புதுதில்லி, செப். 27 - இரண்டு நாள் பயணமாக தில்லி சென்றிருந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், வெள்ளிக்கிழமையன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் இல்லத்திற்கு சென்றார்.
அங்கு தோழர் சீத்தாராம் யெச்சூரியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர், யெச்சூரியின் மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது, தோழர் யெச்சூரி உடனான தமது இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக திமுக மீது யெச்சூரி கொண்டிருந்த மிகச்சிறந்த அபிமானம் மற்றும் பிணைப்பு குறித்தும், அவருடனான சிறந்த உரையாடல்கள் குறித்தும் முதல்வர் நினைவு கூர்ந்தார். குறிப்பாக, தமது ‘ஸ்டாலின்’ என்ற பெயரை யெச்சூரி முன்னிலைப்படுத்தி அன்பு காட்டியதைக் குறிப்பிட்டார்.
மேலும், யெச்சூரி இல்லத்திற்குச் சென்றது தொடர்பான புகைப்படங்களை, தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டு, “தோழரே, நீங்கள் இல்லாததை ஆழமாக உணர்கிறோம்; உங்கள் இழப்பு எங்களை நிறையவே பாதிக்கிறது” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.