சென்னை, நவ.26- புவி கண்காணிப்புக்கான இஓஎஸ் - 06 உட்பட 9 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி54 ராக்கெட் சனிக்கிழமையன்று (நவ.26)வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 என்ற நவீன செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக் கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி -சி54 ராக்கெட் மூலம் சனிக்கிழமை யன்று (நவ.26) காலை 11.56 மணிக்கு திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்-டவுன் வெள்ளியன்று (நவ.25) காலை 10.26 மணிக்கு தொட ங்கியது. 8 நானோ செயற்கைக் கோள்களும் ஒவ்வொன்றாக திட்டமிட்டபடி நிலை நிறுத்தப் பட்டது. இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதிப் படுத்தினார்.
இந்த ராக்கெட் மூலமாக இஓஎஸ்-06 மட்டுமின்றி, அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட் (4), துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட் (2) மற்றும் ஐஎன்எஸ்-2பி, பிக்சல் நிறுவனத்தின் ஆனந்த் என 8 நானோ செயற்கைக் கோள்கள் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இஓஎஸ்-06 செயற்கைக் கோள் 1,117 கிலோ எடை கொண்டது. இது கடல் நிறம், மேற்பரப்பு வெப்ப நிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளி யியல் மாற்றங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்ந்து கண் காணித்து தரவுகளை வழங்கும். இதுதவிர ஐஎன்எஸ்-2பி செயற்கைக் கோள் இந்தியா - பூடான் ஆகிய நாடுகளின் கூட்டிணைப்பில் தயாரிக்கப்பட்டது. கடந்த 2019-இல்பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பூடான் சென்றபோது, இரு நாடு கள் இடையே செயற்கைக் கோள் கூட்டு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் தற்போது ஐஎன்எஸ்-2பி செயற்கைக் கோள் ஏவப்பட உள்ளதாகவும், இது பூடானை வலம்வந்து ஆய்வு மேற்கொள்ளும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 8 நானோ செயற்கைக் கோள்கள் வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன. 9 செயற்கைக் கோள்களும் விண் ணில் வெற்றிகரமாக செலுத்தப் பட்டதை தொடர்ந்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.