states

img

மோடியின் “புதிய இந்தியா” என்பது இந்துத்துவா, கார்ப்பரேட்டுகள்,ஏகாதிபத்தியம் - பிரகாஷ் காரத்

மோடியின் புதிய இந்தியா என்பது இந்துத்துவா-கார்ப்பரேட்டுகள்-ஏகாதிபத்தியக் கலவையேயாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சாடினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில 23ஆவது மாநாடு, கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் உள்ள கங்காவதி என்னும் நகரில் ஜனவரி 2-4 தேதிகளில் நடைபெற்றது. மாநாடு, தோழர்கள் கே.வரதராசன்-பாலப்பா நகரில் நடைபெற்றது. கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக 300 பிரதிநிதிகள், பார்வையாளர்கள் உட்பட 500 பேர் மட்டுமே துவக்க நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்கள்., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், எம்.ஏ.பேபி மற்றும் பி.வி.ராகவலு மாநாட்டில் பங்கேற்றார்கள்.

பிரகாஷ் காரத்

மாநாட்டில் பிரகாஷ் காரத் துவக்கவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

“மோடியின் புதிய இந்தியாவின் மூன்று தூண்கள் எனப்படுபவை இந்துத்துவா, கார்ப்பரேட்டுகள் மற்றும் ஏகாதிபத்தியம் என்பவைகளாகும்.

உலக மக்களைக் கடுமையாகப் பாதித்த  கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தத் தொற்றுக்கு எதிராக மக்களைக் காப்பாற்றுவதில் முதலாளித்துவ நாடுகளுக்கும், சோசலிச நாடுகளுக்கும் இருந்த வேற்றுமையை மிகவும் தெளிவாகக் காட்டிவிட்டது. சின்னஞ்சிறிய நாடான கியூபா கோவிட்-19க்கு எதிராக ஆறுவிதமான தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து, வளர்த்தெடுத்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பெருந் தொற்றானது பணக்கார முதலாளித்துவ நாடுகளுக்கும் வளர்முக நாடுகளில் வாழும் மக்களுக்கு இடையேயான முரண்பாடுகளையும் விரிவுபடுத்தியிருக்கிறது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ள அதேசமயத்தில், ஏழை வளர்முக நாடுகளில் உள்ள மக்களுக்கு, அறிவுசார் சொத்துரிமைகள் சட்டத்தைக் காட்டித் தடுப்பூசிகளை அனுப்பிவைப்பதற்குக்கூட அவை மறுத்துவிட்டன.   

கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்து வேலையின்மை மிகவும் உச்சத்திற்குச் சென்று மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்டுள்ளது. உலகம் முழுதும் ஆட்சிகளில் உள்ள வலதுசாரி அரசாங்கங்கள் அமெரிக்காவுடன் கைகோர்த்துக்கொண்டுள்ளன. இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களும் அதன் ஓர் அங்கமாக மாறிவிட்டனர்.

மோடி அடிக்கடிப் பேசிவரும் “புதிய இந்தியா” என்பது இந்துத்துவா பார்வையுடன் கூடிய கார்ப்பரேட் ஆதரவு, ஏகாதிபத்திய ஆதரவு இந்தியாவேயாகும். புதிய நாடாளுமன்றம் கட்டிமுடிக்கப்பட்டபின், இப்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுவிடும்.  உண்மையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்தை நடத்திடவே விரும்பவில்லை. ஜனநாயகரீதியாக விவாதத்திற்கு உட்படுத்தாமல் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு அனைத்தையும் நிறைவேற்றவே விரும்புகிறார்கள். இவ்வாறாக அவர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும்கூட அருங்காட்சியகத்தில் வைத்திடவே விரும்புகிறார்கள்.

இவ்வாறு இவர்கள் மக்களுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடுத்துள்ள அதே சமயத்தில் அவற்றுக்கெதிரான போராட்டங்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. வரலாற்றின் சக்கரங்கள் உருண்டுகொண்டிருக்கின்றன. எனினும் மிகவும் மெதுவாகவே நகர்ந்துகொண்டிருக்கின்றன. சிலியில் இடதுசாரிகளின் வேட்பாளரான முன்னாள் மாணவத் தலைவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சிலி நாட்டில்தான் முதன்முறையாக நவீன தாராளமய சீர்திருத்தக்கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன.

இந்தியாவிலும் இந்துத்துவா-கார்ப்பரேட்டுகளின் தாக்குதலுக்கு எதிராகப் போராட்டங்கள் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும், குடியுரிமைத் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு எதிராகவும் பெரிய அளவில் இயக்கங்கள் நடைபெற்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள்-தொழிலாளர்கள் ஒன்றுபட்ட போராட்டம் வரலாறு படைத்திருக்கிறது.

இந்துத்துவா-முதலாளித்துவக் கட்சிகளுக்கு எதிராக ஒரு மாற்றைக் கட்டி எழுப்பவேண்டிய அவசியமாகும். இந்தப் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு சுயேச்சையான சக்தியாக வலுப்படுத்தி உயர்த்தவேண்டியதும் அவசியமாகும். இந்தப் பிரச்சனை மீது வரவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாடு உரிய உத்திகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார்.

யு.பசவராஜ் மாநில செயலாளராகத் தேர்வு

பின்னர் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் யு.பசவராஜ் மீண்டும் மாநில செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

(ந.நி.)