புதுதில்லி, ஜூலை 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜார்கண்ட் மாநிலக்குழு உறுப்பினர் சுபாஷ் முண்டா கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டும் தெரிவித்துள்ளது. அவர் புதன் அன்று ராஞ்சியில் தலாடி சவுக்கில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் இருந்தபோது சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு மேலும் கூறியிருப்பதாவது:
34 வயதான முண்டா, ராஞ்சி மாவட்டத்தில் நாக்ரி பகுதியில் மக்கள் செல்வாக்குடன் உள்ள மாபெரும் தலைவராவார். தோழர் முண்டா, பழங்குடியினர் ஏழை மக்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களில் முன்னணியில் நின்று போராடுபவர். அந்தப் பகுதிகளில் பழங்குடியினரிடமிருந்து நிலங்களைப் பறித்திட முயன்றுவந்த நில மாஃபியாக்களுக்கும், கந்துவட்டிக் காரர்களுக்கும் இதனால் இவர் மீது மிகுந்த ஆத்திரம் இருந்து வந்தது.
மக்கள் மத்தியில் மகத்தான செல்வாக்குடன் இவர்கள் விளங்கியதன் காரணமாக அங்கே ஹாதியா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலின் போது இரு தடவையும், சமீபத்தில் மண்டார் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின்போதும் அவரை வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தியது.
இந்தக் கொடூரமான கொலை குறித்து விசாரணை செய்திட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, கொலை செய்தவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது. இவ்வாறு அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
(ந.நி.)