புதுதில்லி, ஆக. 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24வது மாநாடு மதுரையில் ஏப்ரல் மாதம் பேரெழுச்சியுடன் நடைபெறுகிறது. இந்த அறிவிப்பை கட்சியின் அரசியல் தலைமைக்குழு செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் ஆகஸ்ட் 6 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2, 3, 4, 5, 6 தேதிகளில் தமிழ்நாட்டில் மதுரையில் பேரெழுச்சியுடன் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு துயரம்; கேரளாவுக்கு உதவுவீர்!
கேரளத்தின் வயநாட்டில் மிகப்பெரும் துயரநிலை ஏற்பட்டுள்ளதை ஆழ்ந்த கவலையுடன் வெளிப்படுத்தியுள்ள கட்சியின் அரசியல் தலைமைக்குழு, எப்போதெல்லாம் இயற்கை பேரிடர்கள் தாக்குகின்றவோ அப்போதெல்லாம் கேரள மக்கள் ஒரே மனிதராக எழுந்து நின்று அந்த சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளது.
கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு, மிக விரிவான முறையில் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களையும் அரசியல் தலைமைக்குழு ஆய்வு செய்தது. கேரள அரசு மற்றும் கேரள மக்களின் மகத்தான பணிகளை கட்சி பாராட்டியது.
மேலும், இந்தப் பிரச்சனையில் கேரள இடதுஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக ஒன்றிய உள்துறை அமைச்சர் திட்டமிட்ட அவதூறுகளையும் பொய்ப்பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்துவிட்டிருப்பதை கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டித்ததாக தெரிவித்துள்ளது.
வயநாடு மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கட்சி நிதி திரட்டுகிறது. அதற்கு தாராளமாக நிதி அளிக்குமாறு நாட்டு மக்களுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.