புதுதில்லி, ஜன. 31 - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், புதனன்று துவங்கியது. 2024-ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளு மன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை யாற்றினார்.
அப்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம், காஷ் மீருக்கான 370 ரத்து, முத்தலாக் தடை போன்றவற்றின் மூலம், மக்க ளின் பல நூற்றாண்டுக் கனவை, ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றி யிருப்பதாக பேசியுள்ளார்.
ராமர் கோவில், மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு
“பல நூற்றாண்டுகளாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்தக் கனவு இப்போது நிறைவேறி யுள்ளது. மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் செய்யப் பட்டுள்ளது.
இதன்மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற்றப் பட்டுள்ளது. அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு குழந்தை ராமர்சிலையை 5 நாட் களில் 13 லட்சம் பேர் தரிசித்துள் ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் 370 ரத்து ஒரு வரலாறு
அதேபோல் ஜம்மு - காஷ்மீரில் இருந்து 370-ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினர். இப்போது, சட்டப்பி ரிவு 370 என்பதும் வரலாறாக மாறி விட்டது. மேலும், இந்த நாடாளு மன்றம் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது” என்று குடியரசுத் தலைவர் முர்மு குறிப்பிட்டுள்ளார்.
புது நடைமுறையாக செங்கோல் ஏந்தி வரவேற்பு
முன்னதாக குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்புடன் குடி யரசுத் தலைவர் நாடாளுமன்றத் திற்கு வந்தார். அவரைக் குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர், மக்களவைத் தலை வர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். அத்துடன், இதுவரை இல்லாத நடைமுறையாக செங்கோல் ஏந்தியபடி ஒருவர், குடியரசுத் தலைவரை வரவேற்று நாடாளுமன்றத்திற்குள் அழைத்துச் சென்றார்.
அதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் மேலும் பேசியதாவது:
பிரம்மாண்டமான நாடாளுமன்றக் கட்டடம்
“புதிய நாடாளுமன்றத்தின் பிரம்மாண்ட மான கட்டடம் இந்தியா சுதந்திரமடைந்த 75-வது ஆண்டின் தொடக்கத்தில் கட்டப் பட்டுள்ளது. (இதன் திறப்பு விழா விற்கு குடியரசுத் தலைவர் முர்மு அழைக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) இந்த புதிய கட்டடத்தில் கொள்கைகள் பற்றிய அர்த்தமுள்ள உரையாடல் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சி யைப் பெற்றுவருகிறது. இஸ்ரோவின் சந்திரயான், ஆதித்யா திட்டங்களின் வெற்றியால் இந்திய தேசிய கொடி உலக அரங்கில் பட்டொளி வீசி பறக்கிறது.
விரைவாக கொண்டுவரப்பட்ட 5ஜி தொழில்நுட்பம்
இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது. 5ஜி தொழில்நுட்பம் நாட்டில் மிக விரை வாக கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 6 மாத மாக பொருளாதார வளர்ச்சி 7.5 சத விகிதத்திற்கும் அதிகமாக உள்ளது.
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி மக்கள் மீட்கப் பட்டுள்ளனர். மீதமுள்ள ஏழை மக்களையும் ஏழ்மையில் இருந்து மீட்க முடியும்.
ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்துவோர் அதிகரிப்பு
வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை குறைந்துள்ளது. ஆண்டு வருவாய் ரூ. 7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. நாடு முழுவதும் வங்கிகளின் வராக்கடன் 4 சதவிகிதமாக குறைந்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகளவில் முன்னணி
உலக அளவில் நெருக்கடி இருந்த போதும் பணவீக்கத்தை இந்த அரசு கட்டுக்குள் வைத்திருந்தது. உலகின் ஐந்து பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா வும் ஒன்றாக வளர்ந்துள்ளது. செல்போன் உற்பத்தியில் உலகின் 2-ஆவது நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியால் மக்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது. 1 லட்சம் கோடி அளவுக்கு தினசரி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடை பெறுகின்றன. யுபிஐ பரிவர்த்தனைகள் 1,200 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெறு கிறது. உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்த னைகளில் இந்தியாவின் பங்கு 46 சதவிகித மாக உள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பரி வர்த்தனைகள் குறித்து உலகம் முழுவதும் பெருமையாக பேசப்படுகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளில்கூட இத்தகைய நவீன டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இல்லை.
‘மேக் இன் இந்தியா’ மூலம் ஆயுதங்கள் உற்பத்தி
தமிழ்நாடு, உத்தரப்பிரதேசத்தில் பாது காப்பு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ ஆகிய திட்டங்கள் நமது நாட்டின் பலமாக உள்ளது.
அதேபோல் நாட்டின் 20 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைமுறையில் உள்ளது. ரயில்வே துறையை முழுக்க முழுக்க மின்மயமாக மாற்றும் பணி விரைவில் நடைபெறவுள்ளது.
ஏழைகளுக்கும் சாத்தியமான விமானப் பயணம்
இல்லங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டுசெல்லும் பணி விரைவில் முடிய வுள்ளது. கிராமங்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் கி.மீ சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 90 ஆயிரம் கிமீ என்பதில் இருந்து 1.46 லட்சம் கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் நாடு முழுவதும் 84 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
ஏழைகளுக்கும் விமானப் பயணம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. ஏழை பெண் களுக்கு ரூ.7 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. விளைபொருட் களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
80 கோடி குடும்பங்களுக்கு ரேசன் பொருட்கள்
நாடு முழுவதும் 80 கோடி குடும்பங் களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப் பட்டுள்ளது. 11 கோடி மக்களுக்கு தூய்மை யான குடிநீர் குழாய் மூலம் வழங்கப் பட்டுள்ளது. இந்திய இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இளைஞர்களின் திறன், வேலை வாய்ப்புடன் இணைக்கும் வகையில் விளை யாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் முர்மு தனது உரையில் குறிப்பிட்டார்.
புகைக்குப்பி வீச்சால் பாதுகாப்பு அதிகரிப்பு
கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தின் போது, நாடாளுமன்ற அவைக்குள், பாஜக எம்.பி.யால் அனுமதி அளிக்கப்பட்டு வந்த இருவர் வண்ணப் புகைக் குப்பிகளை வீசி அமளியில் ஈடுபட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால், தற்போ தைய கூட்டத் தொடருக்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிஆர்பிஎப் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இன்று பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9 வரை நடைபெறவுள்ள நிலையில், 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழனன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்கிறார்.
விலைவாசி, வேலையின்மை பற்றிப் பேசாத ஜனாதிபதி உரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, சில திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் நோட்டீஸ் அளித்துள்ளார்.
“குடியரசுத் தலைவரின் உரையில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துவதன் காரணமாக அதிகரித்துவரும் வேலையின்மை, பல லட்சக்கணக்கான வேலைகள் இழப்பு குறித்தும், இந்தியப் பொருளாதாரம் ஆழமான மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருப்பது பற்றியும் குறிப்பிடத் தவறியுள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, அதிலும் குறிப்பாக- பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது என்பதை குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடவில்லை. மணிப்பூர் பிரச்சனையைக் கட்டுப்படுத்திட ‘இரட்டை என்ஜின்’ அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது பற்றியும் உரையில் எதுவும் இல்லை. கூட்டாட்சித் தத்துவம் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்தும், மாநில அரசாங்கங்கள் மீது அரசமைப்புச் சட்டப் பங்கினை அரித்து வீழ்த்தும் விதத்தில் ஆளுநர்களின் மாளிகைகளைப் பயன்படுத்துவது அதிகரித்து இருப்பது குறித்தும், அதிகாரங்களை மையத்தில் குவிப்பதற்கான வேட்கை அதிகரித்து வருவது குறித்தும் எதுவும் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்படாததற்கு வருந்துகிறேன்.
எனவே, இப்பிரச்சனை தொடர்பான விவரங்களை, குடியரசுத் தலைவர் உரையில் சேர்த்திடுமாறு வேண்டுகிறேன்.” இவ்வாறு பி.ஆர். நடராஜன் தனது நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். (ந.நி.)