india

நாடாளுமன்றத்திலும் அரசு நிகழ்ச்சிகளிலும் பத்திரிகையாளர்களுக்கு உரிய இடங்கள் பறிக்கப்படுகின்றன

கடந்த மாதம் மாநிலங்களவையில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரையை, அவையின்  ஊடகங்களுக்கான மாடத்தில் நான் அமர்ந்து கவனிக்கும் பொழுது  அங்கு என்னோடு அமர்ந்திருந்த அத்தனை பத்திரிகையாளர்களையும் இரண்டு ஜோடி கண்கள் கவனித்துக் கொண்டிருந்தன. இளம் பாதுகாப்பு பணியாளர்கள் அங்கிருந்து நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் குறிப்புகளை எழுதும் போது எங்களின் அசைவுகள் அவர்களின் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாயின. 2023 டிசம்பரில் நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவத்தை தொடர்ந்து  மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் நாடாளுமன்ற பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்ட பிறகு பத்திரிகையாளர்கள் இந்த அளவிற்கு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. பழைய நாடாளுமன்ற வளாகத்தில் எங்களை வெகு தூரத்தில் இருந்து கவனிப்பார்கள்.தற்போது  அதிகமானது , காவலர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல.அவர்களின் வேவு  பார்க்கும் முறையும் தான்.

கால்நடைகளை நடத்திச் செல்வது போல!

கோவிட் 19க்குப் பிறகு பத்திரிகையாளர் களை கண்காணிப்பது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஊடகத்தில் இருந்தும் 2 பேருக்கு தான் வளாக அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு புதிய கட்டடத்திற்கு நாடாளுமன்றம் அலுவல்கள் மாறிய பிறகு பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தனித்தனியான நுழைவாயில்கள் தீர்மானிக்கப்பட்டன. பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இப்படி இல்லை. இன்று பத்திரிகையாளர்கள் நான்கு முறை சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பாதுகாப்பு நிறைந்த,ஜன்னல்கள் இல்லாத, கண்காணிப்பு கேமராக்கள் பதிந்த நடைபாதை வழியாக அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட மாடத்தை அடைய வேண்டும்.

இந்த வாரத் தொடக்கத்தில் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படம் எடுப்பவர்கள் குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள் அடைக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தை சுற்றி அவர்கள் நடப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளிப்படையான சிரமத்தை உண்டாக்கியது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க வந்த விவசாய சங்க தலைவர்கள் பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேசிய சில நாட்களுக்கு பிறகு இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது.

பத்திரிகையாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் ஏன் வர வேண்டும்?

நாடாளுமன்ற நிகழ்வுகளை சன்சாத் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்புவதால் ஏன் அவர்கள் உள்ளே வரவேண்டும் என சிலர் கேட்கலாம். ஆனால் பத்திரிகையாளர்கள் செய்யக்கூடியதை டிவி கேமராக்கள் படம் பிடிக்க முடியாது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி  உறுப்பினர்களின் பரஸ்பரம் நட்புறவு மற்றும் கேலி பேசுதல், ஒருவருடன் ஒருவர் அளவளாவுவது ஆகியவற்றை பத்திரிகையாளர்கள் தான் அணுக முடியும். இது நாடாளுமன்றத்திற்கு உள்ளே நிலவும் நல்லுறவுகளையும் அதிகார அடுக்குகளுக்கு இடையே மறைந்துள்ள பல்வேறு சமன்பாடுகளையும் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும்.

கூட்டணிக் கட்சிகளோடு குலாவுதல்!

ஜூலை 3 அன்று திரு மோடி தனது உரையை துவக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக பாஜக உறுப்பினர்கள் அதன் முக்கிய கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம் மற்றும் தெலுங்குதேசம்  ஆகியவற்றைச் சார்ந்தவர்களை முன்வரிசைக்கு செல்லுங்கள் என கூறினர். பின்புறத்தில் அமர்ந்திருந்த வல்லான் சிங் (ஐக்கிய ஜனதாதளம்) அவர்களை முன் வரிசைக்கு வாருங்கள் என வலியுறுத்தினார்கள். பாஜக அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் திரு சிங்கின் கையை பிடித்து முன் பெஞ்சுக்கு அழைத்துச் செல்வதை நான் பார்த்தேன். இதே போல பாஜக எம்பி ஒருவர் தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கையை வழங்க முன் வந்தார். கூட்டணி பலத்தை  நிரூபிக்க அவர்கள் விரும்புவதை இது படம் பிடித்துக் காட்டுகிறது.

தேநீருக்கும், சிற்றுண்டிக்குமா வருகிறோம்?

நாடாளுமன்றத்தில் பத்திரிகையாளர்கள் பங்கேற்பதை மட்டும் இது கட்டுப்படுத்த வில்லை. அரசு விழாக்களில் மனம் திறந்த உரையாடலுக்காக  அவர்களை நிருபர்கள் சந்திக்கும் இனிய தருணங்களையும் பறித்து விடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. அமைச்சர்கள் அல்லது தலைமை விருந்தினர்கள் விழா முடிந்த பிறகு இந்த மூலைகளில் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடுவார்கள். இப்போது அவர்களை சந்திக்க முடியாமல் மறைமுகமாகத் தடுக்கப்படுகிறார்கள். வி ஐ பிக்களின்  மாடங்களுக்குள் பாதுகாப்பு பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அத்தகைய ஒரு நிகழ்ச்சியின் போது ஒரு பாதுகாப்பு பணியாளர் என்னிடம் “உங்களுக்கு உரிய தேநீரும் சிற்றுண்டியும் மறுமுனையில் ஏற்பாடு செய்துள்ளோம்”என கூறினார்.

சிற்றுண்டிக்காகவும் தேநீருக்காகவும் தான் பத்திரிகையாளர்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சிகளுக்கு  செய்தி சேகரிக்க வருகிறார்கள் என்ற கருத்து அவருடைய உபசரிப்பில் வெளிப்பட்டது.ஊடகங்கள் குறித்த இந்த அரசின் மிகக் குறுகிய பார்வையைத் தான் இது பறைசாற்றுகிறது.

பத்திரிகையாளர்களை அந்நியப்படுத்தி அவர்களை தடுத்து வெளியே நிறுத்துவதில் அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும்  நிம்மதி பெருமூச்சு விடலாம். சில ஊடகவிய லாளர்களின் சங்கடமான கேள்விகள் அவருடைய நிம்மதியை குலைக்காமல் இருக்கலாம். துடிப்பும், ஆர்வமும் நிறைந்த ஊடக நிலப்பரப்பில் தான் ஜனநாயகம் செழித்து வாழும். மக்களுக்கான எங்கள் பணி குறித்த நேர்மையை யாரும் பறிக்க முடியாது. உண்மை அதன் பாதையை  எப்படியும் கண்டுபிடித்து முன்னேறும்!

- விஜய்தா சிங்
தி இந்து
 தமிழில் : கடலூர் சுகுமாறன்