சென்னை, டிச.1 - ரூ.2500 கோடி மோசடி செய்துவிட்டு துபாய்க்கு தப்பி சென்ற ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் வெள்ளியன்று (டிச. 1) கைது செய்யப்பட்டார். சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 விழுக்காடு வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 2 ஆயிரத்து 438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவர் ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது.
அதனடிப்படையில் காவல் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. அதன் இயக்குநர்கள், ராஜசேகர் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி மற்றும் கூட்டாளிகள் குறித்து பொருளாதார குற்ற தடுப்பு காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வந்தனர். ராஜசேகர், மகாலட்சுமி ஆகியோர் தேடப்படும் குற்றவாளியாக அண்மையில் அறிவிக்கப்பட்டனர். மேலும் இவர்கள் இருவரும் துபாயில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய, ‘இன்டர்போல்’ எனும் சர்வதேச காவல்துறையின் உதவியை நாடி, அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆருத்ரா வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த ராஜசேகரை துபாய் காவல்துறையினர் வெள்ளியன்று கைது செய்தனர். எம் லாட் சட்ட ஒப்பந்த அடிப்படையில் துபாயில் பதுங்கி இருக்கும் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்து தருமாறு மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கோரிக்கை வைக்கப்பட்டது அடிப்படையில் துபாய் காவல்துறை அவரை கைது செய்தனர்.