science

img

அறிவியல் கதிர்

1)  தண்டுவட சேதத்திற்கு புதிய சிகிச்சை
உடலின் கீழ்ப்பகுதி முழுவதும் பக்கவாதத்தால் முடக்கப்பட்ட மூவருக்கு சோதனை முறையாக தண்டுவட தூண்டுதல்கள் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விபத்தில் சிதைந்த பகுதிக்கு கீழே தண்டுவடத்திற்கு அருகில் மின்முனை அடுக்குகள் பொருத்தப்பட்டன. மூளையிலிருந்து வரும் சமிக்கைக்குப் பதிலாக இந்த மின்முனைகள் மூலம் மின் சமிக்கைகள் தரப்படுகின்றன. இதன் மூலம் காலை உயர்த்துவது,ஏறுவது,உட்கார்ந்து எழுவது போன்ற இயக்கங்களை செய்ய தசைகள் தூண்டப்படுகின்றன. இந்த ஆய்வு பிப்ரவரி மாத நேச்சர் மெடிசின் (Nature Medicine) இதழில் வந்துள்ளது. மூவரில் ஒருவரான ரோசெட்டிக்கு ஐந்து வருடங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் உடலின் கீழ்ப்பகுதி செயலிழந்துவிட்டது. இன்று அவர் இந்த சிகிச்சையின் மூலம் நிற்கவும் நடக்கவும் மாடி ஏறவும் முடிகிறது.    ஆனால் விபத்தினால் உடல் பகுதிகள் செயலிழந்தவர்களின் பிரச்சனை இது மட்டுமல்ல. குறைந்த ரத்த அழுத்தம், பாலுறவு செயலிழப்பு, மூச்சுத் திணறல், கை கால்கள், சிறுநீர்ப்பை, மலக் குடல் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாமை போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். தண்டுவடத்தின் மொழியை புரிந்துகொள்வதன் மூலம் விபத் தினால் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்ய கற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

2) மாற்று உறுப்பு சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு
   இறந்தவர்கள் உடலிலிருந்து எடுக்கப்படும் மாற்று உறுப்புகள் இன்னொருவருக்கு சில குறிப்பிட்ட நேரத்திற்குள் பொருத்தப்பட வேண்டும். இதற்கு முன் இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தலை துண்டிக்கப்பட்ட பன்றியின் மூளையை பிரைன் எக்ஸ் என்கிற பொறியின் மூலம் மூளையிலுள்ள செல் இயக்கங்களை தொடர்ந்து இயங்க வைத்துள்ளனர்.இந்த முறையை மற்ற உறுப்புகளுக்கும் ஆர்கன் எக்ஸ் என்கிற அமைப்பின் மூலம் விரிவாக்க முடியுமா என்கிற ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.  செயற்கை திரவத்தை பன்றியின் உடலுக்குள் செலுத்துவதன் மூலம் இதயம் மற்றும் நுரையீரலின் வேலையை செய்ய வைப்பதே இதன் நோக்கம். சோதனை சாலையில் தயாரிக்கப்பட்ட திரவத்தை பன்றியின் ரத்தத்தோடு 1:1 என்கிற விகிதத்தில் கலந்து செலுத்தப்பட்டது.இந்த திரவம் செல்களுக்கு தேவையான ஆக்சிஜன்,சத்துப் பொருட்கள் ஆகியவற்றை அளிப்பதோடு ரத்தம் உறைவதை தடுக்கிறது. வீக்கத்தை தடுப்பதோடு செல்கள் இறக்காமல் பாதுகாக்கிறதாம்.  இந்த சோதனையின்போது இறந்த பன்றிகளில் ஒரு பிரிவு இப்போதுள்ள எக்மோ முறையிலும் இன்னொரு பிரிவு புதிய ஆர்கன் எக்ஸ் முறையிலும் வைக்கப்பட்டன.எக்மோ முறையோடு ஒப்பிடும்போது புதிய முறையில் திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் அதிக திரவங்கள் கிடைத்தன. குறைவான செல்கள் இறந்தன. இதயம் நின்ற பிறகு திசுக்களுக்கு ஏற்படும் அழிவை சிறுநீரகம் உட்பட சில திசுக்கள் தாங்களே இந்த முறையின் மூலம் சரி செய்து கொள்வதும் காணப்பட்டது.  எதிர்காலத்தில் மனித உறுப்புகளை பாதுகாக்க இந்த முறை பயன்படலாம். ஆனால் விலங்கு மாதிரிகளில் நடக்கும் இந்த ஆய்வுகளில் நிறைய ஆய்வுப் பணிகள் செய்யப்பட வேண்டியதிருக்கிறது என்கிறார் யேல் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நரம்பியல் மருத்துவர் ஆய்வாளர் நெனாட் செஸ்டன்

3)  பால் செரிமானம்  எப்போது தொடங்கியது?
     பாலில் உள்ள சர்க்கரையான லேக்டோஸ் செரிமானம் சிலருக்கு பிரச்சனையாக உள்ளது. மனிதர்கள் எப்போது பாலை அருந்த தொடங்கினார்கள், எப்போது அதை செரிக்கும் மரபணு தோன்றியது என்பது குறித்து இங்கிலாந்து நாட்டிலுள்ள பிரிஸ்டோல் பல்கலைக்கழக ஆய்வாளர் ரிச்சர்ட் எவெர்ஷெட் மற்றும் அவரது குழுவினரும் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.  9000 ஆண்டுகளுக்கு முன் கால் நடை வளர்ப்பாளர்கள்  ஐரோப்பாவின் தென் கிழக்கு பகுதிக்கு வந்து சேர்ந்ததிலிருந்து பால் குடிக்கும் பழக்கம் தொடங்கியது. ஆனால் பெரும்பாலான ஐரோப்பியர்கள் பாலை செரிமானம் செய்யும் மரபணுவை பரிணாமம் மூலம் பெறுவதற்கு அதற்குப் பிறகும் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகள் ஆனதாம். நூற்றுக்கணக்கான தொல்லியியல் இடங்களிலிருந்து கிடைத்த விலங்கு கொழுப்பு எச்சங்கள் மற்றும் மரபணு தரவுகளிலிருந்து இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. பால் குடிப்பவர்களில் அதை செரிமானம் செய்ய முடியாதவர்கள் வயிற்றுப்போக்கு, வாயு, உப்புசம், வயிற்று வலி ஆகியவற்றை எதிர்கொண்டனர்.ஆனால் இந்த சாதாரண சிரமங்கள் பாலை செரிமானம் செய்யும் மரபணுவை தோற்றுவிக்க போதுமானவை அல்ல. ஆனால் பஞ்சம், தொற்று நோய் போன்ற காலங்களில் லேக்டோஸ் தூண்டுதலால் ஏற்படும் வயிற்றுப் போக்கு வேளாண்மை செய்யும் மக்களிடையே சத்துக் குறைவான நபர்களின் மரணத்திற்கு கூட காரணமாகலாம். மீண்டும் மீண்டும் ஏற்படும் இத்தகைய நிகழ்வுகள் லேக்டோஸ் செரிமானத்திற்கு இட்டு சென்றிருக்கலாம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். லேக்டோஸை வேதியியல் ரீதியாக உடைத்து செரிமானம் செய்ய உதவும் லேக்டேஸ் என்சைமின் இயக்கத்தை அதிகப்படுத்தும் மரபணுவிற்கான தடயம் 6500 ஆண்டுகளுக்கு முன்தான் கிடைத்துள்ளது.ஆனால் இது பரவலாக மேலும் 3500 ஆண்டுகள் தேவைப்பட்டன.

4)  மழை நீரிலும் மாசு
பூமியின் தொலைதூர பகுதிகளில் கிடைக்கும் மழை நீரில் கூட புற்று நோய் ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இருப்பதாகவும் அதனால் அது குடிப்ப தற்கு பாதுகாப்பானதல்ல என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மனித னால் உண்டாக்கப்பட்ட பிஎப்ஏஎஸ்  (PFAS)poly Fluoro Alkyl Substances) எனப்படும் இந்த வேதி பொருட்கள் நீரோட்டங்கள், கடல், மண், காற்று மண்டலம் ஆகியவை மூலம் உலகெங்கும் பரவியுள்ளதாம்.அது மழை நீரிலும் பனிப்பொழிவிலும் காணப்படுவதாக இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

5) எரிமலை வெடிப்பினால் அதிகமாகும் நீராவி
தெற்கு பசிபிக் பகுதியில் கடலுக்கடியில் ஜனவரி மாதம் வெடித்த எரிமலை பூமியின் காற்று மணடலத்தில் அதிக அளவு நீரை சேர்த்திருக்கிறது என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். காற்று மணடலத்தில் ஸ்ட்ரேடோஸ்ஃபியர் எனும் பகுதியில் 146 டெராகிராம்(14600கோடி கிலோகிராம்) நீராவியை சேர்த்ததாம். அங்கு ஏற்கனவே உள்ள நீராவியின் அளவில் இது 10% ஆகும்.பூமியின் சராசரி வெப்பத்தை தற்காலிகமாக சிறிய அளவு அதிகரிக்க இது போதுமானதாம்.

;