கொல்கத்தா, ஆக.13-
அணிதிரட்டப்படாத சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 2019ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டுள்ள மிகக்கொடிய சட்டத் திருத்தங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுக் குழுக் கூட்டம் கொல்கத்தாவில் ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் நடைபெற்றது. கூட்டத்தினை தலைவர் நிபல்தேவ் பட்டாச்சார்யா, செயல் தலைவர் கே.கே. திவாகரன், மூத்த துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் ஆகியோர் தலைமையேற்று நடத்தினார்கள். சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் கூட்டத்தைத் துவக்கி வைத்தார். சம்மேளன பொதுச் செயலாளர் ஆர். லட்சுமணய்யா அறிக்கை தாக்கல் செய்தார். சிஐடியு தேசிய செயலாளர் ஆர்.கருமலையான் கூட்டத்தில் உரைநிகழ்த்தினார்.
16 மாநிலங்களிலிருந்து 170 பிரதிநிதிகள் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். சாலைப் போக்குவரத்துத்துறையில் உள்ள பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் இத்துறை மிகவும் சுமையாகியும் நலிவடைந்தும் போயுள்ளது. கண்மூடித்தனமான முறையில் பெட்ரோல்-டீசல், எரிவாயு விலைகளை உயர்த்தியிருப்பது, இன்சூரன்ஸ் பிரிமியங்களை உயர்த்தியிருப்பது மற்றும் சுங்கக் கட்டணங்கள் இத்தொழிலில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதற்குப் பிரதான காரணங்களாகும்.
ரூ.5லட்சம் கோடி வருமானம் ஈட்டியும்...
அணிதிரட்டப்படாத சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் பரிதாபமான முறையில் இருக்கிறது. அவர்கள் எந்தவிதமான தொழிலாளர் நலச் சட்டங்களுக்குள்ளும் கொண்டுவரப்படவில்லை. இந்தத்துறையிலிருந்து மட்டும் ஒன்றிய அரசாங்கம் ஆண்டு தோறும் 5 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேல் வருவாய் ஈட்டியபோதிலும், இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புச் சட்டம் எதுவும் கிடையாது.
மேலும் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டு இந்தியத் தண்டனைச் சட்டத்தில் தண்டனை ஷரத்துகள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்கிற விதத்தில் அநியாயமான முறையில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் 2024 ஜூலையிலிருந்து அமலுக்கும் வந்துவிட்டது. இந்தச் சட்டம் ஓட்டுநர்களை சிறைகளில் அடைத்திட இட்டுச் செல்லும்.
“அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு” (“All India Coordination Committee of Road Transport Workers Organizations”) என்னும் பதாகையின்கீழ் அகில இந்திய சாலைப் போக்குவரத்து சம்மேளனம் மேற்கொண்ட கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் பிரதிநிதித்துவங்களுக்கு ஒன்றிய அரசாங்கம் செவிசாய்த்திடவில்லை.
இத்தகைய பின்னணியில் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்திட இந்தக் கூட்டம் உறுதிபூண்டுள்ளது. இது தொடர்பாக நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசாங்கத்தின் படுபிற்போக்குத்தனமான கொள்கைகளை எதிர்த்துப் போராடவும், போக்குவரத்துத் துறையைப் பாதுகாத்திடவும், இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஒரு நாகரிகமான ஊதியத்தைப் பெற்றுத்தரவும் ஒரு பொது மேடையை அமைத்திட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுமாறு சம்பந்தப்பட்ட மாநிலக் குழுக்கள்/சம்மேளனங்கள்/சங்கங்களை கூட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் வயநாடு நிவாரண நிதிக்குக் கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கினர்.
(ந.நி.)