politics

img

ராணுவ விமான பலத்தை குறைத்துவிட்டு சவுகிதார் என்று பேச வெட்கமாக இல்லையா?

1947ம் ஆண்டு முதல் நமது நாடு வளமாகவும், பலமாகவும் தான் இருக்கிறது. எந்த நாடும் நமது நாட்டின் மீது படையெடுத்து பிடித்து விட முடியுமா? 1947ல் மட்டுமல்ல, இனி எதிர்காலத்தில் உலகத்தில் உள்ள எந்த நாடும் நமது நாட்டின் மீது படையெடுத்து வந்து நம்மை அடிமைப்படுத்திவிட முடியாது, ஏன் எனில் அவ்வளவு வலுமிக்க ராணுவம் நம் கையில் உள்ளது. அது மட்டுமல்ல 140 கோடி மக்கள் தொகைகொண்ட ஒரு நாட்டை யாராலும் அடிமைப் படுத்தி விட முடியுமா?மோடி தான் பாதுகாவலர் என்றால் இதற்கு முன்பு இந்தியா பாதுகாப்பாக இல்லையா? பாகிஸ்தான் படையெடுத்து வந்து இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டார்களா? சீனா குண்டுபோட்டு பிடித்துவிட்டதா? இந்தியாவுடன் மோதினால் மலையோடு மோதினால் மண்டை உடைந்துவிடுவது போல, மோதுபவர்கள் மண்டை தான் உடையும். யாராவது இந்தியா வுடன் மோதிவெற்றி பெற முடியுமா? நான் தான் சவுகிதார் என்கிறீர்கள்.ரபேல் விமானத்தை வாங்கிய சாதனையை சொல்ல வேண்டியது தானே? மன்மோகன் சிங் ஆட்சியில் விமானப்படையில் ரபேல் விமானம் வாங்குவது என்று முடிவு செய்து, பிரெஞ்சுக் கம்பெனியிடம் 126 விமானங்கள் வாங்குவது என்று முடிவாகி கையெழுத்து ஆகிற நேரத்தில் நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். நீங்கள், அவர்கள் போட்ட ஒப்பந்தபடி 126 விமானங்கள் வாங்கியிருக்க வேண்டும். அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால் இங்கிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு போய் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டீர்கள். 36 விமானம் போதும் என்று ஒப்பந்தம் போடுகிறீர்கள். 126 விமானத்தை குறைத்து 36விமானம் என்று ஒப்பந்தம் போட்டுவிட்டு, நான் தான் இந்தியாவிற்கு சவுகிதார் என்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? 126 விமானத்திற்கு மன்மோகன் சிங் ஆட்சியில் கொடுக்கப்பட்ட விலை 79 ஆயிரம் கோடி. 36 விமானத்திற்கு நீங்க கொடுக்கிற விலை 56 ஆயிரம் கோடி. ஒரு விமானத்திற்கு மன்மோகன் அரசு தீர்மானித்தது 526 கோடி. அதே விமானத்திற்கு நீங்க கொடுக்கிற விலை ஒரு விமானத்திற்கு 1726 கோடி. மோடி எவ்வளவு திறமையானவர் பார்த்தீர்களா? மோடி உலக மகா சிந்தனையாளர்! இவரைத்தான் தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஒரு பக்கம் பிரேமலதா விஜயகாந்த், இன்னொரு பக்கம் ராமதாஸ், இன்னொரு பக்கம் டாக்டர் கிருஷ்ணசாமி. எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், கொண்டாடுகிறார்கள். இப்படி கூறுகெட்ட பிரதமரை கொண்டாடுவது வெட்கமாக இல்லையா? 


526 கோடிக்கு வாங்க வேண்டிய விமானத்தைஎதற்காக 1726 கோடிக்கு விலையை உயர்த்தி வாங்குகிறீர்கள்? என்ன நடந்தது? ஒரு விமானத்திற்கு 3 மடங்கு விலை கொடுத்து வாங்குவது தான் நீங்க நாட்டுக்கு செய்கிற நல்ல காரியமா? இது தான் பாதுகாப்பா?மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய ஆபத்து இந்தியாவிற்கு அவரால் தான்வருமே தவிர வேறு யாராலும் வராது. இன்று வரை இந்த கேள்வியை நாங்கள் திரும்ப திரும்பகேட்கிறோம். மோடி பதில் சொல்கிறாரா? ராஜ்நாத்சிங், தமிழிசை சௌந்தரராஜன் பதில்சொல்கிறார்களா? அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிற எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்கிறாரா? ஏனய்யா ஒரு விமானத்திற்கு 3 மடங்கு விலை உயர்த்தி வாங்கினீங்க என்று கேட்டால் சொல்ல வேண்டுமா இல்லையா? மோடி தான் உத்தமன் என்கிறார்கள். அவர் தான் இந்திரன், சந்திரன் என்று புகழ்கிறார்கள். பிரெஞ்சு நாட்டு நிறுவனத்திற்கு கொடுக்கும் இந்த பணம் யாருடைய வரிப்பணம், மக்களின் வரிப்பணம். 36 ஆயிரம் கோடி இன்று மிச்சம் இருந்தால் பள்ளிக்கூடங்களுக்கு பயன்படாதா? குடிநீருக்கு பயன்படாதா? மருத்துவமனை கட்ட பயன்படாதா? ரோடு அமைக்க பயன்படாதா? இதைக்கேட்டால் நாங்கள் தேசத் துரோகி என்கிறார்கள்.மோடி எடுத்த 2வது நடவடிக்கை கருப்புப்பணத்தை ஒழிப்போம் என்பது தான். ஆயிரம்,ஐநூறு நோட்டை செல்லாது என்று அறி வித்தீர்கள். இதை யார் செய்தது? நரேந்திர மோடிதான் செய்தார். அவருடைய அமைச்சரவை தான்செய்தது. எங்காவது மோடி பேசும் போது நாங்கள்கருப்புப்பணத்தை ஒழித்து இருக்கிறோம் ரூபாய்நோட்டுக்களை செல்லாதது ஆக்கி யிருக்கிறோம் என்று சாதனையாக சொல்லியிருக்கிறாரா? தேனி கூட்டத்தில் பேசினாரா? கன்னியாகுமரி கூட்டத்தில் பேசினாரா? சென்னையில் பேசினாரா? கோயம்புத்தூரில் பேசினாரா? செய்த சாதனையை மக்கள் மத்தியில் சொல்ல முடியவில்லையே? அதை சொல்வதற்கே உங்களுக்கு தைரியம் கிடையாது. ஏன் எனில் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடே நாசமாக போனது.


முன்பெல்லாம் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வாக இருந்தது. தற்போது 5ம் வகுப்பு, 8ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு வைக்கப் போகிறார்கள். பள்ளிக்குழந்தைகளை ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுபவர்கள் போல கசக்கிப்பிழியலாமா? இதுபற்றி ஏற்கனவே நாடாளு மன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் விரைவில் 5ம் வகுப்புக்கும், 8ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு வைக்க இருந்த நிலையில், தேர்தல் வந்ததால் அடுத்த கல்வி ஆண்டு முதல் நடை முறைப்படுத்துவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நமது பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. இந்நிலை யில் 5ம் வகுப்பில் பொதுத்தேர்வு வைத்தால் நமது குழந்தைகள் அதிக அளவில் இடையில் நின்று போவார்கள். ஒரு மாணவன் 10ம் வகுப்பு வரை குறைந்தபட்சம் படித்தால்தான் பிழைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. நமதுகுழந்தைகளின் கல்வித்தரம் நாசமாக வேண்டும்என்றால் நீங்கள் மீண்டும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள். ஏற்கனவே எம்.பியாக தேர்வுசெய்த அதிமுகவின் 37 பேர்களும் இந்த சட்டம் கொண்டு வரும் போது நாடாளுமன்றத்தில் வாய்திறக்காமல் இருந்துவிட்டார்கள். மீண்டும் அதிமுகவிற்கு வாக்களித்தால் அந்த எம்.பி.யும் வாய்திறக்காமல் சென்று வருவார். ஆனால் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் அப்படி அல்ல. இது போன்ற சட்டங்கள் கொண்டு வரும் போது அதற்கு எதிராக குரல் கொடுப்பார். எனவே மக்களின் குரலை எதிரொலிக்க நீங்கள் மறவாமல் முத்திரையிடப்பட வேண்டிய சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திம்.


மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்கு சேகரித்து மதுரை தொகுதியில் பல்வேறு மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது பிரச்சாரத்திலிருந்து...


தொகுப்பு : இலமு



;