politics

img

பொய்யான தகவலை பரப்பும் பாஜகவினர் - தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு

சென்னை,பிப்.10- பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக பாஜகவினர் பரப்புவது பொய்யான செய்தி என தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள தகவல்;
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்ட சில முக்கிய திட்டங்கள்’ என சில திட்டங்களைக் குறிப்பிட்டு பாஜகவினர் பலர் ஒரு பொய்யான பதிவைப் பகிர்ந்துள்ளனர். அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள 24 திட்டங்கள் வெளிநாட்டுக் கடனுதவியுடன் நடைபெறும் மாநில அரசுத்  திட்டங்களாகும்.
இவை ஒன்றிய பட்ஜெட்டில் ‘Major Externally Aided Projects - State Sector Plan’ என்ற பட்டியலில் உள்ளவையாகும். (படம் 1)இத்திட்டங்களுக்கான நிதியின் பெரும்பகுதியை உலக வங்கி போன்ற  வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து கடனாக மாநில அரசு பெறுகிறது. இத்திட்டங்களுக்கு மாநில அரசும் நிதி ஒதுக்குகின்றது.  
ஒன்றிய அரசு வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து கடன் பெறுவதற்கு இணைப்பாகச் செயல்படுகிறதே தவிர, இதற்கென்று தனியாக எந்த நிதியும் ஒதுக்கவில்லை.
மேலும் இந்தப் பதிவில்,‘Tamilnadu Climate Resilience Reconstruction Project’ என்று ஒரு திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அப்படி  ஒரு  திட்டமே  இல்லை.
பட்ஜெட்டில் Green Energy Corridors III(GEC III)- Intra State Transmission System Tamil Nadu என்ற பெயரில் ஒரு திட்டம் உள்ளது. இதற்குப் பதிலாக அதனருகில் உள்ள Climate - Resilient Reconstruction after Flooding in Kerala, Phase II என்ற திட்டதைத் தவறுதலாக copy-paste செய்துள்ளனர். (படம் 2)
இவ்வாறு Tamil Nadu Industrial Connectivity Project மற்றும் Chennai Metro Rail Investment Project என்ற திட்டங்களைக் கூடச் சரிபார்க்காமல் Tamil Nadu Industrial Corridor Project, Chennai Metro Rail Industrial Project என குறிப்பிட்டிருக்கின்றனர்.
பட்ஜெட் Expenditure Profile (2025-2026)இல் இருந்து தமிழ்நாடு அல்லது சென்னை என்ற பெயரில்  உள்ள வெளிநாட்டு நிதியுதவி பெறும் மாநில அரசு திட்டங்களை எடுத்து அவை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கிய திட்டங்கள் என பொய்யான தகவலைப் பரப்புகின்றனர்.
Chennai metro phase 2 திட்டமும் மாநில அரசின் திட்டமாகத்  தொடங்கப்பட்டு, பின்னர் தொடர் கோரிக்கைகளின் மூலம் ஒன்றிய அரசின் உதவி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும்கூட, மாநில அரசு நிதி மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடன் போக ஒரு சிறு பகுதியைத் தான் ஒன்றிய அரசு வழங்குகிறது.  
பாஜக வெளியிட்ட பட்டியல் முழுக்க பொய்களும் பிழைகளும் நிறைந்தவை.  மாநில அரசின் திட்டங்களையே தங்கள் திட்டங்கள் என்று குறிப்பிட்டு நிதி ஒதுக்கியிருப்பதாகப் பொய்யான பட்டியலை வெளியிட்டுள்ளனர்.