india

img

தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு நியமிக்கத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

ஒன்றிய அரசின் புதிய சட்டத்தின் கீழ் தற்பொழுது காலியாக உள்ள தேர்தல் ஆணையர்கள் இடங்களை நிரப்புவதற்கு ஒன்றிய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை (மார்ச் 9) சனிக்கிழமை மாலை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை உடனடியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஏற்கனவே, மற்றொரு தேர்தல் ஆணையரான அனூப் சந்திர பாண்டே 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஓய்வுபெற்றார். அவர் ஓய்வுபெற்று 23 நாட்களாகியும் புதிய ஆணையர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஒருவர் மட்டுமே பொறுப்பிலுள்ளார்.  கடந்தாண்டு டிசம்பரில் மோடி அரசால் கொண்டு வரப்பட்ட புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை  நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-இன்  படியே தேர்தல் ஆணையத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்; தேர்தல் ஆணையர் களைத் தேர்ந்தெடுக்கும் புதிய நடைமுறை, பிரதமருக்கும் அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. இந்த நிலையில், ஒன்றிய அரசின் புதிய சட்டத்தின் கீழ் தற்பொழுது காலியாக உள்ள தேர்தல் ஆணையர்கள் இடங்களை நிரப்புவதற்கு ஒன்றிய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.