நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 143 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். (டிசம்பர் 21 அன்று 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.) பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் அஇஅதிமுக போன்ற ‘விசுவாசமிக்க’ எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் டிசம்பர் 22 வரை அவையில் இருக்க மாட்டார்கள். இத்தகைய இடைநீக்கங்கள் ஏன் என்று ஆராய்ந்தறிவது அவசியமாகும்.
டிசம்பர் 13 அன்று நாடாளுமன்ற மக்களவையின் பார்வையாளர் மாடத்திலிருந்து இரு நபர்கள் கைகளில் மஞ்சள் நிற புகை நிரம்பிய குப்பிகளுடன் தாவிக் குதித்து , நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டிருக்கின்றனர். இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் ஓர் அறிக்கை தாக்கல் செய்து அதன்மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரி வந்தார்கள். இது மிகவும் நியாயமான மற்றும் சரியான கோரிக்கையேயாகும்.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மீறல் மிகவும் மோச மான முறையில் நடந்திருப்பது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கு உரிமை உடையவர்க ளாவார்கள். ஆனால் எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு உள்துறை அமைச்சர் செவிசாய்க்கவில்லை. மாறாக அவர் அதன்பின்னர் ஓர் ஊடகத்தில் இந்த நிகழ்வு குறித்து சில கருத்துக்களைக் கூறியிருந்தார். இது நாடாளு மன்ற உறுப்பினர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. டிசம்பர் 18 அன்று, மக்களவையைச் சேர்ந்த 13 உறுப்பினர்களும், மாநிலங்களவையைச் சேர்ந்த ஒருவரும் இக்கோரிக்கையை எழுப்பியமைக்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்தும் இடைநீக்கங்கள் தொடர்ந்தன.
தேர்ந்தெடுத்த மக்களின் கருத்துக்களை கேட்கமறுப்பது
எதிர்க்கட்சிகளிடம் முரட்டுத்தனமான அணுகு முறையைப் பின்பற்றுவது என்பது மோடி அரசாங்கத்தின் வழக்கமாகவே இருந்து வருகிறது. இது, நாடாளுமன்ற நடத்தை விதிகளை மீறி எதிர்க்கட்சிகளைத் திரும்பத் திரும்ப அது அவமதித்து வருகிறது. ஆளும் கட்சியின் உத்தர வுக்கிணங்க, மக்களவைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவரும் எதிர்க்கட்சியினரை இடைநீக்கம் செய்வது கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்திருக்கிறது. 2014க்குப்பின்னர், முந்தைய கூட்டத்தொடர் வரையிலும் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல சமயங்களில் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவற்றில், 23 பேர் சென்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது இடை நீக்கம் செய்யப்பட்டார்கள். இப்போது அந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
இதனைப் பயன்படுத்திக்கொண்டு இப்போது அரசாங்கம் மூன்று குற்றவியல் சட்ட முன்வடிவுகள் போன்ற முக்கியமான சட்டங்களை எதிர்க்கட்சியினரின் விவாதம் மற்றும் கருத்துக்கள் எதையும் பெற்றிடாமலேயே நிறைவேற்றிடும். (21ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றிவிட்டது.)
நாடாளுமன்றத்திலிருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை இடைநீக்கம் மூலமாக நீக்குவதென்பது சம்பந்தப்பட்ட உறுப்பினரின் குரலை நசுக்குவ தோடுமட்டுமல்லாமல், அவரைத் தேர்ந்தெடுத்த மக்களின் கருத்துக்களைக் கேட்கமுடியாதவாறும், கேள்விகளைக் கேட்க முடியாதவாறும் பறித்திடும் செயலுமாகும்.
நாடாளுமன்றத்தை இழிவுபடுத்துவது - அதிகாரத்தை குறைப்பது
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான தாக்குதல் என்பது நாடாளுமன்றத்தை இழிவுபடுத்துவது மற்றும் அதன் அதிகாரங்களை வெட்டிக் குறைப்பதற்கான ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியேயாகும். நாடாளுமன்றக் குழுக்களினால் நுண்ணாய்வு எதுவும் செய்யப்படாமல் எப்படி அவசரகதியில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று நாம் பார்த்து வருகிறோம். நாடாளுமன்றக் குழுக்களுக்குள்ளும்கூட, விவாதங்களும், எதிர்ப்புக் குரல்களும் வெட்டிக் குறைக்கப்படுவதைப் பார்த்து வருகிறோம். நாடாளுமன்றம் கூடும் நாட்களின் எண்ணிக்கையே கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் நாட்களில் பல சமயங்களில் பிரதமரே நாடாளுமன்றத்திற்கு வரவேண்டியது அவசியம் என்று கருதிடவில்லை.
தீய அறிகுறி
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்டிருப்பது நாடாளுமன்றத்திற்கான ஒரு தீய அறிகுறியாகக் குறிப்பிடப்படுகிறது. இது வெறுமனே கட்டிட மாற்றம் மட்டுமல்ல, நாடாளுமன்ற நடைமுறை மற்றும் அதன் சாராம்சமே புதிய கட்டிடத்தில் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. கட்டிடத்தின் உச்சியில் உறுமும் அசோகரின் சிங்கங்கள், மக்களவையின் அறைக்குள்ளே (chamber) கேலிக்குரிய விதத்தில் செங்கோல் நிறுவப்பட்டிருத்தல் அங்கே இருந்துவந்த துணைப் பொருட்கள் மாற்றப்பட்டிருப்பது போன்ற செயல்கள், நாடாளுமன்றத்தையே ஆளும் கட்சியின் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்பாக மாற்றுவதற்கான நடவடிக்கையேயாகும். இவ்வாறு நாடாளுமன்ற ஜனநாயகத்திலிருந்து தேர்தல் மூலம் எதேச்சதிகார ஆட்சியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதையே, நாடாளுமன்றம் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதையே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
டிசம்பர் 20, 2023
- தமிழில்: ச.வீரமணி