தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.6,060 கோடி நன்கொடை திரட்டியுள்ள நிலையில் இதில் பெரும்பாலானத் தொகையை கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி வசூலித்திருப்பது அம்பலமாகியுள்ளது. மேலும் தங்களுக்கு நன்கொடை வழங்கிய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான அரசாங்க காண்ட்ராக்டுகளை வழங்கி சலுகையும் அளித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவால் வேறு வழியின்றி எஸ்பிஐ வங்கி செவ்வாயன்று மாலை தேர்தல் பத்திர திட்டத்தின் அனைத்து விபரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. தொடர்ந்து புதனன்று தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
பிரமாணப் பத்திரத்தில் எஸ்பிஐ,”உச்சநீதிமன்றம் இந்தத் திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு, ஏப்ரல் 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 22,030 தேர்தல் பத்திரங்கள் வரவு வைக்கப்பட்டுள்ளன. கடந்த 6 ஆண்டு காலம் விற்பனை செய்த தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரத்தை சுமார் 30 பிரிவுகளாக தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.16,518 கோடி” எனக் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. அதில் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
பாஜக ரூ.6,060 கோடி,
திரிணாமுல் காங்கிரஸ் 1,609 கோடி
தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக ரூ.6,060 கோடி நன்கொடை பெற்றுள்ளது. மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1,609 கோடியை பெற்று இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் கட்சி ரூ. 1,421 கோடியுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளது. சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி ரூ.1,214 கோடியுடன் 4-ஆவது இடத்திலும், பிஜு ஜனதாதளம் ரூ.775 கோடியுடன் 5-ஆவது இடத்திலும் இருந்தன.
பல்வேறு குளறுபடி
இந்நிலையில் தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வங்கி முழுமையாக வெளியிடவில்லை. பத்திரங்களின் பிரத்யேக எண்ணை குறிப்பிடப்படவில்லை. தேர்தல் பத்திரத்தின் எண்கள் தான் அதனை வாங்குபவர்களையும், நன்கொடையைப் பெற்றவர்களையும் இணைக்கக் கூடியது என்ற நிலையில், அதனை எஸ்பிஐ வங்கி வெளியிடாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக டாப்
தேர்தல் பத்திரப்பட்டியலில் வரிசை எண்கள் இல்லாததால் குறிப்பிட்ட நிறுவனத்திடம் இந்த அரசியல் கட்சி இவ்வளவு தொகையை பெற்றுள்ளது என்ற விவரமும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் எந்த கட்சி, எந்த நிறுவனத்திடம் எவ்வளவு தொகை பெற்றுள்ளது என்ற தகவலை துல்லியமாக பெறமுடியவில்லை. இந்த தகவலை பெறுவதற்கு திங்களன்றுக்குள் தேர்தல் பத்திரப்பட்டியலில் வரிசை எண்கள் பொருந்திய விபரங்களை எஸ்பிஐ வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய நிறுவனங்கள் 80 முதல் 90% தொகையை பாஜகவிற்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி, அம்பானி, டாடா எங்கே?
தேர்தல் பத்திர விவர பட்டியலில் ஒன்றிய பாஜக அரசின் மிகப்பெரிய கார்ப்பரேட் கூட்டாளிகளான அதானி, அம்பானி, டாடா நிறுவனங்களின் பெயர்கள் சாமார்த்தியமாக மறைக்கப்பட்டுள்ளன. கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், பிரமல் எண்டர்பிரைசஸ், டோரண்ட் பவர், பார்தி ஏர்டெல், டிஎல்எப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், வேதாந்தா லிமிடெட் ஆகிய நிறுவனங்களே அதிக நன்கொடை கொடுத்தவைகளாக உள்ளன. இது மிகப்பெரிய சர்ச்சையும், சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. காரணம் மோடி பிரதமரான பின்பு அதானி, அம்பானி, டாடா ஆகிய நிறுவனங்கள் அதிக பலனை பெற்றுள்ளன. சாதாரண நிறுவனங்களிடமே கோடிக்கணக்கான ரூபாயை பெற்றுள்ள மோடியின் பாஜக அதானி, அம்பானி, டாடா நிறுவனங்களிடம் நன்கொடை பெறாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. வரிசை எண் இல்லாததாலும், பட்டியலில் குறிப்பிட்ட பக்கங்கள் மட்டுமே வெளியாகியுள்ளதாலும் மோடி அரசின் தூண்டுதலால் எஸ்பிஐ வங்கி அதானி, அம்பானி, டாடா ஆகிய நிறுவனங்களின் பட்டியலை திட்டமிட்டு மறைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது.
அமலாக்கத்துறை மூலம் லாட்டரி நிறுவனத்திடம் ரூ.1,368 கோடி சுருட்டிய பாஜக
தேர்தல் பத்திரம் மூலம் அதிக நன்கொடை அளித்த நிறுவனமாக தமிழ்நாட்டின் கோயமுத்தூரைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனமான பியூச்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் (2020 -2024) ரூ.1,368 கோடி அளித்துள்ளது. இதில் 95% தொகை பாஜகவிற்கு கிடைத்துள்ளதாகவும் அமலாக்கத்துறை மூலமே மிரட்டி பிரம்மாண்ட தொகையை பாஜக வசூலித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் மார்ட்டினுக்கு சொந்தமான லாட்டரி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமலாக்கத்துறை சோதனைக்கு முன்பு பியூச்சர் கேமிங் நிறுவனம் குறைந்தபட்ச தொகையில் தேர்தல் பத்திரங்கள் வழங்கிய நிலையில், அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு பிரம்மாண்ட தொகையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் அதிக நன்கொடை வாங்கியதால் இந்நிறுவனத்திற்கு கடந்த 2022இல் கோவை - சீரடி சிறப்பு ரயில் இயக்க அனுமதியை ஒன்றிய பாஜக அரசு வழங்கியது. மார்ட்டின் மகன் ஜோஸ் மார்ட்டின் தற்போது பாஜகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை சோதனையும்...
நன்கொடை வழங்கிய நிறுவனங்களும்...
மோடி பிரதமர் ஆன பின்பு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ ஆகிய மத்திய அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளை மிரட்டவே அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை மோடி அரசு பயன்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களையும் மிரட்டி நன்கொடை வசூல் வேட்டையை நடத்தவும் அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்தியுள்ளது என்ற தகவல் தேர்தல் பத்திரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் அமலாக்கத்துறையை வைத்தே பாஜக நன்கொடையை கறந்துள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனம் மீது 2022 ஏப்ரல் 02 அன்று அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணையை நடத்தியது. அடுத்த 3 நாளில் அதாவது 2022 ஏப்ரல் 07 அன்று பியூச்சர் கேமிங் நிறுவனம் நன்கொடை அளித்துள்ளதாக தேர்தல் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று ஷீரடி சாய் எலெக்ட்ரிக்ஸ் நிறுவனம், டாக்டர் ரெட்டி நிறுவனம், கலாபட்டாரு நிறுவனம், மைக்ரோ லேப்ஸ், ஹீரோ நிறுவனம், யசோதா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களிடம் அமலாக்கத்துறையை ஏவி நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
வேதாந்தா நிறுவனத்திடம் ரூ.400 கோடி
13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வேதாந்தா நிறுவனம் ரூ.400 கோடி (தோராயமாக) தொகையை தேர்தல் பத்திரம் மூலம் வழங்கியுள்ளது. இந்நிறுவனத்திற்கு ஒன்றிய பாஜக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. மீண்டும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க உதவி புரிவதாகவும் பாஜக உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாகவே ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றத்தில் நம்பிக்கையுடன் வழக்கு தொடர்ந்து போராடியதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
பாகிஸ்தான் நிறுவனத்தையும் விட்டுவைக்காத பாஜக
பாகிஸ்தானை ஒரு எதிரி நாடாக சித்தரித்து அரசியல் ஆதாயம் பெறுவது பாஜகவின் நீண்டகால வழக்கம். கராச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் “ஹப் பவர் கம்பெனி (HUB Power company)” என்ற நிறுவனத்திடமும் தேர்தல் பத்திரம் மூலம் பாஜக நன்கொடை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்த நிலையில், நடைபெற்ற மக்களவை தேர்தலுக்காக “ஹப் பவர் கம்பெனி” நிறுவனத்திடம் பாஜக ரூ.95 லட்சம் நன்கொடை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரூ.20 கோடிக்கு
ரூ.47,350 கோடி சன்மானம்
பாஜக ஆளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த டோரண்ட் குழுமம் கடந்த ஜனவரி 10, 2024 அன்று ரூ.20 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கியது. அடுத்த மூன்று நாட்களில் அதாவது ஜனவரி 13, 2024 அன்று டோரண்ட் குழுமத்திற்கு குஜராத் பாஜக அரசு ரூ.47,350 கோடி மதிப்பிலான முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ரூ.966 கோடியை பெற்று இரட்டை சுரங்கப்பாதை,
புல்லட் ரயில் திட்டத்தை கொடுத்த பாஜக
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட கட்டுமான உள்கட்டமைப்பு நிறுவனமான மேகா இன்ஜினியரிங் & இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (MEIL) ரூ.966 கோடி தேர்தல் பத்திரம் வழங்கியுள்ளது. இது இந்தியாவில் அதிக தொகையை நிதியாக வழங்கிய இரண்டாவது பெரிய நிறுவனம் ஆகும். ஏப்ரல் 11, 2023 அன்று ரூ.140 கோடி வழங்கியுள்ள மேகா நிறுவனத்துக்கு ரூ.14,400 கோடியில் தானே - போரிவலி (மகாராஷ்டிரா) இரட்டை சுரங்கப்பாதை திட்டப் பணியை கொடுத்தது மோடி அரசு. மங்கோலியாவில் ரூ.5400 கோடி பசுமை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தை இந்தியா சார்பாக பெற்றது. ரூ.3681 கோடி மதிப்புள்ள மும்பை புல்லட் ரயில் நிலையத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தையும் பெற்றது. ரூ.38,000 கோடி மதிப்பிலான காலேஸ்வரம் லிப்ட் பாசனத் திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சமீபத்தில் சிஏஜி சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
பூனைக் குட்டி வெளியே வந்தது
குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ரூ.410 கோடி அளவில் நன்கொடை அளித்துள்ளது. இந்த நிறுவனம் தபஸ் மித்ராவுக்குச் சொந்தமானது ஆகும். மோடியின் நெருங்கிய நண்பர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன ஆடிட்டராக இருக்கும் இந்த தபஸ் மித்ரா தனது பெயரில் உள்ள குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் ரூ.410 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் தபஸ் மித்ராவின் நிறுவனம் வெறும் ரூ.10 கோடி மட்டுமே லாபம் ஈட்டிய நிலையில், எவ்வாறு ரூ.410 கோடி அளவில் நன்கொடை அளித்தது என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. ஒருவேளை பாஜகவிற்காக தபஸ் மித்ரா மூலம் அம்பானி நன்கொடை வழங்கியுள்ளாரா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
நவ யுகா நிறுவனத்திடம் பல கோடி
சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர். இந்த சுரங்கத்தை கட்டி வரும் நிறுவனமான நவ யுகா நிறுவனம் பல கோடி ரூபாய் அரசியல் கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கியுள்ளது. இதில் 90% தொகையை பாஜக பெற்றுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.