கேரளாவில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதேசமயம் வடக்கு பகுதி மாவட்டங்களான மலப்புரம், வயநாடு ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இந்த மழை வெள்ளத்தில், நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 59 பேர் மாயமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் இன்றும் கனமழை பெய்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மழை நீடிப்பதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக 1057 வீடுகள் முழுவதுமாக இடிந்துள்ளது. 11,159 சேதம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 1,239 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கேரள முதல்வர் பிரனாய் விஜயன், நேரில் சென்று பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாயும், வீடு மற்றும் நிலங்களை இழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு 4 லட்சம் ரூபாயும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 10,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.