ஜே.என்.யூ-வில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில் மாணவர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜே.என்.யூ-வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை நடத்தியுள்ளனர். அக்கருத்தரங்கம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் பெரியார் படத்தையும், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தி உள்ளார்.