india

அனைத்தையும் கட்டுப்படுத்தும் அரசாங்கம் - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் ஜூலை 29 அன்று சென்னையில் ஒரு பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும்போது, கூறியதாவது: “ஒரு வலுவான அரசாங்கம் ஒவ்வொன்றையும் அல்லது ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தக் கூடாது. அது அனைத்திலும் தலையிடுவதற்காக வரும் தூண்டுதலைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்... ஒரு வலுவான அரசாங்கம் அனைத்துக் களத்திற்குள்ளும் மூக்கை நுழைக்கக் கூடாது.” அவர் மேலும் கூறியதாவது: “ஒரு வலுவான அரசாங்கத்தின் பலம் என்பது, தான் ஒவ்வொன்றையும் தெரிந்துகொள்ள முடியாது அல்லது ஒவ்வொன்றையும் செய்ய முடியாது என்று ஏற்றுக்கொள்வதில்தான் அதன் தன்னடக்கம் அடங்கி இருக்கிறது.”

என்னே அருமையான வார்த்தைகள்! ஆனால் உண்மையில் விஷயம் என்ன வென்றால், இதே மோடியின் அரசாங்கம் இவ்வாறு கூறியதற்கு நேரெதிராகவே நடந்துகொண்ட வருகிறது என்பதேயாகும். மோடி அரசாங்கமானது ஒவ்வொன்றையும், ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தவே விரும்புகிறது. மோடி அரசாங்கம் அரசமைப்புச்சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள குடிமக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவது உட்பட ஒவ்வொரு களத்திற்குள்ளும் மூக்கை நுழைக்கும் விதத்தில் ஒரு “வலுவான அரசாங்கமாகவே” நடைமுறையில் நடந்துகொண்டு வருகிறது. தேர்தல் ஜனநாயகம் என்பது  மிக வேகமாக தேர்தல் எதேச்சாதிகாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற நடைமுறையே மிகவும் இழிவானமுறையில் மாறியிருப்பதையும்,  சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் பார்த்தோம்.

அமலாக்கத்துறை எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கிடவும், அவர்களைச் சிறையில் அடைத்திடவும் கூடிய ஓர் அரசியல் கருவியாக மாறியிருக்கிறது. சென்ற வாரம் உச்சநீதிமன்றம், பண மோசடித் தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகவும் கொடூரமான திருத்தங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்ததைத் தொடர்ந்து, அதன் அதிகாரங்கள் மேலும் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. தான்தோன்றித்தனமான கைதுகள், பிணையில் வரமுடியாத அளவிற்கு சிறையில் அடைப்பது மற்றும் சொத்துகளைப் பறிமுதல் செய்வது முதலானவை இப்போது நாளும் நடைபெறும் நிகழ்வுகளாக மாறியிருக்கின்றன.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம் (UAPA),  தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இதர தேசப் பாதுகாப்புச் சட்டங்களின் மூலமாக எதிர்க்கட்சியினரையும், தங்களுக்கு எதிராகக் கருத்துக் கூறும் குடிமைச் சமூகத்தினரையும் நசுக்கிடும் சட்டப்பூர்வமான கருவிகளாக மாறி இருக்கின்றன. இவ்வாறு குடிமக்களின் வாழ்வதற்கான  உரிமைகளும், சுதந்திரமான உரிமைகளும் அரசாங்கத்தால் காலில் போட்டு மிதிக்கப்படும்போது அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றங்கள் மறுப்பது என்பதும் வழக்கமாகிவிட்டன.

இப்போது திருத்தப்பட்டுள்ள தேர்தல் சட்டத்தின்படி ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து வாக்காளர் அடையாளச் சீட்டுகள் ஆதார் அட்டைகளுடன் இணைக்கும் வேலை தொடங்கியிருக்கிறது. இந்தத் திருத்தச்சட்டமுன்வடிவு எவ்விதமான முறையான நுண்ணாய்வோ அல்லது விவாதமோ இன்றி நாடாளுமன்றத்தின் 2021 டிசம்பர் குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது. ஆதார் அட்டை இணைக்கப்படுவது இஷ்டப்பூர்வமானது (voluntary) என்று கூறப்பட்டபோதிலும், நடைமுறையில் அதைச் செய்யத் தவறினால் வாக்காளர் பெயரே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் நிலைக்கு இட்டுச் செல்லப்படக்கூடும். இதன் மூலம் மிகப்பெரிய அளவில் உண்மையான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படக்கூடும் என்கிற ஆழமான ஐயுறவு ஏற்பட்டிருக்கிறது.   

தெலங்கானாவில் பல்வேறு வாக்காளர் அடையாள அட்டைகளை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமானது 10.26 லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகளை நீக்குவதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. இவர்களில் எத்தனைபேர் உண்மையான வாக்காளர்கள் என உறுதிசெய்யப்பட வேண்டியிருக்கிறது.  

ஆதார் அட்டைகளை இணைப்பதன் மூலம் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை ஊகித்துணர்வதற்கும் வழியேற்படுத்தித்தருகிறது. எனவே சேகரிக்கப்படும் தரவுகள் கமுக்கமாக இருக்குமா என்பது குறித்து உத்தரவாதம் ஏதுமில்லை.

இவ்வாறு பிரதமர் முன்னுரிமை கொடுத்து ஒன்றைப் பேசுவதும் ஆனால் அதற்கு நேரெதிராக நடந்துகொள்வதும் என்பதிலிருந்து உண்மையில் அவர் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஜூலை 25 அன்று அவர் பேசிய உரை ஒன்றில், நன்கு அமைக்கப்பட்டுள்ள சமூகம் மற்றும் நாட்டின் மீது தங்கள் சித்தாந்த மற்றும் அரசியல் நலன்களை ஏற்றிவைக்க முயலும் எதிர்க்கட்சியினரை எச்சரித்துள்ளார். அவர் கூறியதாவது: “சித்தாந்தத்திற்கும் அரசியல் அபிலாசைகளுக்கும் ஓரிடம் உண்டு. ஆனால் நாடும் சமூகமும் எப்போதும் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.” (“There is a place for ideology and political aspirations but country and society always come first”) இவ்வாறு கூறியிருப்பதன்மூலம் அவர் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டின் நலன்களுக்கு சேவகம் செய்யும் ஒரே சித்தாந்தம் மற்றும் அரசியல் என்பது இந்துத்துவா என்பதே அவரது கூற்றின் உள்ளடக்கமாகும். மற்ற சித்தாந்தங்கள் அனைத்தும் நாட்டின் நலன்களுக்கோ, சமூகத்தின் நலன்களுக்கோ ஏற்றதல்ல.

இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசாங்கமும், மற்றும் பல பாஜக மாநில அரசாங்கங்களும் இந்துத்துவா சித்தாந்தத்தைத் தங்கள் அதிகாரப்பூர்வ சித்தாந்தமாக நிறுவிட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றன. இதற்கு அரசாங்கம் கல்வி அமைப்புமுறையையும், அதன் பாடத்திட்டங்களையும் இந்துத்துவ கொள்கைகளுக்கேற்ப மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. வரலாற்றையும், பாடப்புத்தகங்களையும் விரைவாக மாற்றி எழுத வேண்டியிருக்கிறது.

இவ்வாறாக கல்வி மற்றும் கலாச்சாரம் உட்பட அனைத்துக் களங்களிலும் கட்டுப்பாட்டைக் கொண்டுவர ஒரு வலுவான அரசாங்கம் விரும்புகிறது. அதனால்தான் உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் மோடியின் பேச்சைப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

(ஆகஸ்ட் 3, 2022)

தமிழில்: ச.வீரமணி

;