india

img

மக்களவை தேர்தலில் 12,915 தபால் வாக்குகள் நிராகரிப்பு - தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவை தேர்தலில், 12,915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடை தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோரின் தபால் வாக்குகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விண்ணப்ப படிவம் 12, 12ஏ முறையாக வழங்கப்படவில்லை எனவும், சிறு காரணங்களுக்காக தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும், காவல் துறையை சேர்ந்தவர்களின் 90,002 தபால் வாக்குகள் முழுமையாக பதிவானதாக தகவல் வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்கு குறித்த தகவல்களை வெளியிடவில்லை எனவும்,தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தபால் வாக்களிக்க தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும். மேலும், இந்த வாக்குகளை வாக்கு எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கோரி இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் என 4,35,003 பேருக்கு தபால் வாக்கு அளிக்க படிவங்கள் வழங்கப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்த இந்திய தேர்தல் ஆணையம், முறையாக படிவங்கள் நிரப்பாமல் இருந்தது போன்ற பல்வேறு காரணங்களால் 12,915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இதையடுத்து தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் 2 நாட்களில் இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்றம், தபால் வாக்குகள் தொடர்பாக குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 

 


;