புதுதில்லி, மே 16- சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்திட்ட நம் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்களை அளித்திட்ட பாஜக தலைவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுதும் மே 18ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு வெகுஜன அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன.
இது தொடர்பாக சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்திட்ட நம் மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு, பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரன் கைது செய்யப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தி புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில் மேற்கொண்டுவரும் அறப் போராட்டம் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாடு முழுதும் இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. எனினும் குற்றமிழைத்த கயவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் இதுவரை ஒன்றிய அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை மேலும் கூர்மைப்படுத்தும் விதத்தில் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகியவற்றின் சார்பில் வரும் மே 18 (வியாழன்) அன்று நாடு முழுதும் குற்றமிழைத்த நபர் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
இப்போராட்டங்கள் வெகுஜன தர்ணா போராட்டம், பேரணிகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்துடன் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் முதலான வடிவங்களில் அமைந்திடும். மல்யுத்த வீராங்கனைகளுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக ஒன்றிய அரசாங்கம் எந்த அளவிற்கு குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது என்பதை நாட்டு மக்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லும் விதத்தில் இந்தப் போராட்டங்கள் அமைந்திடும்.
இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் பெரும்திரளாகக் கலந்துகொள்வார்கள்.
ஒன்றிய அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்யாமல் மேலும் தாமதம் செய்யும்பட்சத்தில் நாடு முழுதும் மேலும் பெரிய அளவிலான இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றும் நாங்கள் அனைவரும் ஒன்றிய அரசாங்கத்தை எச்சரிக்கிறோம். போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்கும்வரை, நாங்கள் மல்யுத்த வீராங்கனைகளுடன் உறுதியாக நிற்போம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு வெகுஜன அமைப்புகளின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(ந.நி.)