கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மக்களிடமிருந்து நிதிகளைப் பெற பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியத்தை 2020 மார்ச் 27ல் தொடங்கி வைத்தார். இந்த நிதியத்தின் கணக்கு வழக்குகளுக்கு ஒன்றிய தணிக்கையிலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருந்தது. அதோடு, `தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம்கூட செலவு விவரங்களைப் பெற முடியாது’ என்று ஒன்றிய அரசு அறிவித்தது. எனவே இந்த நிதியத்துக்கு வரும் நிதிகளின் செலவு விவரங்களைப் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது
38 பொதுத்துறை நிறுவனங்கள் பிஎம் கேர் நிதிக்கு 2,100 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாக புள்ளிவிபரங்கள் வெளியானது. இது பொதுமக்களின் பணம். இது எப்படி மத்திய தணிக்கைக்கு உட்படுத்தப்படாமல் இருக்கலாம்... பல பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சி.எஸ்.ஆர் நிதி அளவைவிட அதிகமான அளவு தொகையை பிஎம் கேர் நிதிக்கு நிதி வழங்கியிருக்கின்றன.
இந்த நிதியில் கடந்த 2021 ஆம் வருடம் மார்ச் 31 வரை அதாவது ஒரே வருடத்தில் ரூ.10,990 கோடி வசூலாகி உள்ளது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நான்கே நாட்களில் ரூ.3,077 வசூல் ஆகி உள்ளது. சென்ற வருடத்தில் மட்டும் ரூ.7,679 கோடி நன்கொடை வசூலானது. அதுதவிர வட்டி மட்டும் ரூ.235 கோடி கிடைத்துள்ளது.
ஆனால் சென்ற வருடம் வரை இந்த பி எம் கேர்ஸ் நிதியில் இருந்து வெறும் ரூ.3,976 கோடி மட்டுமே செலவாகி உள்ளது. இதில் ரூ.1,392 கோடியைக் கொண்டு 6.36 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50,000 வெண்டிலேட்டர்கள் இந்த நிதியிலிருந்து ரூ.1,311 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.
இந்த வெண்டிலேட்டர்களில் பல பழுதடைந்துள்ள நிலையில் அதைப் பழுது பார்க்க கூட ஊழியர்கள் யாரும் இல்லாத நிலை உள்ளது. மேலும் மத்தியப் பிரதேசம், காஷ்மீர், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஊழியர்கள் இல்லாததால் இந்த வெண்டிலேட்டர்களை பயன்படுத்தப்பட முடியாத அவலமான சூழல் நிலவுகிறது.
வெளிநாடுகளில் கொரோனா தொற்றுக் காலத்தில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை நாட்டுக்கு அழைத்து வர ரூ.1000 கோடி செலவிடப்பட்டுள்ளது. தவிர 162 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் ரூ. 201.58 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அரசு நடத்தும் பரிசோதனை நிலையங்களில் கொரோனா பரிசோதனைக்காக மேம்படுத்த ரூ. 20.41 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் கொரோனாவுக்காக மட்டும் 2 மருத்துவமனைகள் ரூ.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பி எம் கேர்ஸ் நிதியில் ஓராண்டில் வசூலான ரூ.10,990 கோடியில் 64% அளவுக்கு நிதி உபயோகப்படுத்தாமல் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பெருந்தொற்று பேரிடர் காலத்தில் நாட்டில் நிலவும் சுகாதார நெருக்கடியால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிய நிலையில், பிரதமர் மோடி பெயரில் வசூலிக்கப்பட்டுள்ள தொகையில் 64 சதவிகிதம் வரை செலவழிக்கப்படாமல் இருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் குரூரமான செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.