்பதாக பாஜக-வினர் சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்றை பரப்பினர். இந்நிலையில், இந்த வீடியோவுக்கு தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா மறுப்பு தெரிவித்துள்ளார். சத்யேந்திர ஜெயினுக்கு முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் பிசியோதரபி சிகிச்சைதான் அளிக்கப்பட்டது. சிறையில் அவருக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
எம்எல்ஏ-க்களுடன் குதிரை பேரம்: பாஜக தலைவருக்கு சம்மன்!
தெலுங்கானா மாநிலத்தில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் (டிஆர்எஸ்) நான்கு எம்எல்ஏ-க்களை பாஜக பேரம் பேசுவதாகக் குற்றம் சாட்டி, அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வீடியோ அதாரம் வெளியிட்டார். இந்நிலையில், முதல்வர் சந்திரசேகர் ராவ் முன்வைத்த குற்றச்சாட்டின் படி, டிஆர்எஸ் கட்சியின் நான்கு எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முயன்ற குற்றச்சாட்டில் தொடர்புடைய பாஜக மூத்த நிர்வாகி பி.எல். சந்தோஷை, நவம்பர் 21-ஆம் தேதிக்குள் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.
நல்ல விஷயங்களைப் பேசும்போது, தேவையில்லாமல் இது எதற்கு?
“நாட்டில் நிலவி வரும் வெறுப்புணர்வுக்கு முடிவு கட்டும் வகையிலும், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பும் வகையிலும் ராகுல் காந்தியின் யாத்திரை அமைந்துள்ளது. அவர் இந்தப் பிரச்சனைகளை சரியாக எழுப்பியிருக்கிறார். அவர் ஒரு நல்ல வேலையைச் செய்து தேசத்தின் மனசாட்சியைக் கிளறிக் கொண்டிருக்கும்போது, சாவர்க்கரின் பிரச்சினையை அவர் எழுப்ப வேண்டிய அவசியம் எங்கே இருந்தது? அவர் அதைப் புறக்கணித்து, அவர் செய்யும் நல்ல வேலையில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
ஒரு குழந்தை கூட துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம்: அமைச்சர்
சென்னை, நவ.19- ஒரு குழந்தைகூட துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரி வித்துள்ளார். சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தையொட்டி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நவ.19 சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம். குழந்தை களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கல்விக்கு உதவ வேண்டியது நமது கடமை. எந்தக் குழந்தையும் உடல்ரீதி யாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தப் படாமல் பாதுகாப்போம். 14417, 1098 ஆகிய உதவி எண்களை அனைத்து குழந்தைக ளுக்கும் தெரியப்படுத்துவோம். அதற்கான விழிப்புணர்வை மேற்கொள்வோம். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுவிப்பு
கடலூர், நவ.19- நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய தாக சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். இதனிடையே 6 மாத சிறை தண்ட னையை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் சவுக்குசங்கர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் தது. ஆனால் இவர் மீது 4 வழக்குகள் இருந்த தால் ஜாமீனில் வெளிவருவதில் சிக்கல் எழுந்தது. இதனைத்தொடர்ந்து அவர் மீண்டும் சென்னை நீதிமன்றத்தை அணு கினார். ஏற்கனவே பிடிவாரண்டு பிறப் பிக்கப்பட்ட வழக்கும் நிலுவையில் இருந்ததால் விடுதலையாவதில்தாமத மானது. இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் சவுக்கு சங்கர் கடலூர் சிறையி லிருந்து விடுவிக்கப்பட்டார்.
பயிர்க் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு
சென்னை, நவ.19- சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் சாகுபடியை பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் நவம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உழவர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “வடகிழக்குப் பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகள் எழுப்பிய கோரிக்கையின் அடிப்படையில், பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடிய காலங்களில் காப்பீடு செய்ய வழிவகை இல்லாதபோதும், விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசு சம்பா, தாளடி, நெல் பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவ.21 ஆம் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், நவம்பர் 19 ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதிகளில் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், கரூர், தருமபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், மதுரை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, ராமநாத புரம், தேனி, திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய 27 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள், நவம்பர் 21 ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்: அமைச்ச
சென்னை, நவ.19- கனமழை எச்சரிக்கை காரணமாக அவசர கால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி யுள்ளதால், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கன மழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள காரணத் தால், அதனை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையரின் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் 17 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மிக கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர் கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பன்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்டங்களில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல் பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.