கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வடகிழக்கு அமெரிக்க பகுதிக்கு அருகே உள்ள அட்லாண்டிக் கடலுக்குள் நடத்திய ஆய்வில், மிகப்பெரிய நன்னீர் ஏரி புதைந்திருப்பது தெரியவந்துள்ளது.
கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வடகிழக்கு அமெரிக்க பகுதிக்கு அருகே உள்ள அட்லாண்டிக் கடற்பகுதியில், ஆய்வு ஒன்று மேற்கொண்டனர். எலெக்ட்ரோ மேக்னடிக் சென்சார்கள் பொருத்தப்பட்ட சிறிய வகை படகு ஒன்று நியூ ஜெர்சியிலிருந்து மாஸச்சஸட்ஸ் வரை பயணித்து, சுமார் பத்து நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், கடலுக்குள் மிகப்பெரிய நன்னீர் ஏரி புதைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நன்னீர் ஏரி அட்லாண்டிக் கடலில் சுமார் 600 அடிக்கு கீழாக சுமார் 50 மைல் அளவிற்கு பரவியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீர்நிலை ஒன்டாரியோ ஏரியை விட இரண்டு மடங்கு பெரிதாகும். பொதுவாகவே கண்டத்தட்டுகள் இடப்பெயர்ச்சி அடையும்போது நிலத்திற்கு அடியில் இப்படி நன்னீர் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
இவை நன்னீர் என்று அழைக்கப்பட்டாலும் நாம் குடிக்கும் நீரைப்போன்று அவை இருப்பதில்லை. ஆனால் கடல் நீரைப்போன்று உப்பாகவும் இவை இருக்காது. மாறாக கடல் நீரின் உவர் தன்மையில் ஆயிரத்தில் ஒரு மடங்குதான் இந்த நீரில் உப்பு இருக்கும். இதுவே நிலப்பரப்பிற்கு அருகில் இருந்தால் அவை குடிநீர் போலவே இருக்கும். இதுகுறித்த மேற்கட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.