politics

img

சட்டப்பேரவையில் இன்று

சட்டப்பேரவையில் இன்று

தமிழக சட்டப்பேரவையில் வியாழனன்று  (மார்ச் 12) பள்ளிக் கல்வி, உயர் கல்வி, இளைஞர் நலன் ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

கேள்வி நேரத்திலிருந்து...

சம்பள உயர்வு எப்போது?

நியாயவிலைக் கடைகளுக்கு கடந்த சில மாதங்களாக 60 விழுக்காடு தான் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதால் பொருட்கள் கிடைக்காமல் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் நியாய விலை கடை ஊழியர்களுக்கு திமுக ஆட்சியின் போது 2010 ஆம் ஆண்டு ஊதியம் உயர்த்தப்பட் டது என்றும் அதன் பிறகு சம்பளம் உயர்த்தப்படவில்லை என்று சட்டப் பேரவையின் கேள்வி நேரத்தில் பல்லாவரம் தொகுதி திமுக உறுப்பினர் கருணாநிதி அமைச்சரின் கவனத்துக்கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்,“ ரேசன் டைகளுக்கு முழு அளவு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது” என்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், “ரேஷன் கடை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம செய்த பிறகு 2016 ஆம் ஆண்டில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு வழங்கப்படும். அந்த வகையில், இப்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது”என்றார்.

இடம் கொடுத்தால்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் அழுத்தம் குறைவாக இருப்பதை ஆளும்கட்சி, எதிர்க் கட்சி சட்டமன்ற உறுப்பி னர்கள் அரசின் கவனத்துக்கொண்டு வந்தனர். கடந்த நான்கு வருடத்தில் மட்டும் 340 துணை மின் நிலையங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இடம் கிடைப்பதுதான் அரிதாக உள்ளது. எந்த பிரச்சனையும் இல்லாமல் இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் அந்த பகுதியில் உடனடியாக துணை மின்நிலையம் அமைத்து கொடுக்கப்படும் என்று  மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

ரூ.20 கோடியில்...

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நாகூர் பட்டினச்சேரி, வெட்டாறு வடகரையின் முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்படுமா? என்று எம். தமின்முன் அன்சாரி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார்,“ மீனவ மக்களின் கல்வி, பொருளாதாரத்தை உயர்த்த நாகையில் 30 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. மேலும், 360 மீட்டர் தூரத்திற்கு தூண்டில் வளைவு அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு அரசால் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பணி துவங்கப்படும்” என்றார்.

 

 


 

;