கொச்சி, நவ.15- நிலையான வளர்ச்சி மூலம் வறுமை யை ஒழிக்க முடியும் என்பதற்கு கேரளா சிறந்த உதாரணம் என ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் தெரிவித்தார். வறுமை ஒழிப்பில் நாட்டிற்கு முன்மாதிரியாக கேரளா திகழ்கிறது. பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் அர்த்தமுள்ள செயல்பாடு இங்கு நடந்து வருகிறது. பட்ஜெட் ஒதுக்கீட்டில் கணிசமான பங்கை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கிய மாநில அரசின் பணி பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார். ‘நிலையான வளர்ச்சி இலக்கு களின் உள்ளூர்மயமாக்கல் - கிராம பஞ்சாயத்துகளில்’ என்ற தலைப்பில் உள்ளாட்சித் துறை மற்றும் கேரள உள்ளூர் நிர்வாகக் கழகம் இணைந்து நெடும்பாச்சேரி சயால் மாநாட்டு மையத்தில் மூன்று நாள் தேசிய பயில ரங்கை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். கிராம பஞ்சாயத்துகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும், தன்னிறைவு அடையவும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டு முயற்சிகள் அவசியம். ஒவ்வொரு ஊராட்சியின் வளர்ச்சி யும் ஊராட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும். பஞ்சாயத்துகள் தங்கள் சொந்த வருமானத்தை உருவாக்க வேண்டும். கிராமங்கள் தங்களுக்குத் தேவை யான பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் மாற வேண்டும்.
நிலையான வளர்ச்சியின் மூலம் தன்னிறைவு பெற்ற கிராமங்களை இலக்காகக் கொண்டு செயல்படும் போது எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க புதிய வாய்ப்புகளை விவா தங்கள் மற்றும் புதிய முன்னோக்குகள் மூலம் கண்டறிவதே இத்தகைய பயி லரங்குகளின் நோக்கமாகும் என்றார். ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன், கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் ஆகியோர் உரையாற்றினர். நிதி ஆயோக் தேசிய சுகாதாரக் குறியீட்டில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது வறுமை ஒழிப்பில் கேரளம் எந்த நிலையில் உள்ளது என்பதைப் பிரதிபலிப்பதாக உள்ளது என அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தெரி வித்தார். தீவிர வறுமையை ஒழிக்க மாநில அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக குடும்பஸ்ரீ மூலம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை கண்டறியும் பணி நிறைவடைந்துள்ளது எனவும் அவர் கூறினார். “பஞ்சாயத்துகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளூர்மய மாக்கல்” என்ற தலைப்பில் கேரள மாநில சாலை வரைபடம் மற்றும் “பங்கேற்பு தீவிர வறுமை மதிப்பீடு: கேரள அனுபவங்கள்” புத்தகம் வெளி யிடப்பட்டது. கூடுதல் தலைமைச் செயலாளர் சாரதா.ஜி.முரளீதரன், ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சக செயலர் நாகேந்திர நாத் சின்ஹா, ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலர் சுனில்குமார் உள்ளிட் டோர் பேசினர். உள்ளாட்சித்துறை முதன்மைச் செயலர் டாக்டர். சர்மிளா மேரி ஜோசப், ஊரக வளர்ச்சி ஆணை யர் எம். ஜி.ராஜ மாணிக்கம், குடும்பஸ்ரீ நிர்வாக இயக்குநர் ஜாபர் மாலிக், ஊராட்சி இயக்குநர் எச்.தினேசன், கேரளா இன்ஸ்டிடியூட் ஆப் லோக்கல் அட்மினிஸ்ட்ரேஷன் இயக்குநர் டாக்டர். ஜாய் இளமன், பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.