புதுதில்லி, ஜூன் 4- 18ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தனிப் பெரும் பான்மை பெற முடியாத அளவிற்கு மக்கள் கொடுத்த அடியால், தொங்கலில் நிற்கிறது பாரதிய ஜனதா கட்சி.
பாஜக தலைமையிலான கூட்டணி 290 இடங்களைப் பெற்றுள்ள போதிலும் அதில் பாஜக 240 இடங்களையே பெற்றுள்ளது. அதன் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 7 இடங்களிலும், சிராக் பஸ்வானின் எல்ஜேபி 5 இடங்களிலும் வென்றுள்ளன.
இந்தியா கூட்டணி மொத்தம் 235 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் காங்கிரஸ் 99 இட ங்களையும், சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களையும், திமுக 22 இடங்களையும், சிவசேனா (உத்தவ் தாக்கரே) 9 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களையும் பெற்றுள்ளன. இக்கட்சிகள் உள்பட இந்தியா கூட்டணியின் பல்வேறு கட்சிகள் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ளன. இதர கட்சிகள் 18 இடங்களைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், பாஜக கடந்த இரண்டு தேர்தல்களிலும் பெற்ற இடங்களை விட மிகக் குறைவாகப் பெற்றுள்ளதோடு, முதல் முறையாக தனிப் பெரும்பான்மையை இழந்துள்ளது. எனவே பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.
மேலும், மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைவதை தடுக்கும் முயற்சிகளும் தில்லியில் துவங்கியுள்ளன. குறிப்பாக, பாஜக கூட்டணியில் திடீரென சேர்ந்து வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுடனும், நிதிஷ்குமாருடனும் பேச்சு வார்த்தை நடத்த காங்கிரஸ் தரப்பில் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு செவ்வாயன்று மாலை மாலை தில்லியில் சந்தித்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, “மோடி தலைமையிலான அரசை மக்களை புறக்கணித்துள்ளனர். குறிப்பாக உத்தரப்பிரதேச மக்கள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்ந்து, அதை பாதுகாக்கும் வகை யில் இந்தியா கூட்டணியை ஆதரித்துள்ளனர். அரசியல் சாசனத்தைக் காக்கவே தேர்தல் அரங்கில் இந்தியா கூட்டணி உறுதியாகப் போராடி யது. தற்போதைய நிலையில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்க இன்று (புதன்) இந்தியா கூட்டணி கூடுகிறது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதா அல்லது வேறு முயற்சி களை மேற்கொள்வதா என்பது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேசி அவர்களின் கருத்துக் களுக்கு மதிப்பளித்து முடிவு செய்வோம். இந்தியா கூட்டணியில் புதிய கட்சிகளை இணைத்துக் கொள்வதை குறித்து ஆலோசித்து முடிவுகளை மேற்கொள்வோம்” என்று குறிப்பிட்டார்.