politics

img

சாதனைகள் படைத்த அறிஞர்கள் / கலைஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு ? சிபிஎம் கண்டனம்


புதுதில்லி, 

 நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்துள்ள அறிஞர்கள்/ கலைஞர்கள் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்துள்ளமைக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாட்டின் பல பகுதிகளிலும் குண்டர் கும்பல்களின் வன்முறை வெறியாட்டங்கள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியதற்காக நாட்டில் தங்கள் துறைகளில் அளப்பரிய சாதனைகள் படைத்திட்ட அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாடு சுதந்திரம் பெற்றபின்னர் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் தேசத்துரோக வழக்கு தொடர்பான ஷரத்து தொடர்வதை,எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறது. இந்த ஷரத்தானது பிரிட்டிஷ் முடியாட்சியையும்,இறையாண்மையையும்  பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதாகும்.  சுதந்திரப்போராட்டக் காலத்தில் காந்திஜி உட்பட விடுதலைப் போராட்ட வீர்ர்களை சிறையில் அடைப்பதற்கும், அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடுவதற்காகுமே இந்த ஷரத்து  கொண்டுவரப்பட்டது. நாட்டில் காந்திஜியின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில் இந்த மோசமான ஷரத்தை சட்டப் புத்தகங்களிலிருந்து நீக்குவது மிகவும் பொருத்தமாக இருந்திடும்.

முக்கியமான விஷயங்கள் குறித்து தங்கள் கருத்தைத் தெரிவித்து, பிரதமருக்குக் கடிதம் எழுதுவதை, ஒரு குற்றம் என்றோ மற்றும் தேசத் துரோகச் செயல் என்றோ கருத முடியாது. இது, இன்றைய அரசாங்கத்தின்  கொள்கைகளுக்கு எதிராகக் கருத்துக் கூறும் அனைவரையும் தண்டிப்பதற்கு ஒப்பாகும். இது, ஜனநாயக உரிமைகளை முற்றிலுமாக மறுதலிக்கும் செயலாகும். இது, நாட்டில் எதேச்சாதிகாரம் வளர்ந்துகொண்டிருப்பதைப் பிரதிபலிக்கிறது.  

உச்சநீதிமன்றம், 1962இல் அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதாக அல்லது  நேரடியாக அழைத்ததாக இல்லாத வரையிலும், தேசத்துரோகப் பிரிவில் வழக்கு தொடுக்க முடியாது என்று தீர்முடிவினை அளித்திருந்தபோதிலும், அதனைக் கண்டுகொள்ளாமல் முசாபர்பூர் நீதிமன்றம் இவ்வாறு வழக்குப் பதிவு செய்திட ஆணை பிறப்பித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

எனவே, நாட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள அறிஞர்கள்/கலைஞர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
இவ்வாறு அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.


 

;