india

img

‘ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களும் மோடி அரசை வீழ்த்துவார்கள்!’

இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள், சமத்துவமின்மை, சமூக அநீதி, நிலப்பிரபுத்துவ அடக்கு முறை  மற்றும் அரசியல் பாகுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஒடுக்கு முறையால் தலித் மக்கள்  கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சமத்துவம் மற்றும் நீதி கேட்டு தலித் உரிமைகள் ஒருங்கிணைப்பு குழு தலைமையில், தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி (டிஎஸ்எம்எம்) தலித் அதிகார் மஞ்ச், தலித் அதிகார் அந்தோலன் மற்றும் பல இடதுசாரி அமைப்புகள் அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை (டிசம்பர் 4) தில்லி ஜந்தர் மந்தரில்  போராட்டம் நடத்தினர்.

“பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்கள் மிகவும் அதிகரித்துள்ளன; தலித் மக்களுக்கான சட்ட உரிமைகள் அழிக்கப்பட்டு வருகின்றன; மேலும் மோடி ஆட்சிக் காலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் மிக கவலைக்குரிய வகையில் அதிகரித்துள்ளன; ஆளும் அரசு மற்றும் சட்டப்பாதுகாப்பின் கீழ்  இருந்து கொண்டு நடத்தப்படும் குற்றங்கள், எல்லைகளைக் கடந்து விட்டன; இளம் பெண்களும் குழந்தை களும் மிகப்பெருமளவில் பாதிக்கப்படு பவர்களாக உள்ளனர்.  பெண்களை பாதுகாப்போம் என்று கூறும் இந்த ஆட்சியில் பாலியல் குற்றவாளிகளான அமைச்சர்களும் நாட்டுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் சுதந்திர மாக வலம் வருகின்றனர்” என இப்போராட்டத்தில் பேசிய தலைவர்கள் சாடினர்.

இப்போராட்டத்தின் நிறை வாக, நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களி லும் தலித் மக்கள் சொத்துரிமைகளை  பெறுவதற்கும் ,அந்த சொத்துக்களை  பயன்படுத்துவதில் சமமான பங்கை உறுதிபடுத்துவதற்கும்  சட்டங்கள் இயற்றப்பட்டு கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

கையால் மனிதக் கழிவுகளை துப்புரவு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த வேண்டும், கையால் சுத்தம் செய்வதற்கு முன்னுரிமையை ரத்து செய்ய வேண்டும், அதை பின்பற்றாதவர்களை  சட்ட நட வடிக்கை எடுத்து தண்டிக்கப்படவேண்டும்;

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை எந்த நிபந்தனை களும் தடைகளும் இல்லாமல் முறை யாக செயல்படுத்தப்பட வேண்டும். நாடு  முழுவதும் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் அத்திட்டத்தில்  வேலை  நாட்களை ஒவ்வொரு ஆண்டும் 200 நாட்களாக உயர்த்தி, நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும்.பணியின் போது விபத்து ஏற்பட்டால் முறையாக அரசு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

எஸ்சி/எஸ்டி  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கூறி இந்த போராட்டம் வலியுறுத்தியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதரா பாத்தில் நடைபெற்ற தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக பெறப்பட்ட 60 லட்சம் கையெழுத்துக்கள்  அடங்கிய மனுவும் ஒப்படைக்கப்பட்டது.  

அமைப்பின் பொது செயலாளர் ராமச்சந்திர தோம் உரையாற்றும் போது, ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்வரும் தேர்தலில் பாஜக வை வீழ்த்துவார்கள் என்று சூளுரைத்தார். இந்த போராட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தள நாடாளுமன்ற  உறுப்பினர் பேரா. மனோஜ் ஜா மற்றும் சிபிஐ (எம் ) நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர்.  பிரிட்டாஸ் உரை யாற்றும் போது, நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்; விவசாயிகள், தலித்துகள் உரிமைக்காக  நாங்கள் நாடாளுமன்றத்திலும் நாடாளு மன்றத்திற்கு வெளியிலும் உங்களோடு இருந்து  போராடுவோம் என்றார்.