india

img

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அமலாக்க மாட்டோம்!

சென்னை, மார்ச் 12 - இந்தியாவின் அரசியலமைப்பு முன்வைக்கும் மதச்சார்பின்மைக்கு விரோதமாக மோடி அரசு அறிவித்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அறிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பாஜக அரசு இருந்து வரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமைத் திருத்தச்  சட்டத்தை நடைமுறைப்படுத்த அவசர கதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறுபான்மையினர், தமிழர் நலன்களை பறிக்கிறது
இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமை ப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பல வகையான மொழி,  இன, மதம் மற்றும் வாழ்விடச் சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிரு ந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்க ளின் நலனுக்காக, இந்திய தாய்த்திரு நாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரான தாகும். அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம் வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.

சிஏஏ-வுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம்
இதன் காரணமாகத்தான், திமுக அரசு அமைந்தவுடனேயே, அதாவது, கடந்த 8.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதை நிறைவேற்றி இச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

இந்த நிலையில், (தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில்) உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிப்பதற்காக மக்களைத் திசைத்திருப்பும் நோக்கத்துடன், தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதோ, என கருத வேண்டியிருக்கிறது. 

முற்றிலும் பயனற்ற பிரிவினைச் சட்டம்
இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழி வகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும்.

எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றி இருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது. இந்திய நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட்டு நிற்போம் : பினராயி விஜயன்
“குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவு படுத்தும் சட்டம். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடி மக்களாகக் கருதும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளத்தில் அமல்படுத்தப்படாது என்று உறுதியாக கூறுகிறோம். இந்த வகுப்புவாத- பிளவுபடுத்தும் சட்டத்தை எதிர்ப்பதில் கேரளம் ஒன்றுபட்டு நிற்கும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.