india

img

குஜராத் பாஜக அரசு விடுதலை செய்த 11 குற்றவாளிகளுக்கு மீண்டும் சிறை

புதுதில்லி, ஜன. 8 - இளம்பெண் பில்கிஸ் பானுவை, கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கி யதுடன், 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த 11 குற்றவாளிகளை, முன்கூட்டியே விடுதலை செய்த நிலை யில், குஜராத் பாஜக அரசின் முடிவை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

“குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432(7)(b)இன் கீழ், தண்ட னையை ரத்து செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. சட்டப் பிரிவு 432(7)(b)-இன் படி, சம்பவம் நடந்த அல்லது குற்றவாளிகள் சிறை யில் அடைக்கப்பட்ட மாநில (குஜராத்) அரசுக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் இல்லை. வழக்கு விசாரணை மாற்றப் பட்டு, குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு எங்கு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோ, அந்த மாநில  அரசிடமே - அதாவது மகாராஷ்டிர மாநில அரசுக்கே மன்னிப்பு வழங்கும் அதிகாரம் உள்ளது.  மாறாக, குற்றவாளிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்டிருப்பது குஜராத் அரசின் அதிகார துஷ்பிர யோகம் ஆகும்.

அத்துடன், சட்டத்தின் படி ஒரு அரசுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மற்றொரு அரசு பயன் படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் தண்டனை யை ரத்துசெய்ய மகாராஷ்டிர அர சின் அதிகாரத்தை குஜராத் அரசு அபகரித்துள்ளது. எனவே, அதி காரத்தை அபகரித்ததன் அடிப்படை யில் குஜராத் அரசின் தண்டனை ரத்து  முடிவை, ரத்து செய்கிறோம்” என்று நீதிபதி பி.வி. நாகரத்னா தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 142-இன் கீழ் உச்சநீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கைக்கு “இது சட்டத்தை மீறும் செயலாகும். குற்றவாளிகளை விடுதலை செய்வது நியாயம் இல்லை.

சட்டத்தின் ஆட்சி என்பது ஒரு சில அதிர்ஷ்டசாலிகளின் பாது காப்பைக் குறிக்காது; இரக்கத்திற்கும் அனுதாபத்திற்கும் சட்டத்தின் முன் இடமில்லை. சட்டத்தின் ஆட்சியில் உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை. நடுநிலையாக செயல்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி மீறப்பட்டால், சட்டத் தின்படி தண்டனை வழங்க களத் தில் இறங்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி என்பது அரசின் தன்னிச்சை யான செயல்பாடுகளுக்கு எதிரானது; நீதிமன்றங்கள், நீதியை வழங்க வேண்டுமே தவிர, நீதி வழங்கப்படு வதை பார்த்து கொண்டிருக்கக் கூடாது” என்று காட்டமாக கூறியிருக் கும் நீதிபதி பி.வி. நாகரத்னா, ‘குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் இருந்து ஆண்கள் வெளிவரவே இல்லை’ என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவை மேற்கோள் காட்டி நீதிபதி கிருஷ்ண ஐயர், முன்பு கூறியிருந்ததை நினைவுபடுத்தி, “ஒரு பெண் எப் போதும் மரியாதைக்கு தகுதியான வர். பெண்களுக்கு எதிரான கொடூர மான குற்றங்களை மன்னிப்பதை அனு மதிக்க முடியாது. பாதிக்கப்பட்டவரின் உரிமைகளும் முக்கியமானது” என்றும் தெரிவித்துள்ளார்.

“கடந்த 2022ஆம் ஆண்டு, மே மாதம், அஜய் ரஸ்தோகி தலைமை யிலான உச்சநீதிமன்ற அமர்வு  வழங்கிய தீர்ப்பின் அடிப்படை யிலேயே குற்றவாளிகள் 11 பேரை யும் முன்கூட்டியே விடுதலை செய்ய  குஜராத் அரசு முடிவு செய்தது” என்று குற்றவாளிகளின் தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா  தெரிவித்திருந்தார். ஆனால், “உண்மைகளை மறைத்து, (பில்கிஸ் பானு வழக்கில்தான் குற்றவாளி களுக்கு விடுதலை கேட்கிறோம் என்பதை குறிப்பிடாமல்) குற்றவாளி கள் விடுதலையைப் பரிசீலிக்கும் உத்த ரவு பெறப்பட்டுள்ளது. அப்போதும்  கூட குற்றவாளிகள் விடுதலை குறித்து குஜராத் அரசு பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தில் 2022-இல் பெற்றதாக கூறும் உத்தரவே மோசடியானது” என்றும் நீதிபதி நாகரத்னா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி பி.வி. நாகரத்னா, உஜ்ஜல்  புயான் ஆகிய 2 நீதிபதிகள் அமர்வு வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பின் மூலம், 2022 ஆகஸ்ட்   15 அன்று சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு குஜராத் பாஜக அரசால்  விடுதலை செய்யப்பட்ட ஜஸ்வந்த் பாய் நாய், கோவிந்த்பாய் நாய், ஷை  லேஷ் பட், ராதேஷாம் ஷா, பிபின்  சந்திர ஜோஷி, கேசர்பாய் ஓஹானியா,  பிரதீப் மோர்தியா, பகபாய் ஓஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட்  மற்றும் ரமேஷ் சந்தனா ஆகிய குற்றவாளிகள் 11 பேரும் மீண்டும் சிறைக்குச் செல்ல உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.