india

img

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரிய வழக்கு - விரைவில் விசாரணை

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்த மனுக்கள் விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதி அளித்தார்.

ஒன்றிய அரசு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்து, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாக சிதைத்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. 

பின்னர் அங்கு 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடைபெறாமல் இருந்ததால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றார்.

இந்த சூழலில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்துள்ள மனுக்களை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதி அளித்தார்.