states

img

புலம்பெயர்ந்தோர் மறுவாழ்வில் அக்கறை இல்லை

திருவனந்தபுரம், ஜன. 1- புலம்பெயர்ந்தவர்களிடம் பல கோடி ரூபாய் வசூலிக்கும்  ஒன்றிய அரசு, அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். பல ஆண்டுகளாக விமானக் கட்டணத்தில் புலம்பெயர்ந்தோர் கடும் சுரண்டலுக்கு ஆளாகி வருகின்றனர் என்றார். கின்ஃப்ரா ஃபிலிம் மற்றும் வீடியோ பூங்காவில்  புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பினால் நிறுவப்பட்ட  எக்ஸ்பாட் பிரிண்ட் ஹவுஸை அவர் சனிக்கிழமை யன்று (டிச.31)  திறந்து வைத்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், “புலம்பெயர்ந்தோரின் மீள் குடியேற்றம் பற்றி மாநில அரசு மட்டும் சிந்தித்தால் போதாது. ஒன்றிய அரசு பல ஆண்டுகளாக புலம்பெயர்ந்தோரிடம்  இருந்து கோடிக்கணக்கில் வசூல் செய்துவருகிறது. மறு வாழ்வுக்கு அதன் வட்டி மட்டுமே போதுமானது. தற்போது விமான நிறுவனங்கள் உள்நாட்டு  கட்டணத்தையும் உயர்த்தியுள்ளன. இந்த சுரண்டல் குறித்து பலமுறை கவனத்திற்கு கொண்டு சென்றும், ஒன்றிய அரசு தலையிடவில்லை. கேரளத்தில் வசிக்காதவர்களால் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்” என்றும் முதல்வர் கூறினார். பிரவாசி (புலம்பெயர்ந்தோர்) கூட்டமைப்பு மாநில தலைவர் பினாய் விஸ்வம் எம்.பி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன் அச்சகத்தை இயக்கினார். அமைச்சர்கள் பி.பிரசாத், ஜி.ஆர்.அனில், துணை மேயர் பி.கே.ராஜூ, சட்டமன்ற உறுப்பினர்கள் கடகம்பள்ளி சுரேந்திரன், இ.டி.டைசன் உள்ளிட்டோர் பேசினர்.