india

img

அத்திக் அகமது கொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை! - சீத்தாராம் யெச்சூரி

உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் எம்.பி அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர், போலீசார் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை என்று சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.

வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில், அத்திக் அகமது  மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ஆம் தேதி இரவு, இருவரும் கைகளில் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் நீதிமன்றத்திலிருந்து பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அவர்களை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். செய்தியாளர்களிடம் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த 3 பேர்  திடீரென்று துப்பாக்கியால் அத்திக் அகமது, அஷ்ரப் அகமதுவை சுட்டுக் கொன்றனர். இருவரையும் கொலை செய்த பிறகு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கொலையாளிகள் கோஷமிட்டனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அவரது மகன் ஆசாத் அகமது என்கவுண்டரில் போலீசாரால் கொல்லப்பட்டார். இந்த நிலையில், அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் போலீசார் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை என்று சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:  "உத்தரப்பிரதேசத்தில் காவல்துறையின் வலுவான பாதுகாப்பு இருக்கும் பொழுதே கொலைகள் நடந்திருக்கும் விதத்தைப் பார்க்கும் பொழுது இந்த படுகொலைக்கு நிர்வாகத்தின் ஆசியும் ஆதரவும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணையும், கடுமையான தண்டனையும் மிக அவசியம்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.