வாட்ஸ்அப் மூலம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் மக்களிடம் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டது தொடர்பாக 'The Washington Post' வெளியிட்ட கட்டுரையை சவுக்கு ஆன்லைன் இணையதளத்தில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக மற்றும் சங்பரிவாரங்கள் எவ்வாறெல்லாம் தயாராகி மக்களிடம் பிரச்சாரம் செய்தன, மக்களிடம் வெறுப்புப் பிரச்சாரத்தை டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் எவ்வாறு கொண்டு சென்றன, மதரீதியாக மக்களை எவ்வாறு பிளவுபடுத்தின, அதை வாக்காக மாற்ற என்னென்ன திட்டமிடல்கள் செய்தன என்பது குறித்து “தி வாஷிங்டன் போஸ்ட்” நாளேடு கட்டுரை வெளியிட்டுள்ளது.
பரந்த ஆய்வு
அந்த நாளேட்டின் இந்த செய்திக் கட்டுரையை வெளியிடும் முன் கர்நாடக மாநிலத்தில் அந்த நாளேட்டின் பல செய்தியாளர்கள் பல மாதங்கள் தங்கி ஆய்வு செய்து, பாஜக நிர்வாகிகள் பலரையும் பேட்டி எடுத்து, மக்களிடம் பேசி, கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
இன்றுள்ள நவீன சமூக வலைத்தளங்களை, டிஜிட்டல் தளங்களை பாஜக எவ்வாறு பயன்படுத்துகிறது, மக்களிடம் வெறுப்பை வேகமாக எவ்வாறு பரப்புகிறது, இதற்காக வைத்திருக்கும் மிகப்பெரிய கட்டமைப்பு, வெளிப்பணி செய்ய நிறுவனங்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரை விசாலமாக ஆய்வு செய்திருக்கிறது.
சாதாரனப் பிரசாரம்
கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகே சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் பாட்டீல். அரசு வங்கி ஒன்றில் காசாளராகப் பணிபுரிந்து வருகிறார். கர்நாடக தேர்தல் நேரத்தில் தன்னுடைய மொபைல் போனில் வாட்ஸ்அப்பில் வந்த செய்திகள் குறித்தும் குறிப்பாக பாஜகவினர் அனுப்பிய செய்திகள் குறித்தும் “தி வாஷிங்டன் போஸ்ட்” செய்தியாளரிடம் அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில் “ என்னுடைய வாட்ஸ்அப்பிற்கு முதலில் பாஜக சார்பில் அனுப்பப்பட்ட ஒரு செய்தி வந்தது. அதில் எங்கெல்லாம் சாலை அமைத்தோம், பள்ளிக்கூடங்கள் புதிதாகக் கட்டினோம் என்ற விவரங்களும், இலவச உணவு வழங்கியது உள்ளிட்ட விவரங்கள் இருந்தன. தேர்தல் நேரத்தில் ஒரு அரசியல் கட்சி செய்யும் அதே வழக்கமான பிரச்சாரமாகத்தான் அது இருந்தது.
விஷமப் பிரசாரம்
ஆனால், தேர்தல் தேதி நெருங்கியவுடன் பாஜகவிடம் இருந்து வந்த வாட்ஸ்அப் செய்திகள் அனைத்தும் இருள்சூழ்ந்து இருந்தன. அதாவது, கர்நாடகாவில் முஸ்லிம்களால் கொல்லப்பட்ட 24 இந்துக்களின் பெயர்களைப் பட்டியலிட்டது.
இந்து சிறுமிகளை லவ் ஜிஹாத் முறையில் காதலித்து, அவர்களை ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் முஸ்லிம் இளைஞர்கள் சேர்க்கிறார்கள் என்று செய்தி வந்தது. இறுதியாக, “கர்நாடகாவில் பாஜக இருந்தால், உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள், இந்துக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்” என்ற வாட்ஸ்அப் செய்தி வந்தது.
தினசரி 6 வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து 120 அரசியல் செய்திகள் பல்வேறு விதங்களில் எனக்கு வந்தன. அந்த ஒவ்வொரு செய்தியும் நான் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று என்னை நினைவூட்டும் விதத்தில் இருந்தன. இந்தியாவை ஆளும் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களியுங்கள் என இருந்தது” எனத் தெரிவித்தார்.
**உலகில் முன்னணி கட்சி **
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மற்றும் அது சார்ந்த இந்து தேசியவாதக் குழுக்கள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தைக் கொண்ட தேசத்தில் தங்களின் பிடியை இறுகப்பற்ற, சமூக வலைத்தளங்களை தங்களின் அரசியல் லாபத்துக்காகவும், நோக்கங்களுக்காகவும், சித்தாந்தங்களை பரப்பவும் பயன்படுத்துவதில் உலகளவில் முன்னணியாக திகழ்கின்றன.
பாஜகவும், அதன் இந்துத்துவா அமைப்புகளும் அடிக்கடி பொய்யான மற்றும் மத உணர்வுகளைத் தூண்டும் செய்திகளைப் கச்சிதமாகப் பரப்பி இந்திய எல்லைகளைக் கடந்து வேதனைகளையும்,கடும் கண்டனத்தையும் பெற்றனர்.
18 கோடி உறுப்பினர்கள் கொண்ட பாஜகவின் வெற்றியின் மையமாக இருப்பது அமெரிக்க சமூக வலைத்தளங்கள் (ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்) மீது கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய செய்திபரப்பும் இயந்திரம்தான்.
மத சிறுபான்மையினரை ஒதுக்கிவைக்கவும், எதிர்வரும் விமர்சனங்களை நசுக்கவும்தான், பல்வேறு வழிகளில் தொழில்நுட்பத்தை இந்து தேசியவாதிகள் பயன்படுத்துகிறார்கள். வெறுப்புப் பேச்சு, வதந்தி குறிப்பாக சமீப ஆண்டுகளாக இந்தியாவில் வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்களைப் பரப்புதல் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள சமூக வலைத்தள நிறுவனங்கள் இந்த வெறுப்புச் செய்திகளை, பதற்றமடைய வைக்கும் செய்திகளை பார்த்து மிரண்டுள்ளனர், சில நேரங்களில் அதை தெரிந்தும் தெரியாததுபோல் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
சர்வாதிகாரத்தை நோக்கி
ஏனென்றால், அமெரிக்காவில் உள்ள அதிபர் ஜோ பிடன் அரசாங்கம், சீனாவுக்கு சரியான பதிலடியாக ஆசியாவில் இந்தியாவைத்தான் நினைத்து வளர்த்து வருகிறது. ஜனநாயக நாடான இந்தியாவை பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்தி வருகிறார் என்று தெரிந்தும்கூட அமெரிக்கா ஆதரித்து வருகிறது.
உலகின் பார்வை மோடி அரசின் நடத்தை மீது இந்த மாதத்தில் இருந்துதான் திரும்பியிருக்கிறது. அதாவது, கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு நேரடியாகப் பங்கு இருக்கிறது என்று கனடா அரசு குற்றம்சாட்டியது. இதனால் இந்தியாவை மேற்கத்திய நாடுகள் நெருங்கும் முயற்சியில் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
1.50 லட்சம் பேர்
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நேரத்தில் “தி வாஷிங்டன் போஸ்ட்” நாளேட்டின் செய்தியாளர்கள் பலவாரங்கள் தங்கி இருந்து பலதரப்பட்ட நபர்களிடம் பேட்டி கண்டனர். இதில் பாஜகவினர், பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள், இந்துத்துவா அமைப்பு நிர்வாகிகளிடம் பேசி,கருத்துக்கள் கேட்கப்பட்டன.
அதாவது இந்துக்களின் அச்சத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பாஜக ஊழியர்களும், அது தொடர்புடைய நிர்வாகிகளும் எவ்வாறு சமூக வலைத்தளத்தில் பதிவுகளை உருவாக்குகிறார்கள் என்பது வெளிக்கொணரப்பட்டது. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்ய 1.50 லட்சம் சமூக ஊடக ஊழியர்களை எவ்வாறு அமர்த்தினார்கள் என்றும் தெரியவந்தது என வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, பாஜகவும், இந்துத்துவா அமைப்புகளும், மக்களிடையே வன்மத்தைப் பரப்பும் செய்திகளை பரப்பினர், காங்கிரஸ் கட்சிகுறித்த தவறான எண்ணங்களை லட்சக்கணக்கான மக்களிடம் பரப்பினர் என்பது தெரியவந்தது என வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
பாஜகவின் அதிகாரபூர்வ ஆன்-லைன் பிரச்சாரம் தவிர்த்து, அதற்கு ஈடாக பாஜக நிர்வாகிகள் தனியாகப் பிரச்சாரங்களையும் முன்னெடுத்தனர் என்று பாஜக நிர்வாகிகள், பிரச்சார ஆலோசகர்கள், பாஜக ஆதரவாளர்களிடம் கேட்டபோது தெரியவந்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
ட்ரோல் ஏஜென்ட்
சமூக வலைத்தளத்தில் பாஜக குறித்து விமர்சிப்பவர்களையும், தவறாகப் பேசுபவர்களையும் ட்ரோல் செய்யவும், வெறுப்புப் பிரச்சாரம் செய்யவும், வன்மத்தைத் தூண்டும் செய்திகளை வெளியிடவும் “கன்டென்ட் கிரியேட்டர்ஸ்” அதாவது “மூன்றாம் தரப்பினரிடம்” தகவல் தொடர்பை பாஜக நிர்வாகிகள் ஏற்படுத்தி இருந்தனர் என்பது பலரிடம் நடத்தி நேர்காணலில் தெரியவந்தது என்று தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த மூன்றாம் தரப்பினரின் பணி என்பது, இந்தியாவை தவறாகச் சித்தரிப்பது, மோசமான வண்ணம் தீட்டுவது, 14 சதவீத முஸ்லிம் சமூகத்தைப் பற்றி தவறாகப் பேசுவது, மதச்சார்பற்ற, சுதந்திரமான காங்கிரஸ் கட்சியால் தூண்டப்பட்டு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று செய்தியைப் பரப்புவதாகும். இதை முடிவுக்குகொண்டுவர ஒரே வழி பாஜகவுக்கு வாக்களிப்பதுதான் என்று செய்திகளைப் பரப்பினர் என்று தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
நீடிக்கும் மர்மம்
இந்தியாவில் இன்று வாட்ஸ்அப் மிகப்பெரிய சந்தையைக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 50 கோடி வாட்ஸ்அப் பயனாளிகள் உள்ளனர். வன்முறையைத் தூண்டவும், பிரிவினயை ஏற்படுத்தவும் வாட்ஸ்அப் மிகப்பெரிய தளமாக இருக்கும் என்று சமூகஊடக ஆய்வாளர்களும், அரசு அதிகாரிகளும் உணர்ந்துவிட்டனர்.
ஆனால் அரசியல் விஞ்ஞானிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் நீண்ட காலமாக இருக்கும் மர்மமாக என்னவென்றால், பாஜகவின் வாட்ஸ்அப் சூழலில் என்ன நடக்கிறது என்பதும், டிஜிட்டல் வெற்றியைப் பிரதிபலிக்க எப்படி போராடுகிறது என்பதுதான்.
இந்திய அரசியலில் வாட்ஸ்அப் செயலியின் பங்கு குறித்து ஆய்வு செய்த ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிரண் கரிமேலா கூறுகையில் “ பாஜக செய்யும் டிஜிட்டல் பிரச்சாரங்களைப் போலவே மற்ற கட்சிகளும் முயன்றன. பிரேசிலில்கூட இது போன்று நடந்தது. ஆனால், பாஜகதான் வாட்ஸ்அப்பில் முதலில் தேர்ச்சி பெற்று, அதை அளவிட முடிந்தது.
இதற்கு வளங்கள், திட்டமிடல், முதலீடு, உள்கட்டமைப்பைக் உருவாக்குவதில் முழு நம்பிக்கை தேவை. ஆனால் இந்த குழுக்களில் நடப்பதில் 99 சதவீதம் வரம்பற்றவை என்றாலும் எங்களுக்குத் தெளிவுநிலை இல்லை.” எனத் தெரிவித்தார்
**அஸ்திரம் **
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நேரத்தில் வாட்ஸ்அப்பில் வரும் “அஸ்திரம்” என்பது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதாவது வெறுப்புணர்ச்சியை தூண்டும் பிரச்சாரம், வன்முறையைத் தூண்டும் பிரச்சாரத்தைச் செய்யக்கூடியவரைத்தான் அஸ்திரம் என்று பாஜகவினர் அழைக்கிறார்கள்.
இந்த அஸ்திரத்தை யார் உண்மையில் உருவாக்குகிறார்கள், அவர்களின் அடையாளம் என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த அஸ்திரம் மீது பாஜகவினருக்கு பெரிய மரியாதை இருக்கிறது என்று தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடுப்பி மாவட்டத்தில் பாஜகவின் சமூகஊடகத்தின் தலைவரான சுதீப் ஷெட்டி கூறுகையில் “ பாஜகவின் சமூக ஊடக கணக்குகளைவிட, இந்த அஸ்த்ராவின் கணக்குகள் மிகவும் வலிமையானவை, ஆதரவும் அதிகம். இதுதான் எங்களின் ரகசிய ஆயுதம்” எனத் தெரிவித்தார்.
வகுப்புவாத மோதல்
கர்நாடகத்தின் உடுப்பி, மங்களூரு ஆகியவை பல்கலைக்கழகங்களுக்கும், வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களுக்கும் புகழ்பெற்றவை. கலாச்சார ரீதியாக தொண்மையான நகரங்களான இவற்றில் முஸ்லிம்களும், இந்துக்களும் அதிகமாக வசிக்கிறார்கள். கலாச்சார ரீதியாக வேறுபட்டு இருப்பதால் என்னவோ இந்த இரு நகரங்களும் கர்நாடகத்தின் மற்ற நகரங்களைவிட, மதரீதியான மோதல்களின் மையமாகவே இருந்து வருகிறது.
இந்த இரு நகரங்களிலும் கடந்த 1980களி்ல் இருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதிக்கம் இருந்து வருகிறது. காலப்போக்கில் இங்கிருந்து ஏராளமானோர் ஆர்எஸ்எஸ் அமைப்பிலும், பாஜகவிலும், பஜ்ரங் தளத்திலும் சேர்ந்தனர்.
பசுக்களை முஸ்லிம்கள் கடத்துகிறார்கள் என்று அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, இந்து மதத்தை பாதுகாக்கிறோம் என்று கூறுவது, வேற்று மதத்தைச் சேர்ந்த காதலர்களை பிரித்து, தாக்குதல் நடத்துவதை பஜ்ரங்தளத்தின் தொண்டர்கள் இங்கு அதிகமாக அரங்கேற்றுகிறார்கள்.
இந்த இரு நகரங்களிலும் காங்கிரஸ், பாஜக இடையே சமூக ஊடகங்களில் மிகப்பெரிய போர் நடந்து வருகிறது. கடைசி ஓவர் போலத்தான்..
மங்களூருவில் உள்ள பாஜகவின் சமூக ஊடகத்தின் தலைவர் அஜித் குமார் உல்லால், தி வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டிடம் பேசுகையில் “ கர்நாடகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மக்களிடையே பிரச்சாரம் செய்யும் பாஜகவின் சமூக ஊடகத்தை நடத்தி வருகிறேன். ஒரு பகுதிக்கு 9 தன்னார்வலர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் துணைத் தலைவர், காப்பி ரைட்டர், கிராபிக் டிசைனர், புகைப்படங்கள், லோகோ உள்ளிட்டவை வழங்கப்படும். இவர்கள் படங்கள், பிரச்சாரத்தை தயாரித்து வாட்ஸ்அப்பில் அனுப்பும் வகையில் தயாரிக்க வேண்டும்.
களத்துக்குச் செல்லும் தன்னார்வலர்கள், வாக்காளர் பட்டியலுடன் வீடுவீடாகச் சென்று தகவல்களைச் சேமிப்பார்கள், சிலர் பாஜகவின் வாட்ஸ்அப் குழுவிலும் சேர்க்கப்படுவார்கள். நான் மட்டும் 200 வாட்ஸ்அப் குழுவில் இருந்தேன். மொபைல் போன் வைத்திருக்கம் ஒவ்வொரு பாஜக தொண்டரும் ஒரு போர்வீரர்தான்.
தேர்தல் காலத்தில் வாட்ஸ்அப்பில் தொடக்கத்தில அரசின் சாதனைகள், திட்டங்கள், சேவைகளை மட்டுமே கூறுவோம். ஆனால் தேர்தல் நெருங்கும்போது, பிரச்சாரத்தின் தொணி மாறும், மதரீதியான பிரச்சாரங்கள், செய்திகள், உணர்வுகளைத் தூண்டும் செய்திகள் பிரச்சாரம் செய்யப்படும். கிரிக்கெட்டில் கடைசி சில ஓவர்களில் எவ்வாறு பெரிய ஷாட்களை பேட்டர்கள் விளாசுவார்களோ அதேபோல தேர்தல் நெருங்கும்போது, பலவிதமான செய்திகள் பிரச்சாரம் செய்யப்படும்.
குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் முதல் திப்பு சுல்தான் வரை செய்திகளைப் பரப்புவோம். இந்துக்களை எவ்வாறு திப்பு சுல்தான் கொன்று குவித்தார் என்பதை கூறுவோம். இந்த செய்திகளை பாஜகவினர் யாரும் உருவாக்கமாட்டார்கள். ஆனால், ஏதாவது ஒரு வழியில் பரவும். ” எனத் தெரிவித்தார்
கர்நாடகத்தின் பாஜக சமூக ஊடகத்தின் முன்னாள் தலைவர் வினோத் கிருஷ்ண மூர்த்தி கூறுகையில் “ கர்நாடகத் தேர்தலின்போது பாஜக சார்பில் 1.50லட்சம் வாட்ஸ்அப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.
எப்போது பாஜக பிரச்சாரம் வீரியமடைந்தது?
2016ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு துறைக்குள் கால் பதித்து மொபைல் டேட்டாவை இலவசமாக வழங்கத் தொடங்கியபின்புதான் சமூக வலைத்தளப் பிரச்சாரம், குறிப்பாக வாட்ஸ்அப் பிரச்சாரம் வேகமெடுத்தது.
பாஜக நிர்வாகிகள், வாக்காளர்களின் விவரங்கள், செல்போன் எண்களை சேகரிக்கத் தொடங்கி, அவர்களுக்கு செய்தி அனுப்பும் பணியைத் தொடங்கினர்.குறிப்பாக குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜக, “பைத்தான் கோட்” எனப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பை ஹேக் செய்தது. இதன் மூலம் ஒரு கணினி மூலம் ஒரு கிளிக்கில் ஏறக்குறைய 10 ஆயிரம் பேருக்கு செய்திகளை அனுப்ப முடிந்தது என்று தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
மெட்டாவின் கட்டுப்பாடு
2018ம் ஆண்டு முதல் வாட்ஸ்அப்பில் செய்திகளை ஃபார்வேர்டு செய்வதில் வாட்ஸ்அப் நிறுவனம் கட்டுப்பாடு கொண்டுவந்தபின், வதந்திகள் வேகமாகப் பரவுவது குறைந்தது. அதற்கு முன்புவரை வாட்ஸ்அப்பில் வரும் வதந்திகள் மூலம் கும்பல் கொலைகளும், சிறுபான்மையினர் தாக்கப்படும் நிகழ்வுகளும் நடந்தன.
2020ம் ஆண்டு வாட்ஸ்அப் செயலியின் தாய்நிறுவனமான மெட்டா ஆய்வாளர்கள் இந்தியாவில் ஆய்வு நடத்தினர். அப்போது ஆய்வாளர்களிடம் பயனாளிகள் அளித்த புகாரில் “ ஏராளமான செய்திகள் இரு தரப்பு மக்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டும் விதத்திலும், வெறுப்பை வளர்க்கும் விதத்திலும், குறிப்பாக முஸ்லிம்களைக் குறிவைத்தும் உருவாக்கி வலம் வருகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிரான போக்குதான், அடுத்துவரும் தேர்தலில் பிரதானமாக இருக்கும்” என்று தெரிவித்தனர். இந்த செய்தியை தி போஸ்ட் இதழின் விசிலூதி பிரான்ஸ் ஹாக்ஜென் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப்பில் வரும் வதந்திகள், அரசியல் பிளவுகளை உருவாக்கும் செய்திகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மெட்டாவின் செய்தித்தொடர்பாளர் பிபாசா சக்ரவர்த்தியிடம் கேட்டபோது, “ வாட்ஸ்அப்பில் இனிமேல் செய்திகளை ஃபார்வேர்டு செய்வதில் கட்டுப்பாடு கொண்டுவரப்படும், ஸ்பாம்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது, தானாகவே செய்திகளை பெரிய குழுக்களுக்கு அனுப்புவது தடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்
கர்நாடகத்தில் ஆன்-லைன் தேர்தல் பிரச்சாரம் குறித்து தெரியுமா எனக் கேட்டபோது அதற்கு சக்ரவர்த்தி பதில் அளிக்கையில் “ வாட்ஸ்அப்பில் தகவல்களை பரிமாறும்போது அது மற்றவர்களால் ஹேக் செய்ய முடியாது, அதற்கான பாதுகாப்பை அளி்க்கி்றது. இதன் மூலம் வாட்ஸ்அப்பில் வரும் ஒருவருடைய தகவல்களை மற்றவர்கள் பார்க்க முடியாது, கேட்கமுடியாது என்பதாகும்” எனத் தெரிவி்த்தார்.
அஸ்திரம் என்ற சுனில் பூஜாரி
விஷமச் செய்திகளைப் பரப்பும் அஸ்திரம் எனச் சொல்லப்படுபவர்களில் சுனில் பூஜாரியும் ஒருவர்.இவரிடம் மட்டும் 30 வாட்ஸ்அப் குழுக்களை நி்ர்வகிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.
பூஜாரிக்கு 7 வயதாக இருக்கும்போதே ஆர்எஸ்எஸ் ஆதரவில் அவரின் குடும்பம் சென்றது. பூஜாரியின் தந்தை மறைவுக்குப்பின், 10-ம் வகுப்புப்பின் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்து தீவிரமான தொண்டராக பூஜாரி மாறினார்.
பூஜாரியின் உருமாற்றம்
இந்து மதத்தின் நம்பிக்கைகள், இந்திய வரலாறு உள்ளிட்ட 3 புத்தகங்களை பூஜாரி எழுதி தன்னை எழுத்தாளராகவே அடையாளப்படுத்தினார். அதிதீவிர இந்துப் பற்றாளராகவும், பஜ்ரங் தள உறுப்பினர் போலும் பூஜாரி தன்னை வெளிப்படுத்தவில்லை.
ஆனால், எதுவுமே மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதை உணர்ந்த பூஜாரி 2020ம் ஆண்டு அஸ்த்ரா பக்கத்தை இணையதளத்தில் உருவாக்கி, மற்றவர்களை ட்ரோல் செய்யத் தொடங்கினார். வன்மத்தைக் கக்கும் தலைப்புகள், புகைப்படங்கள், புகைப்பட இணைப்புகளை உருவாக்கி, அந்த செய்திகளையும், புகைப்படங்களையும் புஜாரி வைரலாக்கினார். இந்த அஸ்த்ராவுக்குப் பின்னார் இருப்பது மிகப்பெரிய கும்பல் என்று மக்கள் நினைக்கத் தொடங்கினர்.
சுனில் பூஜாரி தி வாஷிங்டன் டைம்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில் “ என்னை மக்கள் பார்த்தால், நான் ஒல்லியாகவும், குட்டையாக இருப்பதாக நினைப்பார்கள். ஆனால், எனக்கு கடவுளிடம் இருந்து ஒரு பரிசு கிடைத்துள்ளது. சரஸ்வதி தேவி என் நாவிலும், கைகளையும் பற்றியுள்ளார்”எனத் தெரிவித்துள்ளார்.
பழிவாங்கும் முயற்சி கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் உள்ளூர் தொழிலதிபர் யாஷ்பால் சுவர்னாவை வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்து அதிர்ச்சியளித்தது. 2005ம் ஆண்டில் உள்ளூரில் பஜ்ரங் தளத்தின் தலைவராக இருந்தவர் யாஷ்பால் சுவர்ணா.
இரு முஸ்லிம்கள் வாகனத்தில் பசுக்களை ஏற்றி வந்தபோது அதைத் தடுத்து நிறுத்தி, இருவரையும் அடித்து உதைத்து நிர்வாணப்படுத்தி போலீஸிடம் யாஷ்பால் ஒப்படைத்தார். இந்த சம்பவத்தின் மூலம் யாஷ்பால் சுவர்ணா மக்களால் அறியப்பட்டார்.
யாஷ்பால் சுவர்ணாவின் கடந்த காலம் மிகவும் மோசமான தோற்றத்துடன், அடாவடி, ரவுடி என்ற தோற்றத்துடன் இருந்தது. இதையடுத்து, சுவர்ணாவின் பெயரை மக்கள் மத்தியில் நல்லமுறையில் கொண்டு செல்லவும், பணிவானவர் என்பது போல் வெளிக்காட்டவும் வாட்ஸ்அப் குழுக்கள் செயலில் இறங்கின. இந்தப் பணியில் முக்கியமானவர் அஸ்த்ரா எனப்படும் பூஜாரி.
பூஜாரி தனது பிரச்சாரக் குழுக்களிடம், “ சுவர்ணா குறித்து நல்லவிதமாகப் பிரச்சாரம் செய்யுங்கள். அது மக்களிடம் எடுபடாவிட்டால், கடந்த காலங்களில் நடந்த கலவரங்கள், வகுப்புவாதக் கொலைகளைப் பயன்படுத்தி எழுதுங்கள்” எனத் தெரிவித்தார்.
இதுபோலத்தான் கர்நாடகத் தேர்தலை பாஜக, தனது இந்துத்துவா குழுக்களின் உதவியுடனும், சங்பரிவார் அமைப்பின் ஆதரவுடனும் தேர்தலைச் சந்தித்தது. பாஜகவுக்கு ஆதரவாக தொண்டர்கள் ஆதரவைத் திரட்டுவதில் சமூகவலைத்தளப் பிரச்சாரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஆதாரம்: தி வாஷிங்டன் போஸ்ட்
தமிழாக்கம்: பிரித்விராஜ்
நன்றி : www.savukkuonline.com