politics

img

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தப்போவதில்லை - மு.கஸ்டாலின்


சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தப்போவதில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் கூடியது. ஜூலை 30ம் தேதி வரை 23 நாட்கள் நடைபெற உள்ளது. இதில்  பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
 இன்று காலை 10 மணிக்கு முதல் நாள் கூட்டம் துவங்கியது, எம்.எல்.ஏ.க்கள் கனகராஜ் (சூலூர்), ராதாமணி (விக்கிரவாண்டி) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

முன்னதாக, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மா.சுந்தரதாஸ், கே.பஞ்சவர்ணம், ஏ.சுப்பிரமணியம், ந.செல்வராஜ், ஏ.கே.சி.சுந்தரவேல், மு.ராமநாதன், பொ.முனுசாமி, சா.சிவசுப்பிரமணியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரும் ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் அவை கூடும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். 

இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப்போவதில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள தேவையில்லை என சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்.  அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம், தற்போது அதை வலியுறுத்தப்போவதில்லை. சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வாய்மொழியாக இன்று திமுக திரும்ப பெற்றது. 

குடிநீர் பிரச்சனைக்கு திமுக ஆட்சியில் வழங்கிய முக்கியத்துவம் போன்று அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால் தான் இன்று தமிழகத்தில் இத்தகைய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


 

;