♦பயங்கரக் கனவுகளிலிருந்து விடுதலை
அடிக்கடி பயங்கர கனவுகள் காண்பது ஒரு கோளாறு(nightmare disorder) என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் தூக்கம் கெடுவதுடன் உடல்நலமும் பாதிக்கப்படுகிறதாம். இந்த வகையான நோயாளிகள் விழித்திருக்கும் போது தங்கள் கனவுகளை நேர்மறை நோக்கோடு மீண்டும் கற்பனை செய்வதே (imagery rehearsal therapy- IRT) இதற்கான சிகிச்சை. இதை மேலும் செழுமைப்படுத்த ஜெனிவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சோஃபி ஸ்வார்ட்ஸ் மற்றும் அவரது குழுவினர். குறிப்பிட்ட நினைவை மீட்கும் டிஎம்ஆர் targeted memory reactivation -TMR) என்கிற வழியைக் கையாண்டுள்ளார்கள் ஒருவர் ஒன்றைக் கற்கும்போது ஒரு ஒலி இசைக்கப்படுகிறது. பின் அவர் தூங்கும்போது அது மீண்டும் ஒலிக்கப்படுகிறது. அதைக் கேட்கும்போது அதனுடன் இணைந்த நினைவுகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வலுவடைகிறது. இதுவே டிஎம்ஆர் ‘பயங்கர கனவு கோளாறு’ உள்ள 36 பேருக்கு ஐஆர்டி பயிற்சி அளித்தார்கள்.அவர்களில் சிலர் அமைதியாகவும் மீதிப் பேர் பியானோ இசையுடன் தங்கள் கனவுகளை மீட்டுருவாக்கம் செய்ய பயிற்றுவிக்கப்பட்டனர். இரண்டு வாரங்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு கனவுகள் குறித்து நாட்குறிப்பில் பதிந்தனர். அவர்கள் உறங்கும்போது தலைப்பட்டை மூலம் மூளையின் மின் இயக்கங்களை கண்காணித்தனர். எல்லோருக்கும் பியானோ இசை ஒலிக்கப்பட்டது. இசையுடன் பயிற்சி எடுத்தவர்களுக்கு பயங்கர கனவுகள் முற்றிலும் நின்று போயின.இசை இல்லாமல் பயிற்சி எடுத்தவர்களுக்கும் சிறிது முன்னேற்றம் உண்டானது. இந்த முறையின் பலனை உறுதிப்படுத்த அதிக அளவிலான சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்கிறார்கள்.
♦அச்சு நீக்கம் செய்யும் கருவி
இந்த எண்ணியல் யுகத்திலும் பேப்பரின் பயன்பாடும் அச்சிடுவதும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. மரங்கள் கார்பன் சேமிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் பேப்பர் தயாரிக்க மரங்கள் வெட்டப்படுவதோடு அவற்றை தயாரிக்கவும் அதிக ஆற்றல் செலவிடப்பட வேண்டியதிருக்கிறது. இதற்குத் தீர்வாக பலமுறை பயன்படுத்தும் பேப்பரையும் அச்சிட்ட மையை உறிஞ்சும் பிரிண்டரையும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ரீப் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. லேசர் டிபிரிண்டிங்(laser de-printing) எனும் முறை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேப்பரில் உள்ள விசேச பூச்சு, மை பேப்பரினுள் உறிஞ்சப்படாமல் தடுக்கிறது. மை நீக்கத்தின்போது சக்தி வாய்ந்த லேசர் மூலம் மை உறிஞ்சப்படுகிறது. அதை ஆவியாக்கி பின் எஞ்சும் துகள்களை மீண்டும் மை தயாரிக்க பயன்படுத்தலாம். இப்போதுள்ள பிரிண்டர்களிலும் இதைப் பொருத்தலாம்.வாடிக்கையாளருக்கு இந்த நிறுவனமே அச்சு நீக்கும் கருவியோடு பல முறை பயன்படும் பேப்பரையும் வழங்குகிறது.பேப்பர் மற்றும் அச்சின் தரம் எந்த விதத்திலும் சமரசம் செய்யப்படவில்லை என்கிறார்கள் அந்த நிறுவனத்தினர்.
♦ தொழுநோய்க் கிருமியிடமிருந்து ஒரு புதிய பாடம்
மனித ஈரலை வளர்ச்சி அடைய வைக்கவும் புத்தாக்கம் செய்யவும் முடியுமா என்கிற கேள்விக்கு அறிவியல் ஒரு விடை கண்டுள்ளது. தொழுநோயை உண்டாக்கும் கிருமிக்கு ஈரலிலுள்ள செல்களை மறுகட்டமைப்பு செய்து ஈரலின் அளவை பெரிதாக்கும் திறன் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது ஈரலில் சிதைவு, வடு மற்றும் கட்டிகள் ஏற்படுவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது. தொழுநோய்க் கிருமி தொற்று ஏற்பட்ட எறும்புதின்னி போன்ற விலங்குகளில் ஆரோக்கியமான, சிதைக்கப்படாத பெரிய ஈரல்கள் வளர்வதை அறிவியலாளர்கள் கண்டுள்ளனர். சாதாரண ஈரலில் உள்ளதைப்போலவே இவற்றிலும் ரத்தக் குழாய்கள்,செயல்படும் இதழ்கள் போன்ற முக்கிய திசுக்கள் காணப்படுகின்றன. ஈரலில் மறைந்துள்ள புத்தாக்கம் செய்யும் திறனை இந்த பேக்டீரியாக்கள் தனதாக்கிக்கொண்டு ஈரலின் அளவை பெரிதாக்குகின்றனவாம். இதன் மூலம் தான் வளர்வதற்கு அதிக செல்கள் கிடைப்பதை வழிவகை செய்கின்றன. இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு மனித உடலில் வயதான ஈரலை புத்தாக்கம் செய்யவும் நோயில்லாமல் அதன் வாழ்நாளை அதிகப்படுத்தவும் செய்யலாம் என்பதைக் காட்டுகிறது.
♦ பாலங்களின் உறுதித் தன்மை கை பேசியில்
அண்மையில் குஜராத்தில் மோர்பி பாலம் அறுந்து விழுந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அதேபோல் அமெரிக்காவில் பிட்ஸ்பர்கில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. எனவே பாலங்களின் பாதுகாப்பு குறித்து விவாதம் எழுந்துள்ளது. பாலங்களின் கட்டுமான ஆரோக்கியத்தை பலவழிகளில் கண்காணிக்கின்றனர். சென் சார்கள், வேகமானிகள், அதிர்வுக்கருவிகள், சாய்வுமானிகள், ஒலி உணர்விகள், வெப்பமானிகள் போன்றவை இவற்றில் அடங்கும். ஆண்டுக்கு ஒருமுறை நேரடியாக சென்று சோதனை செய்வதும் உண்டு. இப்போது இவற்றை விட குறைந்த செலவில் அதிக தரவுகளை சேகரிக்கும் முறையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்மார்ட் கை பேசியில் வேகமானியும் புவி இருப்பிட காணும் முறையும் (Accelerometers and GPS sensors) உள்ளன. இவற்றை பயன்படுத்தி வாகனங்கள் பயணிக்கும்போது பாலம் எவ்வாறு அதிர்கிறது என்பதைக் கண்காணிக்கலாம் என்கிறார் ராணுவக் கழகத்தை சேர்ந்த பொறியாளர் தாமஸ் மாட்டர்ஸோ.இதற்காக அவர் சான்பிரான்சிஸ்கோவிலுள்ள கோல்டன் கேட் தொங்கு பாலத்தில் தனது காரில் செல்போனுடன் 102 முறை பயணித்தார். அவரது குழுவினர் ஊபர் ஊட்டுனர்களிடமிருந்து 72 பயண தரவுகளை சேகரித்தனர். சாதாரண மேம்பாலங்களில் இந்த சோதனை எவ்வாறு செயல்படுகிறது என்பதற்காக இத்தாலியில் கான்கிரீட் பாலத்தில் 280 முறை ஒட்டுனர்களிடமிருந்து தரவுகளைப் பெற்றனர். இரண்டு பாலங்களிலிருந்தும் பெறப்பட்ட அதிர்வு குறித்த தரவுகள் பாலங்களில் பொருத்தப்படும் கருவிகளிலிருந்து பெறப்படும் தரவுகளை ஒத்திருந்தன. நிலையாகப் பொருத்தப்பட்ட நூறு சென்சார்களைவிட ஒரு கைபேசி அதிக தரவுகளை சேகரிக்குமாம். இந்த முயற்சியில் போக்குவரத்து நிறுவனங்கள்,அரசு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்தால் அதிகமான தகவல்கள் கிடைக்கும்; அது மிகத் துல்லியமான அளவீடுகளுக்கு இட்டு செல்லும். இவ்வாறு மக்கள் திரளிடமிருந்து பெறப்படும் வழிமுறை, நிலையான கண்காணிப்பு சென்சார்களை முற்றிலுமாக நீக்கிவிடாது. ஆனால் பாலங்களில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டுக்கு ஒரு முறை சோதிப்பதைவிட நாட்கணக்கில், வாரக்கணக்கில் சோதிப்பது மேம்பட்டது.