india

img

கல்வி வணிகமய விளைவே பயிற்சி மையங்கள்

புதுதில்லி,  ஆக.1- கல்வி வணிகமய மாகிப்போனதன் விளைவே, நாடு முழுதும் பயிற்சி மையங்கள் அதிகரித்ததற்குக் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. தில்லியில் பயிற்சி மையம் ஒன்றில் தரைக்குக் கீழ் உள்ள அடித்தளத்தில் மழைத் தண்ணீர் புகுந்து மூன்று பயிற்சி மாணவர்கள் இறந்தது தொடர்பாக குறுகிய கால விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. அந்த விவாதத்தில் கலந்துகொண்டு ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது:

முதலில் என் ஆழ்ந்த இரங்கல்களை இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்வுகள் வணிகமயமாகிப்போனதன் விளைவாகவே இவ்வாறு மாணவர்கள் பலியாகி இருக்கிறார்கள் அனைத்துத் தேர்வுகளையும்  மையப்படுத்தி  இருப்பதன்காரணமாகவே இந்தப் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. 

நம்முன்னோர்கள் கல்வியை ஏன் மாநிலப் பட்டியலில்  வைத்திருந்தார்கள்? ஏனெனில் அதுதான் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். அவசரநிலை அத்துமீறல்கள் குறித்து இப்போது நீங்கள் அடிக்கடி கூறிக்கொண்டிருக்கிறீர்கள். மாநிலப் பட்டியலிலிருந்த கல்வியும் அவசரநிலைக் காலத்தில்தான் அரசமைப்புச்சட்டத்தின் 42ஆவது திருத்தத்தின்மூலம்,  மாநிலப் பட்டியலிலிருந்து பறிக்கப்பட்டது. நீங்கள் உண்மையிலேயே அவசரநிலைக்கு எதிரானவர்கள் என்றால் ‘கல்வி’யை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு அனுப்பிவிடுங்கள். இதற்கு அரசிடமிருந்து ஏதேனும் பதில் வருமா என்பது சந்தேகமே. கல்வி அமைச்சரோ, உள்துறை அமைச்சரோ வந்து இதற்குப் பதிலளிக்க மாட்டார்கள். முகர்ஜிநகரில் ஒரு பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, இவ்வாறு தில்லியில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, ஆட்சேபணை இல்லா சான்றிதழ் (No objection Certificate) வாங்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தது.

மொத்தம் இருந்த 550 பயிற்சி மையங்களில் 57 மட்டுமே இவ்வாறு சான்றிதழ்கள் பெற்றன.  இவ்வாறு மற்றவை வாங்காததற்கு யார் பொறுப்பு? நீங்கள் தேசியத்  தலைநகர் பிரதேச சட்டம் (National Capital Territory Act)நிறைவேற்றி இருக்கிறீர்கள். எனவே இதற்கு யார் பொறுப்பு என்று எங்களுக்குத் தெரியவில்லை.

2019இல் சூரத்தில் ஒரு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 மாணவர்கள் துயர்மிகு முறையில் இறந்துவிட்டார்கள். இவற்றிலிருந்து ஏதேனும் நீங்கள் படிப்பினையைக் கற்றுக்கொண்டிருக்கிறீர்களா?

பயிற்சி மையக் குழுக்கள் (மஃபியாக்கள்) சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் தேர்தல் பத்திரங்கள் வாங்குகிறார்கள். நீங்கள் அவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்களைப் பெறவில்லை என்று சொல்ல முடியுமா? தேர்தல் பத்திரங்கள் மூலமாக மிகப்பெரிய அளவில் அவர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெறுவதால்தான் பயிற்சி மையங்களை ஒழுங்காக நீங்கள் முறைப்படுத்தவில்லை என்பது உண்மையில்லையா? (மணியடிக்கப்பட்டது)

ஒட்டுமொத்த பொறுப்பும் உங்களுடையதே

இந்தப் போட்டித் தேர்வுகளில் கிராமம்-நகரம் பிரிவினை மிகவும் அதிகமாக இருப்பதைப் பார்க்கிறோம். இருப்பவர்கள்-இல்லாதவர்கள் இடையே போட்டி. இரண்டாவதாக கல்வி என்பது சமூகத்தில் உயரடுக்கில் உள்ளவர்களுக்கான ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. நான் ஜேஎன்யு மாணவனாக இருந்தபோது நாங்களும் இந்தப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றிருக்கிறோம். ஆனால் இப்போது சமூக அறிவியல் என்பது பின்னுக்குச் சென்றுவிட்டது. மாணவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மனதில் ஒருவிதமான வெறியை உருவாக்கி இருக்கிறீர்கள்.

இதற்கு நீங்களே பொறுப்பு. ஆம் ஆத்மி கட்சியைக் குறைகூறுவதற்காக இந்த நோட்டிசை இங்கே கொண்டுவந்திருக்கிறீர்கள். உண்மையில் இந்தக் குறைக்கான ஒட்டுமொத்த பொறுப்பும் உங்களையே சாரும். இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் பேசினார்.   (ந.நி.)