india

img

புத்ததேவ் பட்டாச்சார்யா மரணம் - சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அஞ்சலி

புதுதில்லி, ஆக.8- கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரும், மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா (80) மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா 1966இல் மாணவராக இருந்தபோது கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்கள் பலவற்றில் அவர் பங்கெடுத்தார். 1968இல் மேற்கு வங்க ஜனநாயக இளைஞர் சம்மேளனத்தின் மாநில செயலாளராக மாறினார். 1971இல் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982இல் மாநில செயற்குழு உறுப்பினராக மாறினார். இந்தக் கால கட்டத்தில் புத்ததேவ் கட்சியின் அர்ப்பணிப்புமிக்க முன்னணி ஊழியராக மாறி கட்சி அளித்த பல்வேறு பொறுப்புகளையும் மேற்கொண்டு கட்சியின் முக்கிய தலைவராக உயர்ந்தார்.

தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா, 1985இல் நடைபெற்ற கட்சியின் 12ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக மாறினார். 2000இல் அரசியல் தலைமைக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 வரையிலும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்து, கட்சிக் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்களிப்புகளைச் செய்திட்டார்.

தோழர் புத்ததேவின் தனித்துவமிக்க பங்களிப்பு என்னவெனில், அவர் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தில் சுமார் முப்பது ஆண்டுகள் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்ததாகும். 2000 நவம்பரில் அவர் தோழர் ஜோதி பாசுவுக்குப்பின் முதலமைச்சரானார். அதன்பின்னர் இரண்டு தடவைகள் முதலமைச்சர் பொறுப்பை வகித்தார். இவ்வாறு அவர் இடது முன்னணி அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் கொள்கைகளை வடிவமைப்பதில் கேந்திரமான பங்கினை ஆற்றினார்.  

தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா, கலாச்சார நிறுவனங்களை வளர்த்தெடுப்பதிலும், முற்போக்கு கலாச்சார விழுமியங்களை நிலைநிறுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

தோழர் புத்ததேவிற்கு இலக்கியத்தில் ஆர்வம் அதிகம். அவர் ஒரு கவிஞர், நாடக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். பல சர்வதேச இலக்கியப் படைப்புகளை வங்க மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அவர் சீனாவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இவை தொடர்பாகச ஒரு புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

தோழர் புத்ததேவ், முதலமைச்சராக இருந்தபோதும், அதன் பின்னரும் கூட,  அர்ப்பணிப்புமிக்க ஒரு கம்யூனிஸ்ட்டாக, சாதாரணமாக இரண்டு அறைகள் மட்டும் கொண்ட ஒரு அபார்ட்மெண்டில் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.

தோழர் புத்ததேவ் அவர்களின் மரணத்துடன் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஓர் அத்தியாயம் முடிந்திருக்கிறது.

தோழர் புத்ததேவின் நினைவிற்கு அரசியல் தலைமைக்குழு தன் புரட்சிகர அஞ்சலியைச் செலுத்திக்கொள்வதுடன், தன் ஆழ்ந்த இரங்கல்களை அவருடைய மனைவி மீரா மற்றும் அவரது மகன் சுசேதனுக்கும் தெரிவித்துக் கொள்கிறது.

(ந.நி.)